Saturday, November 09, 2013

பேஸ்புக்கில் டைம்லைன் அத்துமீறல்கள் : தடுப்பது எப்படி !!

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 7)

ங்கள் பேஸ்புக் டைம்லைனை ஓபன் செய்து பார்க்கிறீர்கள் !நீங்கள் போடாத போஸ்ட்கள் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத போஸ்ட்கள்,உங்களை அவமானம் செய்கிற மாதிரியான போஸ்ட்கள் உங்கள் டைம்லைன் முழுக்க நிறைந்து கிடக்கின்றன.,இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?...

 பிறர் நம் டைம்லைனில் பகிரும் விசயங்கள் நல்ல விசயங்களாக இருப்பின் பிரச்சினையே இல்லை, ஆனால் நம் நன்பர்கள் நம்மை கேலியாக சித்தரித்துப் போடும் புகைப்படங்கள்,கமென்ட்கள் இந்த மாதிரி வகையறாவில் வருகிற இன்னபிற விசயங்களை அவர்கள் நம் டைம்லைனில் போஸ்ட் செய்யும் போது அது நம் நன்பர்கள் பட்டியலில் உள்ள சகலருக்கும் மற்றும் நம் டைம்லைனை பார்வையிடும் எல்லா நபர்களுக்கும் காட்டப்படும் !,

 சில சமயங்களில் நாம் நமது டைம்லைன் சுவரை (Timeline Wall) திறந்த நிலையில் வைத்திருக்கும் போது அது சில எருமைகளுக்கு முதுகு சொறியும் இடமாகவும் மாற வாய்ப்புள்ளது.

சரி.., இந்த பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா?


இந்த பிரச்சினைக்கு தீர்வளிக்கும் விதமாக facebook -ன் Timeline and Tagging செட்டிங்க்ஸ் உதவுகிறது.

படி:1 உங்கள் பேஸ்புக்கில் "கியர்" படத்தை க்ளிக்கி settings க்குள் நுழைந்து கொள்ளுங்கள் (காண்க: படம் 1)
படம் 1 செட்டிங்க்ஸ் செல்லுதல் 
படி:2 பின் இடதுபுறம் இருக்கும் பட்டியலில் Timeline and Tagging என்றிருக்கும் ஆப்சனை க்ளிக் செய்யவும்.



படி3: இப்போது உங்களுக்கு கீழுள்ள படத்தில் உள்ள மாதிரி செட்டிங்க்ஸ் பக்கம் காட்டப்படும்.இங்கு தான் நாம் நமது அமைப்பு மாற்றத்தை (settings change)  செய்ய இருக்கிறோம்.

  
 இதன் தமிழ் வடிவத்தினை கீழுள்ள படத்தில் தந்துள்ளேன், விளக்கம் இன்றியே விளங்கிக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். (விளக்கம்  வேண்டின் தயங்காது கமென்டிலோ, மெயிலிலோ கேளுங்கள்.)




இந்த செட்டிங்க்ஸ் மூன்று வகையாக பிரிக்கப்படிருக்கிறது.

பிரிவு 1 :

இதில் மூன்று விசயங்களை அவதானிக்க முடியும்:

  1. "who can post on your Timeline " பிரிவில் நீங்கள் உங்கள் நன்பர்களையோ ,அல்லது only me ஆப்சனையோ தேர்வு செய்ய முடியும், only me கொடுத்தீர்கள் என்றால் யாரும் உங்கள் டைம்லைனில் போஸ்ட் போட முடியாது,போஸ்ட் இட முயல்பவர்களுக்கு பேஸ்புக் "இவர்கள் டைம்லைனில் போஸ்ட் செய்ய இயலாது" என அறிவிப்பு காட்டும்

  1. Friends என்று தேர்வு செய்து, அதன் கீழுள்ள   review ஆப்சன் "off" (Disable) என்று கொடுத்தால் ,உங்கள் நன்பர்கள் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டும் உங்கள் டைம்லைனில் போஸ்ட் இட முடியும்

  1. Friends என்பதை தேர்வு செய்து விட்டு ,அதன் கீழுள்ள review ஆப்சன் "on" (Enable) என்று கொடுத்தால்.உங்கள் நன்பர்கள் டைம்லைனில் சேர்க்கும் விசயங்கள், நேரடியாக உங்கள் டைம்லைனில் காட்டப்படாது, அவை உங்களின் உத்தரவிற்காக காத்திருக்கும், நீங்கள் "டைம்லைனில் காட்ட" அனுமதி கொடுத்தால்,அது டைம்லைனில் போஸ்ட் ஆகும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டும் காட்டப்படும்.( இந்த ஆப்சன் தான் எனது Choice ).





உங்கள் நன்பர் டைம்லைனில் செய்த போஸ்ட்கள்,நேரடியாக காட்டப்படாது,உங்களுக்கு "Notifications" காட்டப்படும் . அதே மாதிரி நீங்கள் பின்வரும் முறையிலும் உங்கள் நட்புகள் செய்துள்ள "டைம்லைன் போஸ்ட்களை" பார்க்க முடியும்.

படி1: டைம்லைனிற்குள் நுழைந்து கொள்ளுங்கள்
படி2: பின் Update info அருகில் இருக்கும் Activity Log ஐ க்ளிக்குங்கள்




படி3:பின் Timeline Review ஆப்சனை க்ளிக்கவும்.. இங்கு உங்கள் நண்பர்கள் ,உங்கள் டைம்லைனில் செய்த போஸ்ட்கள் காட்டப்படும்...




பிரிவு 2 :

இங்குள்ள இரண்டு கேளிவிகளுக்கும் "Only me " கொடுத்துக்கொள்வது நல்லது.

பிரிவு 3 :

  • பிறர் உங்கள் மீது "Tag" செய்யும் படங்கள் உங்கள் டைம்லைனில் உடனடியாக போஸ்ட் செய்யப்படாதிருக்க இந்த ஆப்சனை "On " என்று வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்த இரண்டு ஆப்சன்களுக்கும் "Friends" என்று இருப்பதில் பிரச்சினை ஏதும் இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியவை : (ஒரு சின்ன Recap)


விவரங்கள் தெளிவாக தெரியாவிடில் படத்தை பெரிது செய்து கொள்க.
 வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்

தொடரின் பிற பாகங்கள்:
1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3  எசரிக்கைபேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகினறன
4.பாகம்-4  நன்பர்கள் ஜாக்கிரதை
5.பாகம்-5 பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!

 

Post Comment

Tuesday, November 05, 2013

ஆயிஷா

புத்தகக் குறிப்புகள்-2



ஆயிஷா ...
இந்த சின்னப்பெண் என்னை  பலமாகவே அடித்திருந்தாள், அவளது அறிவால்,சிந்தனை வீச்சால்,கேள்விகளால்.

 பார்க்கும் எதையும் தன் அறிவுப் பார்வையால் துளைத்தெடுக்கும் அசாத்திய குழந்தை அவள்.,

 மாணவர்களின் சொந்த அறிவை, சிந்திக்கும் திறனை,கேள்வி கேட்கும் அறிவு தாகத்தை அவமானப்படுத்தி அமரவைக்கும் ஆசிரியர்களை நீங்கள் உங்கள் பள்ளிக்காலங்களில் சந்தித்திருக்கலாம், இன்றும் கூட மாணவர்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.(அதிர்ஷ்டவசமாக மாணவர்களின் மனம் புரிந்து,அவர்களின் அறிவை மதித்து அவர்களை சக உயிராக நடத்தும் சில நல்ல ஆசிரியர்கள் சிலருக்கு வாய்க்கிறார்கள்.)

ஆயிஷாவுக்கும் அப்படித்தான் பிரம்படி பிரயோகம் மூலம் அவளது அறிவாற்றலுக்கு அணை போடும் ஆசிரியைகள் தான் அவளுக்கு அதிகமாக வாய்த்திருந்தார்கள், கொடுமைக்கார ஆசிரியைகளுக்கு மத்தியில் அவளின் கேள்விகளுக்கு காது கொடுக்கவும்,அவள் வாங்கும் அடிகளுக்கு ஆறுதல் சொல்லவும்
ஆயிஷாவுக்கென்று ஆறுதலாக ஒரே ஒரு ஆசிரியை ,கிடைக்கிறார்... ஆயிஷாவை வாசிக்கிற நமக்கும் ஆறுதலாய்.,

 இந்த வீணாய்ப்போன கல்வி முறையை எனக்கு கொஞ்சம் கூட பிடித்ததே இல்லை, கதைப்புத்தகங்கள் போலவோ, இன்னபிற அறிவியல்,வரலாறு புத்தகங்கள் போலவோ பாட புத்தகங்கள் சுவரசியமாக ஏன் இருப்பதில்லை என என் பள்ளிக்காலங்களில் இந்த ஆயிஷாவைப் போலவே நானும் குழம்பியிருக்கிறேன், சில ஆங்கில புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து அர்த்தம் புரியாமல்,புத்தகத்தைவிட டிக்சனரியை அதிகமாக புரட்டிய நினைவுகள் என் நினைவில் இன்னமும் இருக்கின்றன.

  இரவல் அறிவை மூட்டைகட்டி சுமக்கவைத்து ,சிந்திக்கும் திறனை மழுங்கடித்து,மனப்பாடம் செய்து அப்படியே எழுதுபனுக்கு முழு மதிப்பெண் போட்டு,...
 இப்படியாக சிறகுகளை வெட்டிவிட்டு கயிறுகட்டி உயரத்தில் ஏற்ற முயலும் முட்டாள் தனங்கள் தான் நம் கல்விமுறையில் நிறைய இருக்கிறது. இந்த கல்விமுறையினால் படிப்பு என்பது வேலை வாங்குவதற்கான அத்தாட்சி பத்திரம் என்பதாகவே மாற்றப்பட்டிருக்கிறது.

 இந்த கதையின் ஒரு இடத்தில் அடி வாங்கிய தழும்புகளுடன் தனக்கு அதிர்ஷ்டவசமாக,ஆறுதலாக கிடைத்த அந்த அறிவியல் ஆசிரியையிடம் ஆயிஷா கேட்கிறாள்....
" மிஸ் இன்னைக்கு கெமிஸ்ட்ரி பேப்பர் கொடுத்தாங்க,மார்க் சரியா போடலையேனு கேட்டேன்... சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம்,நோட்ஸ்ல உள்ளத அப்படியே எழுதணுமாம்,நோட்ஸ்லயே தப்பா இருந்தா என்ன மிஸ் பண்றது."
இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் சிக்கி அடி வாங்கி,அடிவாங்கி வலி தாங்க முடியாமல் ,
 " அடிச்சா வலிக்காமல் இருக்க மருந்து இருக்கா மிஸ்" என்று ஆயிஷா கேட்கும் போது அவள் வாங்கிய அடிகளின் வலி நமக்குள்ளும் வலிக்கிறது !,

ஆயிஷாக் குட்டி வலிக்காமல் இருக்க மருந்து கண்டுபிடிக்கிறேன் என்று ஆய்வக ரசாயணங்களை கொண்டு தானே மருந்து செய்து தனக்குள் செலுத்திக்கொண்டு வலியின்றி செத்துப்போகிற போது இந்த கல்வி முறையை "பெட்ரோல் ஊற்றி கொழுத்தினால் என்ன" என்று எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது.

 ஒவ்வொரு முறை ஆயிஷாவை வாசிக்கும்போதும்... கடைசி சில பத்திகளை கடக்கிற போது துளி கண்ணீரால் எழுத்துக்களை மறைத்து விடுகிறது எனது விழிகள் .

 "புத்தக்குறிப்புகளில்" நான் நேசித்து வாசித்த புத்தகங்களில் முதலில் எந்த புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடலாம் என்று யோசித்திருந்தபோது, ஆயிஷா தான் என் முன் வந்து நின்றாள்.

 ஒரு விஞ்ஞான புத்தகத்திற்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்ற தலைப்புடன் ஆரம்பமாகிறது புத்தகம்.
 பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் எந்திரமாக இருக்கும் எண்ணற்ற ஆசிரியைகளில் ஒருத்தியாக இருந்த அந்த சராசரி ஆசிரியையை ,புத்தகம் எழுதும் அளவுக்கு மாற்றியிருக்கிறாள் ஆயிஷா.

 ஆங்கிலத்தில் வரும் அறிவியல் நூல்களை புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறது, சில இடங்கள் புரிய மாட்டேன் என்கிறது.. தமிழில் அறிவியல் நூல்கள் வந்தால் நன்றாக இருக்கும், "மிஸ் நீங்க ஏன் இது மாதிரி அறிவியல் புத்தகங்களை தமிழில் எழுதக்கூடாது"  என்ற ஆயிஷாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக,
 தான் எழுதிய 12 அறிவியல் புத்தகங்களுக்காக தன்னை உருவாக்கிய  ஆயிஷாவின் அறிமுகத்தோடு அவர் எழுதிய முன்னுரையே "ஆயிஷா குறுநாவல்" (அதிகபட்சம் அரை மணியில் படித்துவிடமுடியும்).

 விஞ்ஞானமற்ற முறையில் விஞ்ஞானத்தை சொல்லிக்கொடுக்கும் நம்  மடத்தனம்,மாணவர்களின் அறிவுக்கு ஆசிரியர்கள் தரும் அவமானங்கள் மற்றும் அடிகள்,டியூசன் சம்பிரதாயம்,ஸ்டாப் ரூம் அரட்டைகள், என பள்ளிக்கூடங்களை பலிகூடங்களாக மாற்றி வைத்திருக்கும் இந்த கல்விமுறையினையும்,பெண் பிள்ளைகளுக்கான கல்வி பற்றிய நம்மவர்களின் கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளாள் ஆயிஷா !

 இந்த ஆயிஷா உங்கள் நினைவலைகளில் நீந்தி உங்களை பள்ளிக்காலம் நோக்கி அழைத்து செல்லக்கூடும், அவளது கேள்விகளால் நிறைந்த உலகத்தை உங்களுக்குக் காட்டி உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும், நீங்கள் சந்தித்த ஏதோ ஒரு ஆயிஷாவை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும்..

ஆயிஷா சில குறிப்புகள்:

இந்த ஆயிஷாவிற்கு சாகா வரமளித்தவர் ரா.நடராசன்  (புத்தகம் வெளியான ஆண்டு: ). இந்த குறுநாவலுக்குப்பின் இவர் பெயர்  "ஆயிஷா நடராஜன் " என்றே மாறிப்போகும் அளவுக்கு இவரை சகலருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்,இவர் அறிமுகப்படுத்தி வைத்த அந்த குட்டிப்பெண் ஆயிஷா.

இந்த புத்தகம் உலக அளவில் 8 மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளது,பதினேழு பதிப்பகங்கள் ஆயிஷாவை புத்தகமாக செய்துள்ளன. 7 தன்னிகர் கல்லூரிகள்( Autonomous) ,மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் ஆயிஷா பாடப்புத்தகமாக்கப்படுள்ளாள், இந்த கதை குறும்படமாகவும் (short film)  எடுக்கப்பட்டுள்ளது . ஆசிரியர் பயிற்சி வகுப்புகளின் போது இந்த ஆயிஷா கதையும் ,குறும்படமும் பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சியின் பகுதியாக இருக்கிறது.

சில கல்லூரி,பல்கலைகழகங்களில் ஆயிஷாவின் கதை பாடப்புத்தகமாக இருக்கிறது அல்லவா ! (என் தங்கையின் கல்லூரியிலும் ஆயிஷா பாடப்புத்தமாக இருக்கிறாள்.இந்த வாரம் பரிட்சையாம் !) இதை நினைக்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது,கல்வி முறையின் குறைகளைச் சுட்டிக்காட்டி கல்வி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று உருவாக்கப்பட்ட "ஆயிஷா" வை பாடமாக்கி அவள் கதையை படித்து வரச்சொல்லி வற்புறுத்தி, பரிட்சை எழுத சொல்லி மதிப்பெண் போடும் இந்த மாதிரி ஐடியாவெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சானோ !

பிற்குறிப்புகள்:

ஆயிஷா குறும்படம்:





இவரது வலைப்பூவில் ஆயிஷா மின்னூல் இலவச தரவிரக்கம் செய்துகொள்ளும் வகையில் கிடைக்கிறது.


 

Post Comment