Sunday, December 03, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 3

அத்தியாயம் – 0

எலக்ட்ரானைத் தேடி ...

கிமு 450 ,

கிரேக்க அறிஞர் லியூசிப்பஸ் (Leucippus )  ஒரு கல்லை எடுத்து கையில் வைத்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தார். “இந்தக் கல்லை உடைத்தால் சிறுசிறு கற்கள் கிடைக்கும், அதையும் உடைத்தால் மணல் போன்ற துகள்கள் கிடைக்கும், அந்த துகள்களையும் மேலும் மேலும் உடைத்துக்கொண்டே போனால்... முடிவில், என்னக் கிடைக்கும் ? ”.
அந்தக் கல்லை அடித்து நொறுக்க ஆரம்பித்தார், அந்த மணல் போன்ற மிகமிகச்சிறிய துகளைப் பார்த்தபடி ஒரு முடிவுக்கு வந்தார்.
ல்யூசிப்பஸ் (leucippus ,கிமு 450)

 “எந்தவொரு பொருளையும் உடைத்துக்கொண்டே போனால் முடிவில் உடைக்கவே முடியாத ஒரு பொருள் கிடைக்கும், அதாவது உலகில் உள்ள எல்லாப்பொருட்களும் உடைக்க முடியாத இப்படியான இந்த சிறுசிறு துகள்களின் இணைவில் உருவானவை தான்” என.
தான் யோசித்துக் கண்டறிந்த இந்த உண்மையை லியூசிபஸ் தனது சீடர்களுடன் அமர்ந்து விவாதிக்கலானார்.
டெமாக்ரிடஸ் (கி.மு 460 – கி.மு. 370) 
அவரது சீடர்களுள் ஒருவரான டெமாக்ரிடஸ் (Democritus, கி.மு 460 – கி.மு. 370) என்பவரை இந்த சிந்தனை அதிகம் பாதிக்கிறது, பிரிக்க முடியாத அந்த இறுதித் துகளை டெமாக்ரிடஸ் உடைக்க முடியாத பொருள் என்று கிரேக்க மொழியில் அர்த்தம் வரும் வகையில் A-TOM-OS என்று பெயரிடுகிறார்.

குருவை மிஞ்சும் சிஷ்யனாக அவர் இந்த கருத்தை மேலும் யோசித்து அவரது சிந்தனை முடிவுகளை புத்தகமாக வெளியிடுகிறார்.

1.   உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே வெவ்வேறு வடிவிலான, வெவ்வேறு எடையிலான வெவ்வேறு குணங்களை உடைய கண்ணுக்குத்தெரியாத மிகமிகச்சிறிய ரகரகமான ஆட்டமஸ்களால் Atomos ஆனவை.
2.   ஆட்டமஸ்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
3.   ஆட்டமஸ்கள் இணையும் போது ஏற்படும் இடைப்பட்ட இடைவெளியில் எதுவும் இல்லை ,அது வெற்றிடம்.
4.   கனமான பொருட்களில் ஆட்டமஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
5.   ஆட்டமஸ்களை அவற்றின் இடவமைவுகளை மாற்றி அமைத்தால் ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றவியலும்.

எந்தவொரு பொருளையும் முடிவின்றி பிரித்துக்கொண்டே போக முடியாது, எல்லாப் பொருட்களும் பிரிக்க முடியாத மிகமிகச் சிறிய துகள்களால் ஆனவை என்று டெமாக்கிரிடஸ் சொன்ன இந்த கொள்கை  Atomism எனப்படுகிறது.

அணு பற்றி அண்டம் பற்றி ஆராய்ச்சி செய்து டெமாகிரிடஸ் 72 புத்தகங்கள் வெளியிடுகிறார். டெமக்கிரிடஸின் ஆட்டமிஸக் கருத்துக்கள் அரிஸ்டாட்டில் போன்ற அவர் காலத்திய பிரபல அறிஞர் பெருமக்கள் பலரால் ஆதரிக்கப் படவில்லை 

அந்தக் காலத்தில் புத்தகங்களை அச்சடிக்க அச்சு எந்திரங்கள் எல்லாம் கிடையாது, ஒவ்வொரு பிரதியையும் பாபிரஸ் இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதங்களில் கைப்பட எழுதி பிரதி செய்து தான் வெளியிட வேண்டும். டெமக்கிரிடஸின் கருத்துகள் பிரபலமடையவில்லை , ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் அவரது புத்தகங்கள் அதிகம் பிரதியெடுக்கப்படவில்லை. டெமாக்ரிடஸின் 72 புத்தகங்களில் ஒன்றுகூட தற்போது இல்லை.
பாப்பிரஸ் புத்தகம்

ஆனால் அவர்கூறிய அணு பற்றிய கொள்கைகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட பிற நூல்கள் மூலம் டெமக்கிரிட்டஸின் கருத்துக்கள் தற்காலம் வரைக்கும் தப்பிப் பிழைத்திருக்கின்றன.

டெமாகிரிடிஸின் கருத்துக்களை ஆதரித்தவர்களுள் மிக முக்கியமானவர் கிரேக்க அறிஞர் எபிக்யூரஸ் (Epicurus ,கி.மு 341 – கி.மு. 270.)  எபிக்யூரஸ் தனது புத்தகங்களில் டெமாகிரிடிஸின் ஆட்டமிஸ கருத்துக்களை ஆதரித்து எழுதுகிறார், 
எப்பிகியூரஸ்

எபிக்யூரஸ் கூறிய கருத்துக்களை விளக்கும் வகையில் அவரது சீடர்களில் ஒருவரான  டைட்டஸ் லுக்ரடியஸ் (Titus Lucretius, கி.மு 99- கி.மு 55 ) என்ற ரோமானிய கவிஞர்  ஆறு சிறு புத்தகங்களாக (புத்தகங்கள் = அத்தியாயங்கள்) பிரித்து,  7400 அடிகளில்  “பொருட்களின் இயல்நிலை பற்றி” (“De Rerum Natura” ) என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிடுகிறார்.
Lucretius (கி.மு 99- கி.மு 55 )

அதில் முதல் இரு புத்தகங்கள் ஆட்டமிஸம் பற்றியவை.
எபிக்யூரஸ், எழுதிய புத்தகங்களின் பிரதிகளில் சிதிலிமடைந்து சிதைந்து போன நிலையில் சிக்கிய சில பக்கங்களும் , புராதன கிரேக்க நூலகம் ஒன்றில் கிடைத்த  லியூக்ரடியஸின் முழுக்கவிதைத்தொகுப்பும்  டெமாக்கிரிடஸின் ஆட்டமிஸக்கருத்துக்களை அழியாமல் காத்தவைகளுள் முக்கியமானவைகள்.

இந்த கவிதைத் தொகுப்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு புராதான புத்தகங்களை பராமரிக்கும் நூலகங்களால் பிரதியெடுத்து பராமரிக்கப்படுகின்றன.

கி.பி.1417 –ல் டைட்டஸ் லியூக்ரடியஸின் கவிதையை Poggio Bracciolini  என்ற பழங்கால எழுத்துக்களை பராமரிக்கும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்  பிரதியெடுத்து வைக்கிறார். 

Poggio Bracciolini 


1454-ல் கட்டன்பெர்க் Guttenberg என்ற ஜெர்மானியரால் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் சிதிலமடைந்த புராதான நூல்கள் பல மறு உயிர் பெற்றன எனலாம், அவ்வகையில் டெமக்கிரடஸின் ஆட்டமிஸ கருத்துக்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட லுக்ரடியஸின் “பொருட்களின் இயல்நிலை பற்றி” என்கிற கவிதைத்தொகுப்பு 1473 ல் அச்சிலேறுகிறது.

"பொருட்களின் இயல்நிலைப் பற்றி"  அச்சடிக்கப்பட்ட பிரதி 

அச்சிலேறிய பிறகு கிரேக்க அறிஞர்கள் சிந்தனையில் மட்டும் ஆட்டம்போட்ட ஆட்டமிஸம் என்கிற அணு பற்றிய சித்தாந்தம் உலகின் பிற தேசத்தினராலும் படிக்கப்படுகிறது.

                                                              கற்போம்



 

Post Comment

No comments:

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....