Sunday, November 27, 2016

கலகல வகுப்பறை

கலகல வகுப்பறை
****************************
‘கலகல வகுப்பறை’ என்ற தமது அமைப்பின் மூலம், வகுப்பை எப்படி கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்திவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு வரும் முதுகலை ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு, இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
1) முதலில் ‘கலகல வகுப்பறை’ என்ற இந்த தலைப்புக்காக.
2) இரண்டாவதாக, வகுப்பறைகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே அரிது. அடுத்தகட்டமாக, தமது வகுப்பறைகளை கலகலப்பாகக் கொண்டுசெல்ல முயற்சிப்பது என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலான அரிய செயல். தமது வகுப்பறைகளையும் கடந்து, ஆர்முள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களது வகுப்பறைகளையும் கலகலப்பாக மாற்றுவதற்காக அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்பது எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றது.
ஒரு பள்ளியில் ஆகச் சிறந்த வகுப்பறையாக ஒரு வகுப்பறையைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது வழங்குவதற்காக ஒரு குழுவினரோடு அந்தப் பள்ளிக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த வகுப்புக்கு அந்த விருது போய்ச் சேரும் எனில், அந்தப் பள்ளியிலேயே மிகவும் அமைதியான வகுப்பறைக்காகத்தான் அது இருக்கும். இது குறித்து பேசும்போது, அந்தக் குழுவைச் சார்ந்த யாரோ ஒருவர், அந்த வகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைப் பற்றிப் பேசும்போது, தன்னையும் அறியாமல் இப்படி சொல்லிவிடவும் கூடும் -
‘இப்படி ஒரு அமைதியை நான் எங்கும் பார்த்ததில்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி’
உண்மையும் அதுதான். எந்த வகுப்பறை அமைதியாக இருக்கிறதோ அதுதான் மிக நல்ல வகுப்பறை என்றுதான் இன்றைய பொதுப்புத்தி எடுத்துக்கொள்கிறது. அமைதிதான் சிறப்புக்கான அளவுகோல் என்று கொள்வதெனில், இந்த வகுப்பறையை விடவும் இந்த ஊரின் மயானம் மிக அமைதியாக இருக்குமே. அமைத்திக்குதான் விருது என வைத்துக்கொண்டால், அந்த விருதை மயானத்துக்கு அல்லவா கொடுக்க வேண்டும்.
வகுப்பை அமைதியாக வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார். ‘அவர் வகுப்பில் இருந்தால் அந்த வகுப்பு அமைதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்’ என்று அதை சிலர் நியாயப்படுத்தவும் செய்வார்கள். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு குணம் என்றால், மயானக் காவலர் இதைவிட பேரமைதியை கட்டிக் காக்கிறாரே. ‘எனில், ஆசிரியரைவிடவும் மயானக் காவலர் அமைதியைப் பேணுவதில் சிறந்தவர்தானே’ என்று கேட்டால், ‘பிணங்கள் பேசாதே’ என்று பதிலுரைக்கக்கூடும். பிணங்கள்தான் பேசாதே என்றால், அதே குணத்தை மாணவர்களிடமும் எதிர்பார்ப்பது தவறல்லவா?
இன்னும் சரியாகச் சொல்வதெனில், மாணவர்களைப் பேசவிடாமல் ஒரு ஆசிரியர் பார்த்துக்கொள்கிறார் என்றால், அவர் இருக்கும்வரை அந்த வகுப்பு மாணவர்களைப் பிணங்களைப்போல பாதுகாக்கிறார் என்றுதானே பொருள். அது குற்றமல்லவா?
தனது வகுப்புகளை அமைதியாகப் பராமரிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களே மிகச்சிறந்த ஆசிரியர்களாகப் பார்க்கிறார்கள்தான். தங்களது பிள்ளைகளை நாற்பத்தி ஐந்து நிமிடம் பிணங்கள் மாதிரி வைத்திருக்கும் ஒரு நபரைக் குற்றவாளியாகப் பார்க்காமல், ஆகச் சிறந்த ஆசிரியராகப் பார்ப்பதற்கான காரணம் எளிதானது. தம் பிள்ளையைப் பிணம் மாதிரி நடத்துகிறார் என்கிற உண்மையை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தமது வகுப்பை அமைதியாகப் பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிற ஆசிரியரும், தமது வகுப்பில் பிள்ளைகளைப் பாடம் கவனிக்கும் பிணங்களாக வைத்திருக்கிறோம் என்கிற உண்மையை முழுமையாக உணராதிருப்பதே அவர் அப்படி நடந்துகொள்வதற்குரிய காரணமாக இருக்கிறது.
இவ்வாறு விவாதத்தைத் தொடங்கும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஐயம் கிளம்பும். வகுப்பிலே மாணவர்களைப் பேச அனுமதித்தால், அது கற்றலை சேதப்படுத்தாதா?
இல்லை, அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்துவிடாது. எவ்வளவுதான் அறிவைப் புகட்டி அனுப்பினாலும், பிணத்தின் குணத்தோடு மாணவனை வெளியே அனுப்பினால், அவன் அறிவுள்ள ஒரு பிணமாகத்தானே இருப்பான். தான் சார்ந்த துறையில் அவன் பெற்றிருக்கும் அறிவானது, அந்தத் துறையில் அவனை மிக உச்சத்துக்குக் கொண்டுபோகவே செய்யும். தன் துறை சார்ந்த பிரச்னைகளை, சிக்கல்களை மிக எளிதாக அவனால் கையாள இயலும். ஆனால், சமூகம் சார்ந்த, மண் சார்ந்த எந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அவனது தலையீடோ பங்களிப்போ இருக்காது.
இது மாதிரியான மாணவர்களைத்தான் இங்கிலாந்து தனது காலனி நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து எதிர்பார்த்தது. இப்படி ஒரு கல்வித் திட்டத்தைத்தான் இந்தியாவில் வடிவமைக்க வேண்டும் என்று மெக்காலேவும் இங்கிலாந்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தார். அதை அச்சுப் பிசகாமல், அப்படியே இங்கிலாந்தும் வடிவமைத்துத் தந்தது. எது நடந்தாலும் கேள்வி கேட்காத, சுதந்தரம் பற்றிய சொரணை உணர்ச்சி துளியும் அற்ற, சகலமும் மரத்துப்போன இந்திய ஊழியர்களை இங்கிலாந்துக்கு ஏராளமாக இந்தக் கல்விமுறை அள்ளி வழங்கியது.
இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் இரண்டு லாபங்களை இங்கிலாந்து அனுபவித்தது.
1) இங்கிலாந்திலிருந்து அலுவலகப் பணியாளர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால், அவர்களுக்கு நிறைய ஊதியம் தர வேண்டும். அந்த வேலையை செய்யக்கூடிய ஊழியர்களை இந்தியாவிலேயே தயாரித்ததன் மூலம் குறைந்த ஊதியத்துக்கு அவர்களுக்கு ஊழியர்கள் கிடைத்தார்கள். இதன்மூலம், அவர்களுக்கு செலவு மிச்சமானது. பச்சையாகச் சொல்லப்போனால், அவர்களது லாபம் அதிகரித்தது.
2) குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு மட்டுமல்ல, சுதந்தரத்தைப் பற்றியும்கூட நினைத்துவிடாத, மரத்துப்போன ஊழியர்களையும் இந்தக் கல்வித் திட்டம் இங்கிலாந்துக்குத் தந்தது.
காமன்வெல்த் போட்டிகள் நடந்தபொழுது, காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. காமன்வெல்த் என்பது இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் கூட்டமைப்பு. அதுவே ஒரு அடிமைத்தனத்தை பளிச்செனக் காட்டக்கூடிய ஒரு அமைப்பு.
சரியான, நாட்டுப்பற்றை அடித்தளமாகக் கொண்டிருக்கக்கூடிய கல்விக் கட்டமைப்பு இருந்திருக்குமானால், காமன்வெல்த் என்ற அமைப்பையே இந்த நாடுகள் நிராகரித்திருக்கும்.
நாட்டுப்பற்றை உறுதிமொழி எடுப்பதன் மூலம் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அதற்கேற்ற கல்விக் கட்டமைப்பை நாம் கட்டியாக வேண்டும். அதற்கு, இருக்கிற கட்டமைப்பை நாம் தகர்த்தெறிந்தாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இருக்கிற அமைப்பை விமர்சனத்துக்குக் கொண்டு போக வேண்டும்.
விமர்சனத்தையும் உடைசலையும் செய்யும் அதே வேளையில், சரியான மாற்றையும் ஒருசேர நாம் கொண்டு செல்ல வேண்டும்.
இதை, முற்றாய் முழுசாய் மேற்சொன்ன தோழர்கள் கையெடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இத்தகைய காரியத்துக்கான கருவிகளுள் ஒன்றாக நான் இவர்களைப் பார்க்கிறேன்.
பெற்றோர்களிடம், இந்தக் கல்விக் கட்டமைப்பு அடிமைகளையே பெரும்பாலும் உருவாக்குகிறது என்பதைக் கொண்டு போக வேண்டும். இந்தக் கட்டமைப்பிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டிய ஊழியர்கள்தான் ஆசிரியர்கள். இவர்களால் தனியாக இந்தக் கட்டமைப்பைச் செய்துவிட முடியாது. அது பெற்றோர்களும், பொதுமக்களும் முன்கை எடுக்க, ஆசிரியர்கள் கை இணைய வேண்டிய விஷயம்.
அதற்கான பிரசாரங்களை பொதுமக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.
அதேவேளை, வகுப்பறையை நல்ல மனிதர்களை உருவாக்கும் பட்டறையாக மாற்றிதர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
இதைச் செய்ய ஆசிரியர்களால் முடியும். எப்படி இதைச் செய்வது என்பதைத்தான் மேற்சொன்ன தோழர்கள் ‘கலகல வகுப்பறை’ என்ற தங்கள் அமைப்பின் மூலம் களமெடுத்து நகர்கிறார்கள். கரம் குவித்து வாழ்த்துகிறோம்.
எல்லாம் சரி, சத்தமான வகுப்பறைகள் கற்றலைக் கெடுத்துவிடாதா? ஒழுங்கீனத்தைக் கொண்டுவராதா? என்று சிலர் கேட்கக்கூடும். அவர்களுக்கு நமது பதில் இரண்டு.
1) வகுப்பறைகள் சத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல வகுப்பறைக்கான நிபந்தனை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரம், அமைதியை நிபந்தனையாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்.
2) ஒழுங்கையோ, கற்றலையோ இது ஒருபோதும் பாதிக்காது என்பதற்குக் கீழ் வரும் சம்பவத்தை உதாரணமாகத் தருகிறோம்.
தோழர் பொன்னீலன் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தபோது, ஆண்டாய்வுக்காக ஒரு பள்ளிக்குப் போகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவரும் நல்ல தோழர்கள். அனைத்து வகுப்புகளையும் முதன்மைக் கல்வி அலுவர்கள் ஆய்வு செய்வதில்லை. மாவட்டக் கல்வி அலுவலர் சில வகுப்புகளையும், உடன் வந்திருக்கும் ஆசிரியர்கள் வேறு வகுப்பகளையும் ஆய்வு செய்வார்கள். பொதுவாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத்தான் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
ஆனால், தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளியை முற்றாகப் பார்வையிடுவார்கள். அதைத்தான் தோழர் பொன்னீலன் அவர்களும் செய்கிறார். அனைத்து வகுப்புகளையும் சுற்றிக்காட்டிய தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பை மட்டும் அவருக்குக் காட்டவில்லை.
தோழர் பொன்னீலன் அவர்கள், அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்க, அதை தட்டிக் கழிப்பதில் தலைமை ஆசிரியர் குறியாக இருந்திருக்கிறார். அவரது விடாப்பிடியான கோரிக்கைக்கும், இவரது நழுவும் முயற்சிக்கும், இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்தன.
அப்படி ஒரு வகுப்பே இல்லை போலும். இல்லாத வகுப்பை கணக்குக் காட்டி, ஒரு ஆசிரியரைக் கூடுதலாக வைத்திருக்கிறார்போல. எனில், ஒரு ஆசிரியருக்கான சம்பளம் அரசுக்கு இழப்புதானே. இது நிரவலுக்கான விஷயமாச்சே என்ற அதிகாரியின் சிந்தனை, தோழருக்கும் இருந்திருக்கக்கூடும். அந்த வகுப்பு ஒரு உடைந்த கட்டடத்துக்குள் நடக்கிறது. அதைப்போய் அதிகாரியிடம் காட்டுவதா என்ற தயக்கம் தலைமை ஆசிரியருக்கு.
அழுத்தம் அதிகமாகவே, வேறு வழியின்றி அந்த வகுப்புக்கு அழைத்துப்போகிறார். போனால், ஹே என்று சத்தம், வகுப்பில். தலைமை ஆசிரியர், வகுப்பை நெறிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலில், வேகம் கூட்டினார். தோழர் பொன்னீலனோ, தலைமை ஆசிரியரை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டு, தான் மட்டும் சென்று, வகுப்பில் என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக யாரும் அறியாமல் கண்காணிக்கிறார். தலைமை ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டும், தன் நேரத்தை நொந்தபடியேயும் அங்கேயே நிற்கிறார்.
உள்ளே, ஒடிசலான மிக இளம் வயது ஆசிரியை வரைபடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு சத்தம்.
சுவரில் இந்திய வரைபடம் தொங்குகிறது. ஆசிரியர் ஒரு மாணவனை பெயர் சொல்லி விளிக்கிறார். அவனிடம், ‘நீ மும்பை போக வேண்டும். எதில் போகிறாய். ரயிலா? விமானமா?’ என்கிறார். ரயில் என்கிறான். அவனிடம் ஒரு குச்சி தரப்படுகிறது. ‘சரி, மும்பைக்கு போ’ என்கிறார். அந்தப் பையன், ‘கூ… ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு’ என்றபடியே ரயிலில் பயணித்து மும்பையைத் தொடுகிறான். ஓ என்று சத்தமிட்டுக் கொண்டாடுகிறது வகுப்பு.
அடுத்த பையன், விமானத்தில் காஷ்மீர் போனான். இன்னுமொருவன், காரில் கொல்கத்தா போனான். இப்படியே. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஊராகப் போனார்கள்.
இப்போது, அந்த வரைபடம் கழற்றப்படுகிறது. ஊர் பெயர்கள் இல்லாத வெற்று வரைபடம் ஒன்று அங்கு மாட்டப்படுகிறது.
ஆசிரியை, மும்பை போன மாணவனை இந்த முறை பைக்கில் மும்பைக்குப் போகப் பணிக்கிறார். அவனும், பைக்கை கிளப்பிக்கொண்டு போகிறான். ஆனால், மும்பைக்குப் பதில் காஷ்மீர் போகிறான். சிரிப்பால் அதிர்கிறது வகுப்பு. ‘டீச்சர், ரமேசு காஷ்மீர் போயிட்டான் டீச்சர்’ என்று வகுப்பே இரண்டு படுகிறது.
‘அவன் போன பைக் சரியில்ல. ஏண்டா ரமேசு…’ என்றவாறே, சரியான இடத்தை அவனுக்குக் கற்பிக்கிறார் ஆசிரியை. இப்படியே நகர்கிறது, ஆய்வு பற்றிய எந்தக் கவனமும் இல்லாமலே அந்த வகுப்பு. அதற்கு மேல் நிற்க முடியாதவராகத் திரும்புகிறார் பொன்னீலன். அலுவலகம் வரும்வரைக்கும் ஏதும் பேசவில்லை. அந்த வகுப்பில் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தலைமை ஆசிரியருக்குப் படுகிறது.
ஆசிரியர் கூட்டம் தொடங்கியதும், குறைகளை புன்னகையோடும் ஒரு தந்தைக்கே உரிய பாங்கோடும் அடுக்குகிறார். அதை எப்படி சரி செய்வது என்றும் ஆலோசனைகளைத் தருகிறார்.
இறுதியாக, அந்தக் குறிப்பிட்ட வகுப்பைப் பற்றிம் பேசுகிறார். ஆசிரியை எழுந்து நிற்கிறார். ‘மேப் டிராயிங் இப்படி நடத்தலாம்னு எனக்குத் தெரியாது மகளே. இப்படியே நடத்து. இப்படித்தான், கற்றல் கலகலப்பாக இருக்க வேண்டும்’ என்று பாராட்டினார்.
கற்றலை சேதப்படுத்தாமல் மேம்படுத்தக்கூடிய கலகல வகுப்புகளே இந்த நொடியின் தேவை.
தினமணி.காம் 27.11.2015


 

Post Comment

Sunday, November 20, 2016

அன்புள்ள திரைப்பட ரசிகனுக்கு

முன் குறிப்பு:

உனக்கொரு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டுமென்றெனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு குட்டி ஆசை . இதென்ன விசித்திரமாய் ஓர் ஆசை என யோசிக்க மாட்டாய் என நம்புகிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

நலம், நலமே விழைகிறேன்.,

நீ செய்த உதவிகளுக்கும், உனக்கும் நான் நிறையவே கடன்பட்டிருக்கிறேன். Thank you for being a friend of mine.

நீ அதிகமாக நேரம் செலவிடும் அந்த சில பேரின் சராசரி தான் நீ , என்றொரு வாசகம் உண்டு. அது உண்மையோ, பொய்யோ, அதை நான் நம்புகிறேன். எனக்குத்தெரிந்து என்னுடன் மணிக்கணக்கில் காலம் தெரியாமல் பேசும் நபர்களின் பட்டியலில் உனக்கொரு இடமுண்டு. அந்தவகையில் யோசித்தால் என்னில் உன் குணங்கள், வார்த்தைகள்,பேச்சு,ரசனை,சிந்தனை என்கிற வகையில் சில துளிகள் "நீ" கலந்திருக்கலாம். இந்த வினாடியில் நம் ராமேஸ்வரம் ரபி அண்ணன் சொல்லும் "நானாகிய நீ" என்கிற வார்த்தையின் அர்த்தச் செழிப்பை வியக்கிறேன், ஒருவகையில் நாம் எல்லோருமே "நாமாகிய யாரோ" தான் இல்லையா.  காதலி ,நன்பன், ரோல்மாடல், அப்பா, நடிகன் இப்படியாக... எத்தனை பேரின் சாயங்கள் நம்மில் நம்மையேயறியாமல் பூசப்பட்டிருக்கிறது.

நீ கொடுத்த "பிங்க்" திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன், எனக்கும் படம் பிடித்திருந்தது. நல்ல திரைப்படம். அருமையான வசனங்கள், நேர்த்தியான காட்சியமைப்புகள், Fantastic characterization .இதுபோன்ற திரைப்படங்கள் தற்போதைய நம் தேசத்திற்கு மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

பெண்கள் உடுத்தும் ஆடை தான் எங்களை தூண்டுகிறது, அவளின் பேச்சு எங்களுக்கு அவள் அப்படிப்பட்டவள் என நினைக்க வைக்கிறது, அவளுக்கு மது, புகைப் பழக்கம் உண்டு அதனால் அவள் ஒரு --------------, அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள் அதனால் அவள் என்னை காதலிக்கிறாள்,அழைக்கிறாள்,------------ ,--------------- என அநேக விசயங்களில்  அவளின் எண்ணங்களை நமக்கு நாமே கற்பனையாக சில பல கற்பிதங்களின் அடிப்படையில் நினைத்துக்கொள்கிறோம். அவளை தொடுவதில் தவறில்லை என தொட முனைகிறோம்.

" NO Means NO" கோர்ட் சீனில் அமிதாப் பேசும் அந்த கடைசி  வசனம் எத்தனை அழுத்தமானது, பெண்கள் பற்றிய நமது தர்க்கங்கள், சரி, தவறுகள், என்கிற கோட்பாடுகள் அத்தனையையும் தகர்த்தெரியும் வசனம். "அவள் உங்கள் தோழியாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், அடுத்த வீட்டுப் பெண்ணாக இருக்கலாம், உறவுமுறையாக இருக்கலாம், ஒரு விபச்சாரியாக இருக்கலாம்.. அவள் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் வேண்டாம் என்பது தான், NO means NO". நம் தேசத்தில் நாம் பாதுகாக்க வேண்டியது பெண்களை இல்லை ஆண்களை என்கிறது இந்த திரைப்படம்.

"மலரினும் மெல்லியது காமம்-சிலரதன்
செவ்வி தலைப்படு வார் "

என்கிறது திருக்குறள், எத்தகையதொரு சீர்த்த பண்பட்ட நாகரிகத்தினராய் இருந்த நாம் இப்படி சீரழிந்து சிதைக்கப்பட்டிருக்கிறோம் என நினைக்கையில் கோபம் தான் வருகிறது. காமம் என்பது மலரினும் மெல்லியது, சிலரதன் மெய்யறிந்து அதன் முழுப் பயனை அனுபவிக்கிறார்கள் என்கிறான் வள்ளுவன். மலரினும் மெல்லியதென மதிக்கப்பட்ட அந்த வஸ்துவை கொலை ஆயுதத்தினும் கொடியதாய் சித்தரித்து வைத்திருக்கிறோம், எத்தனை தூரம் நம் இனம் கலாச்சாரம் விட்டு பிரிந்து,திரிந்து கேவலப்பட்டு நிற்கிறது,

அக்கால பெண்மணிகள் குடிக்கவில்லை, இக்காலத்து பெண்மணிகள் குடிக்கிறார்கள், கூத்தடிக்கிறார்கள், இப்படிப்பட்டவள்களுக்கு இப்படியெல்லாம் இருக்கிறவள்களுக்கு இப்படியாகப்பட்ட நிலைதான் வரும் என வார்த்தைகளை அள்ளிக்கொண்டு விதண்டாவாதம் பேச வரும் கலாச்சார காவலர்கள் , நம் தமிழ்க் கலாச்சாரத்தில் விரலிக்கூத்து, இந்திரன் திருவிழா ,காமன் பண்டிகை என்றெல்லாம் இருந்ததையும் பெண்களும் கள்ளருந்தி களித்திருந்த கதைகள் கூறும் அகத்திணை இலக்கியங்களையும் படித்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்.

பார் ! ,எத்தனை தூரம் என்னை யோசிக்க வைத்திருக்கிறது இந்த திரைப்படம் .தேச அளவில் இந்த திரைப்படம் நிறைய விமர்சிக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.


திரைப்படங்கள் மூலம் கருத்து சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, அது சரியான மீடியம் தானா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எனக்குள் எழுகிறது. சினிமா ஒரு வெகுஜன ஊடகம் , ஒரே சமயத்தில் பலதரப்பட்ட எண்ண அலைவரிசை உள்ள நிறைய பேர் ஒரே அரங்கில் இருட்டில் பணம் கொடுத்து அமர்ந்து படம் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அந்த இருட்டறையில் ஒவ்வொரு விசயத்தை எதிர்பார்த்திருப்போம். திரைப்படங்கள் என்பவை ஒரு என்டெர்டெய்னராக இருக்க வேண்டும் என சிலர் நினைத்திருப்போம், அது கலையாம்சமானதாக இருக்க வேண்டும் என சிலர் நினைத்திருப்போம் இருசாராரையும் திருப்தி செய்யவேண்டும் என்கிற முயற்சியில் டைரக்டர் படம் காட்டவேண்டும், இல்லையென்றால் போட்ட காசை எடுக்க முடியாது. இருந்தாலும் திரைப்படங்களுக்கென சில பிரத்யேக குணாதிசயங்கள் இருக்க வேண்டும், களிப்பூட்ட வேண்டும்,கதைசொல்ல வேண்டும், தெரியாத விசயங்களை சொல்ல வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும்,சிந்திக்க வைக்க வேண்டும் அல்லது எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும். திரைப்படம் என்பது வெறுமனே காட்சிகளின் தொகுப்பு அல்ல, Slideshow ல் அடுத்தடுத்த ஸ்லைடுகளை நகர்த்துவது மாதிரி காட்சிகளை நகர்த்திவிட்டு நானும் டைரக்டர் தான் என மார்தட்டிக்கொள்ளும் மடையர்களை பார்க்கையில் சிரிப்பு தான் வருகிறது. AYM திரைப்படம் எனக்கு வெறுமனே காட்சிகளின் நகர்வாகத் தான் கண்ணில் பட்டது. நம் நன்பர்கள் சிலரிடம் படம் எப்படி என்றேன் சிலர்  ஆஹா,ஓஹோ என்றார்கள், சிலர் First half OK, second half சொதப்பல் என்றார்கள், ஒரு தடவை பார்க்கலாம் என்றார்கள்., ஒரு தடவை பார்க்கலாம் என்பதெல்லாம் என்ன மாதிரியான விமர்சனம் என புரிபட மாட்டேன் என்கிறது, அப்புறம் ஒரு திரைப்பட்த்தை First half, second half  என கூறுபோட்டு விமர்சிக்கும் கூறுகெட்ட விமர்சன கர்த்தாக்கள் எல்லாம் எந்த கிரகத்திலிருந்து வந்தார்கள் என தெரியவில்லை, நேற்று நான் சாப்பிட்ட பிரியானி, முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி நல்லா இல்லை என்று சொல்வது எத்தனை அபத்தமோ, ஒரு முழு திரைப்படத்தை பிரித்து பார்த்து விமர்சிப்பதும் அபத்தம் தான் என நான் கருதுகிறேன். இடைவேளை என்பது நம் சவுகரியத்துக்காக விடப்பட்ட்து, படத்தை கூறுபோட்டு பிரிக்கும் குறுக்குக் கோடு அல்ல என்பது எத்தனை பேருக்கு புரியும்.

விகடனில் பஞ்சு அருணாச்சலம் திரைத்தொண்டர் என்றொரு தொடர் எழுதியிருந்தார், வாசித்திருப்பாய் என நம்புகிறேன். அத்தொடரின் இறுதி வாரத்திற்கு முந்தைய வார தொடரில் " இன்று 90 % திரைப்படங்கள் தோற்பதற்கு காரணம் வெறுமனே காட்சிகளை கோர்த்து எழுதுவது தான்" என்கிறார். Absolutely right.

ஆனால் அகிரா குரோஷோவாவின் DREAMS என்று ஒரு திரைப்படம் உண்டு , காட்சிகளின் கோவையாகத்தான் அந்த படம் இருக்கும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு நபருக்கு வரும் வெவ்வேறு கனவுகளின் தொகுப்பு. கனவுகள் எப்படி முழுமையாக இல்லாமல், லாஜிக் இல்லாமல், சம்பந்தா சம்பந்தமில்லாத காட்சிகளை இணைத்து வருமோ, அப்படியே இருக்கும் அந்த திரைப்படம் Segments of dreams., ஆனால் அந்த திரைப்படம் ஆஹா, ஓஹோ வென பேசப்பட்டது, இன்றளவும் உலகப்புகழ் டைரக்டர்கள், திரை விமர்சகர்கள் அந்த திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள்., ஒரு திரைப்படத்தை சம்பந்தா சம்பதாமில்லாத காட்சிகளின் கோவையாக்க் கூட செய்ய முடியும், உலகப்புகழ் திரைப்படமாக செய்ய முடியும் என்பதற்கு அகிராவின் ட்ரீம்ஸ் ஒரு உதாரணம். ஆனால் அந்த காட்சிகள் நிஜமான கனவுகள் போல இருக்கும், நம் எண்ண ஓட்டத்தை சில கணமாவது நிறுத்தும் வல்லமையோடு இருக்கும், ஒவ்வொரு கனவும் ஒரு கதை போல இருக்கும் நாம் காணும் கனவுகள் மாதிரியே..  அதனால் தான் அந்த திரைப்படம் இன்றளவும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

Moving + Pictures இரண்டு வார்த்தைகள் இணைந்து உருவான கூட்டுவார்த்தை தான் Movies என்பது, ஆனால் அதற்கான அர்த்தம் இன்று கொஞ்சம் கெட்டிப்பட்டுவிட்டது. எடிசன் சினிமாவை கண்டுபிடித்த ஆரம்ப காலத்தில் வெறும் சலன காட்சிகளை காண்பதற்கு மக்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்தனர், ஆனால் இன்றும் அதே மாதிரி மான் ஓடுவதையும், நாய் குரைப்பதையும், கால், கைகளை அசைப்பதையும், நடப்பதையும், ஓடுவதையும் தியேட்டர்களில் காண்பித்தால் எப்படி இருக்கும், வெறுப்பாக இருக்காது., திரையை கிழிக்கலாம் என்கிற அளவுக்கு கோபம் வராது, பாதியில் கிளம்பி வந்துவிடவேண்டும் என்று தோன்றாது... "கடவுள் இருக்கிறான் கொமாரு" திரைப்படத்தை பார்த்துவிட்டு என் ரூம் மேட்ஸ் இருவர் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டார்கள், பணம் கொடுத்த பாவத்திற்காக சிலர் அதை தொடர்ந்திருக்கிறார்கள், அதிர்ஷ்ட வசமாக நான் அந்த படத்திற்கு போக வில்லை. ஏன் இப்படியெல்லாம் பணம் போட்டு படம் எடுத்து ரிலீஸ் செய்கிறார்கள். எந்த நம்பிக்கையில் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள்.

என்னவென்று தெரியவில்லை உன்னோடு அதிகம் பேசியதிலிருந்து நானும் திரைப்படங்கள் பற்றி அதிகம் பேசுகிறேன், நேற்று வெற்றிவேலுடன் பேசிக்கொண்டிருந்த போது கூட தோராயமாக ஒரு மணி நேரம் திரைப்படம் பற்றி பேசியிருப்பேன். இப்போதெல்லாம் இளைய சமுதாயம் சந்திந்துக்கொண்டால் திரைப்படங்கள் பற்றித்தானே அதிகம் பேசுகிறோம் என அவன் வசவ வேறு செய்தான். ஆனால் பேச்சென்பதன் சாரம்சம் பகிந்து கொள்ளுதல் தானே எதை பகிந்து கொண்டால் என எங்களுக்கு நாங்களே சமாதானம் ஆகிக்கொண்டோம், Caring and sharing இது தானே அன்பின் சாரம்சம், பிடித்ததை பிடித்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுதலின் ஆனந்தம் அளவற்றது, காதல் என்கிற விசயம் கூட இந்த மையப்புள்ளியைப் பற்றித்தான் நகர்வதாய் நம்புகிறேன்… Caring and sharing.

கடந்த ஞாயிறு யூட்யூபில் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "The miracle worker " என்றொரு படம் பார்த்தேன்., அருமையான படம், படம் பார்த்து முடித்து விட்டு கீழே கமென்டுகளை நோட்டமிட்டேன், இதே சாயலில் ஹிந்தியில் ஒரு திரைப்படம் இருப்பதாக அன்பர் ஒருவர் கமென்ட் இட்டிருந்தார், இந்திய திரைப்படங்களை பொத்தாம் பொதுவில் திட்டியும் இருந்தார்., அமிதாப் பச்சன் நடிப்பில் "BLACK " என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்தின் கதையை விக்கியில் படித்தேன். அது மிராக்கில் ஒர்க்கர் திரைப்படத்தின் சாயல் இல்லை அப்பட்டமான சாயம் என பட்டது, யாரோ ஒருத்தரின் படைப்பை தன் சொந்த படைப்பு என கொண்டாடுவது தவறு என்றே தோன்றுகிறது, "கதை,திரைகதை,வசனம்,டைரக்சன் " எல்லாம் நானே, என தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அப்படி என்ன தான் பெருமையோ, கதை வேறொருவருடையது., திரைகதை வேறொருவருடையது, இது இந்த படத்தால் Inspire ஆகி எடுக்கப்பட்டது என்றெல்லாம் ஏன் நம் தேசத்து டைரக்டர்கள் சொல்லிக்கொள்வதில்லை என யோசிக்கத் தோன்றுகிறது.

திரைப்படங்கள் பற்றிய என பார்வைகளை தொகுத்து எனது Blog ல் ஒரு கட்டுரையாக எழுதலாம் என தோன்றுகிறது J , உன் கருத்துக்களை சொல், ஏதாவது நல்ல திரைப்படங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்.

அன்புடன்,

விஜயன் துரைராஜ்

   

 

Post Comment

Wednesday, November 09, 2016

வார்தைகளின் வார்த்தைகள்



எல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் எல்லோராலும் ஒரே மாதிரி இருந்துவிட முடிவதில்லை , ஆளுக்கேற்ற மாதிரி ஆடை உடுத்தி இடத்திற்கேற்ற மாதிரி நடிக்க வேண்டிய நாகரீக கோமாளிகளாகத்தான் நாமனைவரும் இருக்கிறோம், "உண்மையாக யாருமே இல்லை" என வருத்தப்படுகிறவர்களால் கூட உண்மையான முகங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதும், அவர்களால் கூட உண்மையான முகத்துடன் எப்போதும் இருக்க முடிவதில்லை என்பதும் தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அவன் ஒரு நடிக்கத்தெரியாத அப்பாவி, மிக எளிதில் மனமுடைந்து போகும் இலகுமன பிராணி , ஆளுக்கேற்ற மாதிரி பச்சோந்தியாக தெரியாத படுபாவி., போலிகளை கண்டு கண்டு கடுப்பாகி வெறுப்பின் உச்சத்தில் யாவரையும், யாவற்றையும் வெறுத்து ,தனது நம்பிக்கையை வார்த்தைகள் கொண்டு கிழித்தெறிந்து எரித்தழிக்க முயல்கிறான் அவன் . வார்த்தைகள் மெல்ல மெல்ல அர்த்தமிழந்து அவனிடத்தில் மௌனமாகிப்போய் நிற்கிற போது அவன் வார்த்தைகளை வார்த்தைகளால் ஏசுகிறான்... (வார்த்தைகளும்  வாய்திறந்து அவனோடு பேசின ...)

ஏய் வார்த்தைகளே !!
ஏய் வார்த்தைகளே !!

உங்களை வீசித்தானே எல்லோரும்
காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் !
என் கைக்கு மட்டும் ஏன் உங்களை
வீசி எரியும் வித்தை வாய்க்கவில்லை

உங்களை கொண்டு தானே
என்னை ஏமாற்றுகிறார்கள்
ஏன் நீங்கள் என்னிடத்தில்
வாய் திறந்து சொல்லவில்லை !

உங்களை நம்பித்தானே
என்னையே மறுதலித்து
என்னையும் அடமானம் வைத்தேன்
ஏன் நீங்கள் தடுக்கவில்லை !

அவனி முழுக்க நிறைந்திருக்கும்
அத்தனை வர்த்தைகளும்
ஆதரவேதுமின்றி !
அர்த்தமிழந்து அலையட்டும் !

ஹ்ம் ..

உங்களை ஏசக் கூட
உங்கள் உதவிதானே
தேவைப்படுகிறது
எங்களுக்கு !
அந்த திமிரோ ?

உங்களையே சேர்த்து
உங்களிடத்தில் கேட்கிறேன்
உள்ளது உள்ளபடி
உண்மை சொல்வீர்களா ??

உங்களின் நிரந்தர இருப்பிடம் எங்கே ?
எங்கே இருக்கிறீர்கள் நீங்கள் ?
பேச்சின் பின்னாலா ?
எழுத்தின் பின்னாலா ?
வாசிப்பின் பின்னாலா ?

பின்னும் நாங்களில்லை
முன்னும் நாங்களில்லை
எல்லாமும் எல்லோரும்
எங்கள் பின் இருப்பதனை
அறியாயோ மானிடனே !
சர்வம் வார்த்தை மயம் !!

உங்களைக்கொண்டு தானே
நாங்களே பேசிக்கொள்கிறோம்
நீங்கள் கூட பேசுவீர்களா?
இத்தனை கால மௌனம்
உடைபட்ட மாயம் ?

இதுவரைக்கும் எம்மை யாரும்
உம்மைப்போல எரித்ததில்லை
உண்மையைச் சொல்லச் சொல்லி
உலுக்கியும் எடுத்ததில்லை.

ஓ!
அழுதிட்ட பொழுதுகளில்
அறுதலாய் வரவில்லை
அடித்துலுக்கிக் கேட்கையிலே
பதில் சொல்ல வந்தீர்களோ??

பேசப்படும் பொருளும்
பேச்சும் பொருளும் நாமே !!
பேச்சில் மறைந்திருக்கும்
சத்தமும் அமைதியும் நாமே !!

கேட்கிற சக்தியிருந்தால்
கேட்கமலேயே கேட்கும்
நாங்கள் கூறும்
ஆறுதல்கள் அறிவுரைகள்
அமைதியான பேருரைகள் !

ஏனெனக்குக் கேட்கவில்லை?

அழுகிற பொழுது அழுகையிலும்
சிரிக்கிற பொழுது சிரிப்பினிலும்
பேசுகிற போழுது பேச்சினிலும்
எதன்போதும் ஏதோ ஒன்றால்
எப்போதும் எம் குரலை
மறைத்து விடுகிறீர்கள் !!

மறுபடியும் உம்மை கேட்கிறேன்
ஏனெனக்கு
உங்களை வீசியெறிந்து
காரியம் சாதித்துக் கொள்ளும்
வல்லமை வாய்க்கவில்லை?

யாருக்கும் கேட்டிராத எம் குரலை கேட்பவனே !!
வல்லமை இல்லையென்று
சொன்னவன் எவனுனக்கு !!
எதைக் கொண்டு எமையிழுத்தாய் !

 எப்போதும் எம்மருள் தப்பாது உமக்குண்டு !
 ஒரு நிமிசம்....
 கயவர்களுக்கும் கூட
 உன் வல்லமை வாய்த்திருக்கிறதே ??
 காரணம் ??

 எம்மை நம்பி வாய்திறக்கும் யாவருக்கும்
 நன்று தீது பாராமல் எங்களருள் கிடைப்பதுண்டு !!

 எல்லோர் வார்த்தைகளையும் நம்பி விடாதே
 ஆனால் வார்த்தைகளின் உள்ளிருக்கும்
 வார்த்தைகளின் வார்த்தைகளை நம்பு !!....
 வேறு யாரோ கூப்பிடுகிறார்கள்
 வருகிறோம் !!!!
    
   

 

Post Comment