Monday, February 06, 2017

"சகிக்கல" ஆட்சியில் தமிழகம்...


அன்பார்ந்த தமிழினமே!

நக்கலும் நையாண்டியுமாக பேசிச்செல்வதிலும்,பேஸ்புக்கில் கமென்ட் இடுவதிலும்,மீம்ஸ்,வீடியோ என காமெடி செய்து பகிர்வதிலும்,ரசிப்பதிலும் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நிகரென இந்திய தேசத்தின் எந்த மாநிலத்தவரும் இல்லை, உலகின் எந்த நாட்டினரும் இல்லை என சர்வ நிச்சயமாக நம்புகிறேன்.

"இடுக்கன் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வதஃதொப்ப தில்"

என்ற அய்யனின் வாக்குப்படி செயல்படுகிறோமா , இல்லை இது இப்படித்தான் என சர்வசாதரணமாக எடுத்துக்கொண்டு நகரும் வகைக்கு மரத்துப்போன மனிதர்களாக ஆக்கப்பட்டு விட்டோமா !

"பீட்டாவை தடை செய்" "ஜல்லிக்கட்டு வேண்டும்" என கொதித்தெழுந்த சிங்கத் தமிழினமே , புரட்சிக்கு புதிய இலக்கணம் செய்து அறப்போராட்டமாக ஆர்ப்பாட்டம் செய்த வீரத் தழினினமே ! இலங்கையில் நம்மவரை சித்திரவதை செய்தபோது சேர்ந்தழுத அன்புத் தமிழினமே !

உரிமைகள் பறிக்கப்பட்டது குரல் கொடுத்தோம், உண்மைகள் மறுக்கப்பட்டது குரல் கொடுத்தோம். இது குரல் கொடுப்பதற்கான நேரம் என நம்புகிறேன்,உண்மைக்காக ,உரிமைக்காக உரக்கக் குரல் கொடுப்போம் என நம்புகிறேன்.

உலகின் அறிவார்ந்த இனம் என அறியப்பட்ட இனம், அறியப்பட்டுக்கொண்டிருக்கும் இனம் ஆள்வதற்கு ஆளின்றி நிராதராவாக நின்றுகொண்டிருக்கிறது.

வெட்கம்,வேதனை,வருத்தம்

மக்களால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிக்குப்பெயர் தான் மக்களாட்சியாம். எம் மக்கள் ஒட்டுமொத்தமாக வேண்டாமென சேர்ந்தொதுக்கும் ஆட்சி எப்படி எங்களுக்கு மக்களாட்சி ஆகும்.

எண்ணம் தான் புரட்சியின் விதை, ஒரே எண்ணம் ஒன்றுபோலான எண்ணம்,ஒன்றுபட்ட எண்ணம். நாம் எண்ணத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என நம்புகிறேன், ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் நம்புகிறேன்.

பேஸ்புக்கும், வாட்சப்பும் அமெரிக்க சந்தைப்பொருட்கள் தான், ஆனால் அவை கருத்துப்பறிமாற்றத்திற்கான சமூக வலைத்தளங்கள்., இவற்றைக்கொண்டு என்ன செய்துவிட முடியும் நக்கலும்,நையாண்டியும் செய்து மீம்ஸ்சும்,வீடியோக்களும் உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடியும், ஸ்டேட்டஸ் போட்டு , செல்பி எடுத்து லைக்குகள் வாங்க முடியும், பொழுதுபோக்க முடியும் ,அதே சமயம் , சமூகத்தின் அவலங்களை அடித்துநொறுக்கி அதை பழுதும் பார்க்க முடியும்.ஒத்த கருத்துடைய நபர்களை ஒன்றிணைத்துப் புரட்சியும் செய்ய முடியும்.

சமீபத்தில் (2011 ல்) எகிப்தின் துனீஷிய தேசத்திலே சர்வதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெகுண்டெழ காரணமாக இருந்த விதை யூட்யூபில் பதியப்பட்டு,பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒற்றை வீடியோ தான் . மக்களை ஒன்றினைத்து புரட்சி செய்ய துணையாய் நின்றது பேஸ்புக் தான்.

அறிவார்ந்த தமிழினமே ! எதை செய்தால் மாற்றம் சாத்தியமோ அதை செய்ய துணிந்தெழு. சிரித்துவிட்டு நகர்வதிலும்,அழுது புலம்புவதிலும் பயனில்லை,பலனில்லை.

மீம்ஸ்களும் ,ஸ்டேட்டஸ்களும் தவறில்லை, நக்கல்,நையாண்டி,காமெடி என்பதையும் தாண்டி உன் அறிவை பட்டைத்தீட்டு ,மாற்றம் சித்திக்கும் என மனதாற நம்பு., ஒன்றுபட்ட மனங்களை ஒன்று திரட்டு ஒன்றாய் போராடுவோம் !

இது மக்களாட்சி, நம் தேசம் ஜனநாயக தேசம், என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என தீர்மாணி, அறிவையையும் உணர்வையும் சரியாக கையாண்டு தீர்வு கொள் !

 

Post Comment