Monday, December 26, 2016

ஊர்சுற்றியின் குறிப்புகள் -1

யாதுமாகி நின்றாய் !

யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யாவும் நின்றன் திவ்ய லீலையன்றோ
                                                                                           -பாரதி

இடம் @சந்திரப்பூர் - மகராஷ்ட்ரா

முன் குறிப்பு:
பணி நிமித்தமாக ஒருவாரமாக இங்கு தான் இருக்கிறேன், ஒருவழியாக கதை,வரலாறு,கலாச்சாரம் என்று கொஞ்சம் தகவல்கள்  சேர்த்தாயிற்று , சுற்றிப்பார்க்க எத்தனித்திருந்த இடங்களையும் பார்த்தாயிற்று, கட்டுரை எழுத வேண்டியதுதான் பாக்கி :) விக்கிப்பீடியாத்தனமாக தகவல் குறிப்புகளாக இல்லாமல் பயணக்குறிப்புகளாக ...

சந்திரப்பூர்: 



மகராஷ்ட்ர மாநிலத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று. மாவட்ட தலைநகர். இயற்கைவளமும், கனிம வளமும் நிறைந்த பூமி, காடு சூழ் நிலப்பரப்பு.

நிலக்கரி, இரும்புத்தாது ,காப்பர் தாது, சிமென்ட் உற்பத்திக்கான தாதுக்கள் என கனிம வளம் கொழிக்கும் ஊராக இருப்பதால் ஊரைச்சுற்றிலும் சுரங்கங்களும், ஆலைகளும், தொழிற்சாலைகளும் நிறைய இயங்குகின்றன. அனல் மின் நிலையம் ஒன்றும் இருக்கிறது . (மகராஷ்ட்ராவின் மிகப்பெரிய அனல் மின் நிலையம்  (3340MW)).

கருப்புத்தங்க நகரம், தொழில் நகரம் , மகராஷ்ட்ரத்தின்  அதிக மாசுநிறைந்த நகரம். சந்திரப்பூர்

இந்த ஊரின் எந்த திசையில் சென்றாலும் பெரிய பெரிய மதில் சுவர்களும், பெரிய நுழைவாயில்களும் (15, 20 அடி உயர வாயில்கள்) நிறைந்திருக்கின்றன, இந்த ஊரின் வரலாற்றை வாசித்து அதை இந்த கட்டுரையில் நான் எழுத இந்த சுவர்களும், நுழைவாயில்களும் தான் முக்கிய காரணம். :) .


நான் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சுவர்


சுவரின் கதை:

எட்டாம் நூற்றாண்டின் பாதிகளில் துவங்கி 1700 வரைக்குமாக சுமார் எட்டரை நூற்றாண்டு காலமாக சந்திரப்பூர் நகரம் (ஆப்போது சந்திரப்பூர் என் கிற பெயர் சூட்டப்பட்டிருக்கவில்லை)  கோண்டு  என்ற பழங்குடியின மன்னர்களின் ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறது. 

சந்திரப்பூர் நகரை நிர்மாணித்த பெருமை அந்த மன்னர்களின் பட்டியலில் பத்தாவதாக வந்த  பல்லால்ஷா வையே சாரும்.

ராஜா காண்ட்க்ய பல்லால்ஷா:

(Ballal sha)பல்லால் ஷா

 அவரது தந்தை செர்ஷாவின் மரணத்தினைத் தொடர்ந்து இள வயதிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பல்லால்ஷா .  சிர்ப்பூர் என்கிற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு  ராணி சமேத ராஜாவாக செவ்வனே ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

திடீரென ராஜா பல்லாஷாவின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது, உடல் முழுக்க கொப்புளம் கொப்புளமாக உருவாகிறது.எந்த மருத்துவம் செய்தும் பலன் ஏற்படவில்லை, ராணி ராஜாவை தனியாக ராத்தங்க சொல்கிறாள், ராஜா வார்தா நதிக்கரை அருகே ஒரு இடத்தில் வசிக்கத்துவங்குகிறார் , அந்த இடத்திற்கு  பல்லால்ப்பூர் என்று நாமகரணம் சூட்டி ஒரு கோட்டையை கட்டுகிறார்.

தற்போதைய சந்திரப்பூர் நகரம் இருக்கும் இந்த இடத்திற்குப்பக்கமாக  ஒரு நாள் வேட்டைக்கு  வந்திருந்தபோது  பல்லால்ஷாவிற்கு தாகம் எடுத்திருக்கிறது, சுற்றிலும் தண்ணீரை தேடுகிறார் கிடைக்கவில்லை, ஜர்பத் நதி வற்றிப்போய்க் கிடக்கிறது. ஜர்பத் நதியின் வற்றிய நதிக்கரையை வலம் வந்த ராஜாவின் பார்வையில் ஒரு நீர் சுணை கண்ணில் படுகிறது, அந்த சுணையின் துளையிலிருந்து சுரந்து வந்த அந்த நீரை குடித்துவிட்டு முகம் கை கால் கழுவி கொண்டு குதிரையேறி அரண்மனைக்குச் செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல உறக்கம் கொள்கிறார். வழக்கம்போல அடுத்த நாள் காலை ராணியைப் பார்க்க சிர்ப்பூர் சென்றிருந்த போது, ராஜாவின் முகத்திலும்,கைகளிலும் கொப்புளங்கள் குறைந்திருந்ததை கண்ணுற்ற ராணி வியந்துபோய் காரணம் கேட்கிறாள், ராஜா முந்தின நாள் தான் நீர் அருந்திய கதையை சொல்கிறான், தானும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என கேட்கிறாள் ராணி , ராஜா குதிரையிலேற்றிக் கூட்டிச்செல்கிறார்.

ஜர்பத் நதிக்கரை - புல் வெளி - கரையோற கல் சுணை- அந்த கல்லில் பசுவின் பாத குழம்படிகள் வடிவில் இருந்த ஐந்து துளைகளின் வழியாக நீர் சுரந்துகொண்டிருந்தது, சுரந்தபடியே இருந்தது. ராஜா அந்த நீரில் குளிக்கிறான், கொப்புளங்கள் அத்தனையும் மாயமாக மறைகின்றன.

அன்ச்சாலேஸ்வரர் கோவிலில் அடியேன்


அரண்மனை திரும்பி துயில் கொள்கின்றனர்,தம்பதியர் இருவரும். ராஜாவின் கனவில் சிவ பெருமான் தோன்றி அந்த புனித நீர் இருந்த இடத்தில் ஒரு கோவிலை கட்டும்படி கூறுகிறார். ராஜா தான் கண்ட கனவை ராணியிடம் கூறுகிறார்.ராணியும் , ராஜாவை அந்த புனித நீர் இருக்கும் புண்ணிய இடத்தில் கோவில் ஒன்றை நிர்மாணிக்கக் கோருகிறாள். ஜர்பத் நதிக்கரையையொட்டி ராஜா பல்லால்ஷா அன்ச்சாலேஷ்வரர் கோவிலை கட்டுகிறார்.



இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமான் உருவத்தில் ஆவுடையார் மட்டுமே இருக்கிறது , லிங்கம் இல்லை, ஆவுடையாரின் உள்ளே கைக்கெட்டாத ஆழத்தில் சுணை இருக்கிறது. அதை இறைத்து தெளிக்க ஒரு குவளையும் கட்டித்தொங்கவிடப்பட்டுள்ளது.

கோவில் கட்டும் பணியை பார்வையிட வருகை புரிவதை வழக்கமாக்கிக்கொண்டு தினசரி அரண்மனைக்கும் ,நதிக்கரைக்குமாக வந்து திரும்பிக்கொண்டிருந்தார் பல்லால்ஷா. அப்படி திரும்பிக்கொண்டிருந்த ஒரு நாள் முயல் ஒன்று நாயொன்றை துரத்திச்செல்லும் விசித்திர காட்சியை காண்கிறார் ராஜா, துரத்தும் அந்த முயலை ஆச்சர்யமும் விரைவுமாக குதிரைப்பாய்ச்சலில் பின் தொடர்ந்து செல்கிறார். துரத்திக்கொண்டிருந்தது  முயல், பயந்து ஓடிக்கொண்டிருந்தது நாய், பல கி.மீ க்களாக பயந்து ஓடிக்கொண்டிருந்த நாய் துவங்கின இடத்திற்கு வந்ததும் வெறித்தனமாக திரும்பி முயலை முழுங்கிவிடுகிறது. ஆச்சர்யத்தின் உச்சத்த்தில் களைத்துப்போய் அரண்மனை திரும்பிய ராஜா, இந்த விவரங்களை ராணியிடம் கூறுகிறார்.முயலின் நெற்றியில் பிறை வடிவ சந்திரக்குறியீடு இருந்ததையும் கூறுகிறார்.

"இது ஒரு நல்ல சகுனம் ,  முயல் நாயைத்துரத்திக்கொண்டுபோன அந்த இடத்திலெல்லாம் கோட்டைச் சுவர் எழுப்புங்கள், நாய் முயலை எதிர்த்து தோற்றுப்போன இடத்திலும், நாய் முயலை கொன்ற இடத்திலும் கோட்டை அரண் கொண்ட முகப்பு கட்டுங்கள்"., என்கிறாள் ராணி.

ராணியின் வார்த்தைகளுக்கிணங்க  ராஜா சுவர்சூழ் நகரை கட்டுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்கிறான், அன்ச்சாலேஷ்வரர் கோவில் கட்டும் பணியும் இணையில் (Parallel ஆக) நடந்து கொண்டிருக்க, கோட்டைச்சுவரும்,தடுப்பு அரணும் கொண்ட அந்த கோட்டை சூழ் பட்டினத்தை நிர்மாணிக்க ஆரம்பிக்கிறான்.

எட்டு வாசல் , இரண்டு சுவர்முன் முகப்புகள்,  சுற்றிலும் சுவர் சூழ சந்திரப்பூர் கோட்டைப்பட்டினம் உருவெடுக்க ஆரம்பித்தது.

                                                                                                                   பயணம் தொடரும்....



சமர்ப்பணம்:
நீண்ட நாட்களாக உருப்படியாக எதையும் எழுதவில்லை என்று அடிக்கடி என்னை திட்டித்தீர்க்கும் அன்பு நன்பன் வெற்றிவேலிற்கு இந்த தொடர் பதிவு சமர்ப்பணம்.



 

Post Comment