Sunday, November 27, 2016

கலகல வகுப்பறை

கலகல வகுப்பறை
****************************
‘கலகல வகுப்பறை’ என்ற தமது அமைப்பின் மூலம், வகுப்பை எப்படி கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்திவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு வரும் முதுகலை ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு, இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
1) முதலில் ‘கலகல வகுப்பறை’ என்ற இந்த தலைப்புக்காக.
2) இரண்டாவதாக, வகுப்பறைகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே அரிது. அடுத்தகட்டமாக, தமது வகுப்பறைகளை கலகலப்பாகக் கொண்டுசெல்ல முயற்சிப்பது என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலான அரிய செயல். தமது வகுப்பறைகளையும் கடந்து, ஆர்முள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களது வகுப்பறைகளையும் கலகலப்பாக மாற்றுவதற்காக அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்பது எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றது.
ஒரு பள்ளியில் ஆகச் சிறந்த வகுப்பறையாக ஒரு வகுப்பறையைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது வழங்குவதற்காக ஒரு குழுவினரோடு அந்தப் பள்ளிக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த வகுப்புக்கு அந்த விருது போய்ச் சேரும் எனில், அந்தப் பள்ளியிலேயே மிகவும் அமைதியான வகுப்பறைக்காகத்தான் அது இருக்கும். இது குறித்து பேசும்போது, அந்தக் குழுவைச் சார்ந்த யாரோ ஒருவர், அந்த வகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைப் பற்றிப் பேசும்போது, தன்னையும் அறியாமல் இப்படி சொல்லிவிடவும் கூடும் -
‘இப்படி ஒரு அமைதியை நான் எங்கும் பார்த்ததில்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி’
உண்மையும் அதுதான். எந்த வகுப்பறை அமைதியாக இருக்கிறதோ அதுதான் மிக நல்ல வகுப்பறை என்றுதான் இன்றைய பொதுப்புத்தி எடுத்துக்கொள்கிறது. அமைதிதான் சிறப்புக்கான அளவுகோல் என்று கொள்வதெனில், இந்த வகுப்பறையை விடவும் இந்த ஊரின் மயானம் மிக அமைதியாக இருக்குமே. அமைத்திக்குதான் விருது என வைத்துக்கொண்டால், அந்த விருதை மயானத்துக்கு அல்லவா கொடுக்க வேண்டும்.
வகுப்பை அமைதியாக வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார். ‘அவர் வகுப்பில் இருந்தால் அந்த வகுப்பு அமைதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்’ என்று அதை சிலர் நியாயப்படுத்தவும் செய்வார்கள். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு குணம் என்றால், மயானக் காவலர் இதைவிட பேரமைதியை கட்டிக் காக்கிறாரே. ‘எனில், ஆசிரியரைவிடவும் மயானக் காவலர் அமைதியைப் பேணுவதில் சிறந்தவர்தானே’ என்று கேட்டால், ‘பிணங்கள் பேசாதே’ என்று பதிலுரைக்கக்கூடும். பிணங்கள்தான் பேசாதே என்றால், அதே குணத்தை மாணவர்களிடமும் எதிர்பார்ப்பது தவறல்லவா?
இன்னும் சரியாகச் சொல்வதெனில், மாணவர்களைப் பேசவிடாமல் ஒரு ஆசிரியர் பார்த்துக்கொள்கிறார் என்றால், அவர் இருக்கும்வரை அந்த வகுப்பு மாணவர்களைப் பிணங்களைப்போல பாதுகாக்கிறார் என்றுதானே பொருள். அது குற்றமல்லவா?
தனது வகுப்புகளை அமைதியாகப் பராமரிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களே மிகச்சிறந்த ஆசிரியர்களாகப் பார்க்கிறார்கள்தான். தங்களது பிள்ளைகளை நாற்பத்தி ஐந்து நிமிடம் பிணங்கள் மாதிரி வைத்திருக்கும் ஒரு நபரைக் குற்றவாளியாகப் பார்க்காமல், ஆகச் சிறந்த ஆசிரியராகப் பார்ப்பதற்கான காரணம் எளிதானது. தம் பிள்ளையைப் பிணம் மாதிரி நடத்துகிறார் என்கிற உண்மையை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தமது வகுப்பை அமைதியாகப் பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிற ஆசிரியரும், தமது வகுப்பில் பிள்ளைகளைப் பாடம் கவனிக்கும் பிணங்களாக வைத்திருக்கிறோம் என்கிற உண்மையை முழுமையாக உணராதிருப்பதே அவர் அப்படி நடந்துகொள்வதற்குரிய காரணமாக இருக்கிறது.
இவ்வாறு விவாதத்தைத் தொடங்கும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஐயம் கிளம்பும். வகுப்பிலே மாணவர்களைப் பேச அனுமதித்தால், அது கற்றலை சேதப்படுத்தாதா?
இல்லை, அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்துவிடாது. எவ்வளவுதான் அறிவைப் புகட்டி அனுப்பினாலும், பிணத்தின் குணத்தோடு மாணவனை வெளியே அனுப்பினால், அவன் அறிவுள்ள ஒரு பிணமாகத்தானே இருப்பான். தான் சார்ந்த துறையில் அவன் பெற்றிருக்கும் அறிவானது, அந்தத் துறையில் அவனை மிக உச்சத்துக்குக் கொண்டுபோகவே செய்யும். தன் துறை சார்ந்த பிரச்னைகளை, சிக்கல்களை மிக எளிதாக அவனால் கையாள இயலும். ஆனால், சமூகம் சார்ந்த, மண் சார்ந்த எந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அவனது தலையீடோ பங்களிப்போ இருக்காது.
இது மாதிரியான மாணவர்களைத்தான் இங்கிலாந்து தனது காலனி நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து எதிர்பார்த்தது. இப்படி ஒரு கல்வித் திட்டத்தைத்தான் இந்தியாவில் வடிவமைக்க வேண்டும் என்று மெக்காலேவும் இங்கிலாந்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தார். அதை அச்சுப் பிசகாமல், அப்படியே இங்கிலாந்தும் வடிவமைத்துத் தந்தது. எது நடந்தாலும் கேள்வி கேட்காத, சுதந்தரம் பற்றிய சொரணை உணர்ச்சி துளியும் அற்ற, சகலமும் மரத்துப்போன இந்திய ஊழியர்களை இங்கிலாந்துக்கு ஏராளமாக இந்தக் கல்விமுறை அள்ளி வழங்கியது.
இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் இரண்டு லாபங்களை இங்கிலாந்து அனுபவித்தது.
1) இங்கிலாந்திலிருந்து அலுவலகப் பணியாளர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால், அவர்களுக்கு நிறைய ஊதியம் தர வேண்டும். அந்த வேலையை செய்யக்கூடிய ஊழியர்களை இந்தியாவிலேயே தயாரித்ததன் மூலம் குறைந்த ஊதியத்துக்கு அவர்களுக்கு ஊழியர்கள் கிடைத்தார்கள். இதன்மூலம், அவர்களுக்கு செலவு மிச்சமானது. பச்சையாகச் சொல்லப்போனால், அவர்களது லாபம் அதிகரித்தது.
2) குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு மட்டுமல்ல, சுதந்தரத்தைப் பற்றியும்கூட நினைத்துவிடாத, மரத்துப்போன ஊழியர்களையும் இந்தக் கல்வித் திட்டம் இங்கிலாந்துக்குத் தந்தது.
காமன்வெல்த் போட்டிகள் நடந்தபொழுது, காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. காமன்வெல்த் என்பது இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் கூட்டமைப்பு. அதுவே ஒரு அடிமைத்தனத்தை பளிச்செனக் காட்டக்கூடிய ஒரு அமைப்பு.
சரியான, நாட்டுப்பற்றை அடித்தளமாகக் கொண்டிருக்கக்கூடிய கல்விக் கட்டமைப்பு இருந்திருக்குமானால், காமன்வெல்த் என்ற அமைப்பையே இந்த நாடுகள் நிராகரித்திருக்கும்.
நாட்டுப்பற்றை உறுதிமொழி எடுப்பதன் மூலம் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அதற்கேற்ற கல்விக் கட்டமைப்பை நாம் கட்டியாக வேண்டும். அதற்கு, இருக்கிற கட்டமைப்பை நாம் தகர்த்தெறிந்தாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இருக்கிற அமைப்பை விமர்சனத்துக்குக் கொண்டு போக வேண்டும்.
விமர்சனத்தையும் உடைசலையும் செய்யும் அதே வேளையில், சரியான மாற்றையும் ஒருசேர நாம் கொண்டு செல்ல வேண்டும்.
இதை, முற்றாய் முழுசாய் மேற்சொன்ன தோழர்கள் கையெடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இத்தகைய காரியத்துக்கான கருவிகளுள் ஒன்றாக நான் இவர்களைப் பார்க்கிறேன்.
பெற்றோர்களிடம், இந்தக் கல்விக் கட்டமைப்பு அடிமைகளையே பெரும்பாலும் உருவாக்குகிறது என்பதைக் கொண்டு போக வேண்டும். இந்தக் கட்டமைப்பிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டிய ஊழியர்கள்தான் ஆசிரியர்கள். இவர்களால் தனியாக இந்தக் கட்டமைப்பைச் செய்துவிட முடியாது. அது பெற்றோர்களும், பொதுமக்களும் முன்கை எடுக்க, ஆசிரியர்கள் கை இணைய வேண்டிய விஷயம்.
அதற்கான பிரசாரங்களை பொதுமக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.
அதேவேளை, வகுப்பறையை நல்ல மனிதர்களை உருவாக்கும் பட்டறையாக மாற்றிதர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
இதைச் செய்ய ஆசிரியர்களால் முடியும். எப்படி இதைச் செய்வது என்பதைத்தான் மேற்சொன்ன தோழர்கள் ‘கலகல வகுப்பறை’ என்ற தங்கள் அமைப்பின் மூலம் களமெடுத்து நகர்கிறார்கள். கரம் குவித்து வாழ்த்துகிறோம்.
எல்லாம் சரி, சத்தமான வகுப்பறைகள் கற்றலைக் கெடுத்துவிடாதா? ஒழுங்கீனத்தைக் கொண்டுவராதா? என்று சிலர் கேட்கக்கூடும். அவர்களுக்கு நமது பதில் இரண்டு.
1) வகுப்பறைகள் சத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல வகுப்பறைக்கான நிபந்தனை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரம், அமைதியை நிபந்தனையாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்.
2) ஒழுங்கையோ, கற்றலையோ இது ஒருபோதும் பாதிக்காது என்பதற்குக் கீழ் வரும் சம்பவத்தை உதாரணமாகத் தருகிறோம்.
தோழர் பொன்னீலன் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தபோது, ஆண்டாய்வுக்காக ஒரு பள்ளிக்குப் போகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவரும் நல்ல தோழர்கள். அனைத்து வகுப்புகளையும் முதன்மைக் கல்வி அலுவர்கள் ஆய்வு செய்வதில்லை. மாவட்டக் கல்வி அலுவலர் சில வகுப்புகளையும், உடன் வந்திருக்கும் ஆசிரியர்கள் வேறு வகுப்பகளையும் ஆய்வு செய்வார்கள். பொதுவாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத்தான் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
ஆனால், தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளியை முற்றாகப் பார்வையிடுவார்கள். அதைத்தான் தோழர் பொன்னீலன் அவர்களும் செய்கிறார். அனைத்து வகுப்புகளையும் சுற்றிக்காட்டிய தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பை மட்டும் அவருக்குக் காட்டவில்லை.
தோழர் பொன்னீலன் அவர்கள், அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்க, அதை தட்டிக் கழிப்பதில் தலைமை ஆசிரியர் குறியாக இருந்திருக்கிறார். அவரது விடாப்பிடியான கோரிக்கைக்கும், இவரது நழுவும் முயற்சிக்கும், இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்தன.
அப்படி ஒரு வகுப்பே இல்லை போலும். இல்லாத வகுப்பை கணக்குக் காட்டி, ஒரு ஆசிரியரைக் கூடுதலாக வைத்திருக்கிறார்போல. எனில், ஒரு ஆசிரியருக்கான சம்பளம் அரசுக்கு இழப்புதானே. இது நிரவலுக்கான விஷயமாச்சே என்ற அதிகாரியின் சிந்தனை, தோழருக்கும் இருந்திருக்கக்கூடும். அந்த வகுப்பு ஒரு உடைந்த கட்டடத்துக்குள் நடக்கிறது. அதைப்போய் அதிகாரியிடம் காட்டுவதா என்ற தயக்கம் தலைமை ஆசிரியருக்கு.
அழுத்தம் அதிகமாகவே, வேறு வழியின்றி அந்த வகுப்புக்கு அழைத்துப்போகிறார். போனால், ஹே என்று சத்தம், வகுப்பில். தலைமை ஆசிரியர், வகுப்பை நெறிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலில், வேகம் கூட்டினார். தோழர் பொன்னீலனோ, தலைமை ஆசிரியரை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டு, தான் மட்டும் சென்று, வகுப்பில் என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக யாரும் அறியாமல் கண்காணிக்கிறார். தலைமை ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டும், தன் நேரத்தை நொந்தபடியேயும் அங்கேயே நிற்கிறார்.
உள்ளே, ஒடிசலான மிக இளம் வயது ஆசிரியை வரைபடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு சத்தம்.
சுவரில் இந்திய வரைபடம் தொங்குகிறது. ஆசிரியர் ஒரு மாணவனை பெயர் சொல்லி விளிக்கிறார். அவனிடம், ‘நீ மும்பை போக வேண்டும். எதில் போகிறாய். ரயிலா? விமானமா?’ என்கிறார். ரயில் என்கிறான். அவனிடம் ஒரு குச்சி தரப்படுகிறது. ‘சரி, மும்பைக்கு போ’ என்கிறார். அந்தப் பையன், ‘கூ… ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு’ என்றபடியே ரயிலில் பயணித்து மும்பையைத் தொடுகிறான். ஓ என்று சத்தமிட்டுக் கொண்டாடுகிறது வகுப்பு.
அடுத்த பையன், விமானத்தில் காஷ்மீர் போனான். இன்னுமொருவன், காரில் கொல்கத்தா போனான். இப்படியே. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஊராகப் போனார்கள்.
இப்போது, அந்த வரைபடம் கழற்றப்படுகிறது. ஊர் பெயர்கள் இல்லாத வெற்று வரைபடம் ஒன்று அங்கு மாட்டப்படுகிறது.
ஆசிரியை, மும்பை போன மாணவனை இந்த முறை பைக்கில் மும்பைக்குப் போகப் பணிக்கிறார். அவனும், பைக்கை கிளப்பிக்கொண்டு போகிறான். ஆனால், மும்பைக்குப் பதில் காஷ்மீர் போகிறான். சிரிப்பால் அதிர்கிறது வகுப்பு. ‘டீச்சர், ரமேசு காஷ்மீர் போயிட்டான் டீச்சர்’ என்று வகுப்பே இரண்டு படுகிறது.
‘அவன் போன பைக் சரியில்ல. ஏண்டா ரமேசு…’ என்றவாறே, சரியான இடத்தை அவனுக்குக் கற்பிக்கிறார் ஆசிரியை. இப்படியே நகர்கிறது, ஆய்வு பற்றிய எந்தக் கவனமும் இல்லாமலே அந்த வகுப்பு. அதற்கு மேல் நிற்க முடியாதவராகத் திரும்புகிறார் பொன்னீலன். அலுவலகம் வரும்வரைக்கும் ஏதும் பேசவில்லை. அந்த வகுப்பில் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தலைமை ஆசிரியருக்குப் படுகிறது.
ஆசிரியர் கூட்டம் தொடங்கியதும், குறைகளை புன்னகையோடும் ஒரு தந்தைக்கே உரிய பாங்கோடும் அடுக்குகிறார். அதை எப்படி சரி செய்வது என்றும் ஆலோசனைகளைத் தருகிறார்.
இறுதியாக, அந்தக் குறிப்பிட்ட வகுப்பைப் பற்றிம் பேசுகிறார். ஆசிரியை எழுந்து நிற்கிறார். ‘மேப் டிராயிங் இப்படி நடத்தலாம்னு எனக்குத் தெரியாது மகளே. இப்படியே நடத்து. இப்படித்தான், கற்றல் கலகலப்பாக இருக்க வேண்டும்’ என்று பாராட்டினார்.
கற்றலை சேதப்படுத்தாமல் மேம்படுத்தக்கூடிய கலகல வகுப்புகளே இந்த நொடியின் தேவை.
தினமணி.காம் 27.11.2015

Labels: ,

Saturday, June 25, 2016

தாய்மொழிப் பற்று அவசியமா ?? (2)

 "மொழி  என்பது வெறுமனே சத்த சமாச்சாரம் அல்ல"


மொழிகள் - உருவங்களற்ற உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும்   உருவம் கொடுத்து உரைக்க உதவி செய்கின்றன.  மனித இனத்தை மிருகக்கூட்டத்திடமிருந்து பிரித்துக் கூட்டி வந்த மேய்ப்பன் மனிதர்கள் பேசின மொழி தான் எனலாம். மனிதன் எப்போது மொழிகளின் அவசியத்தை உணர்ந்து தனக்கே தனக்கென , அல்லது தங்களது கூட்டத்தினருக்கான பிரத்யேக மொழியை உருவாக்கத் துவங்கினானோ அப்போதிருந்துதான் நாகரிக வளர்ச்சி என்பது துவங்க துவங்கியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

மொழி எப்படி தோன்றியது ?

மொழி இன்ன தேதியில் இன்ன இடத்தில் இன்னவரால் கண்டுபிடிக்கப்பட்டது என உறுதியாக சொல்லிவிட முடியாது., முந்தின பதிவில் பார்த்தது மாதிரி  மொழிகளின்உருவாக்கத்தில் இனம்,கலாச்சாரம்,காலநிலை,சுற்றுப்புறம்,தட்பவெப்பம்,உணவுப்பழக்கம், என பல்வேறு காரணங்கள் பங்கெடுத்திருக்கின்றன. இந்த பல்வேறு காரணங்கள் கொண்ட பட்டியலின் பலனாகவே மொழி என்பது உருவாகியிருக்கிறது. 

மொழி உருவாக்கத்தின் அடிப்படையான காரணங்கள் மூன்று

1.தகவல் பரிமாற்றம் 
2.தப்பிப் பிழைத்தல் 
3.தகவமைப்பு 


இது பற்றியெல்லாம் விரிவாக பார்க்கலாம் , அதற்கு முன்னால் மிருகங்களின் உலகில் சஞ்சரித்து அவைகளின் மொழிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மிருகங்கள் பேசுமா ? :

மிருகங்கள் பேசுமா ? என சிந்திக்கும் போது முதலில் எனக்கு,  பஞ்ச தந்திரக்கதைகளும் , ஈசாப் நீதிக்கதைகளும் தான் நினைவுக்கு வருகின்றன. :)

சரி,

மொழி என்பது வார்த்தைகள் மற்றும் வார்த்தைகளின் அடுக்குமுறையால் விளையும் அர்த்தங்கள் என சிந்திக்கும்பட்சத்தில் மிருகங்களுக்கு மொழி கிடையாது என சொல்லலாம். அதேசமயம் மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான சமாச்சாரம் என்கிற பட்சத்தில் சிந்திக்கிற போது மிருகங்களுக்கு மொழி உண்டு எனலாம். 


மிருக மொழிகளில் அநேகமாக வார்த்தைகள் கிடையாது, குறியீடுகள், உடலியக்க அசைவுகள், சத்தங்கள் மட்டுமே இருக்கின்றன. (சிம்பான்ஸி, பபூன் குரங்குகள் வார்த்தைகள் மூலம் உரையாடிக்கொள்கின்றன என்கிறார்கள் ஆனால் அவையும் limited தான் 384 வார்த்தைக் குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்  ). 

எங்க வீட்டு கிளி பேசுமே !! என யாராவது சண்டைக்கு வரலாம் , கிளிகளைப் பொறுத்தவரையில் அவை எண்ணங்களை ஒலியாக்கி பேசுவதில்லை, வெறுமனே சத்தங்களாகவே புரிந்து கொண்டு பேசுகின்றன. தீவிர பயிற்சி மூலம் கிளிகளை நம் மொழியை புரிந்துகொண்டு பேச வைக்க முடியும்.

சில ஆராய்ச்சியாளர்கள்   மிருக உலகத்திற்குள் சஞ்சரித்து அவற்றின் மொழியை கஷ்டப்பட்டு புரிந்து கொண்டு நம் மொழியோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். தேனீக்களின் நடன மொழியை கண்டுபிடித்ததற்காக ஒரு ஆராய்ச்சியாளருக்கு நோபல் பரிசெல்லாம் கூட கொடுத்திருக்கிறார்கள். 

*******

மிருக மொழி - சில சுவாரஸ்யமான தகவல்கள் :

நாய் மொழி :

நம் கண்களுக்கு தினந்தோறும் தரிசனம் தந்து கொண்டு இருக்கும் நாய்களைப்பற்றி,   அவைகளின் பரிபாஷைகள் பற்றி பேசாமல் போனால் இந்த கட்டுரை அதன் ஜென்ம சாபல்யத்தை அடையாது போகலாம்.

முன்பின் அறியாத புது நபர்களை கண்டால் குரைக்கும், தெரிந்தவர்கள் வந்தால் வாலாட்டும், பிரியமானவர் வந்தால் வாஞ்சையோடு வாலாட்டி துள்ளிக்குதிக்கும்..  நாயுலகில் நாமறிந்த மொழி  இவ்வளவாகத்தான் அநேகமாக இருக்கும்.

நாய்களின் மொழியில்  இன்னும் கூட விசயங்கள் இருக்கிறது, கீழே இருக்கும் படங்களை கவனியுங்கள்.



சிம்பான்சி, உராங்குட்டான் ரக குரங்குகளுக்கு, நாய்களுக்கு, யானைகளுக்கு, டால்பின் களுக்கு மனித மொழியை கற்றுக்கொள்ளும் அறிவு இருக்கிறது, அவைகளால் பேச முடியவில்லை என்றாலும் புரிந்து செயல்படும் வகையில் பழக்கப் படுத்த முடியும். (மிருகங்கள் மொழியை வார்த்தைகளாக அல்லாமல் சத்தங்களாகவே புரிந்து கொள்கின்றன).

சிம்பான்சிகளை மனிதர்களோடு உரையாடும் வகையில் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் (வார்த்தைக்குறியீடுகள் - lexigrams) கொண்ட அட்டையின் உதவியோடு மனிதர்களோடு பேச வைக்க முடியுமாம்.


           பயிற்றுநர்  Sue_Savage உடன் Bonobos குரங்குகள்_Panbanisha_&_Kanzi _2006

மிருக மொழி பற்றி தேடி தேடிப் படித்துக்கொண்டிருக்கையில் என்னை மிக ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜந்து அலெக்ஸ் எனும் கிளி ,

ஆப்ரிக்க கிளி  அலெக்ஸ் (தோற்றம் :1967 மறைவு:2007)
                                       
ஒரு செல்லப்பிராணிகள் கடையில் இந்த கிளியை வாங்கி ஐரின் பெப்பர்பெர்க் என்ற அந்த மொழியியல் வல்லுநர் அதற்கு அலெக்ஸ் என பெயர் வைத்த போது இதன் வயது 1. அலெக்ஸ் (Alex என்ற பெயர் Avian -பறவை, Language- மொழி, Experiment -ஆராய்ச்சி என்பதன் சுருக்க வார்த்தை acronym). பயிற்சி - பயிற்சி - இடைவிடாத பயிற்சி.
                                                                     

கையில் ஏதாவது ஒரு பொருளை நீட்டி இது என்ன, என்ன நிறம், எத்தனை, என்ன வடிவம் என கேட்டால் கேட்கிற கேள்வியை மிகச்சரியாக புரிந்து கொண்டு பதில் சொல்லியது (ட்ரெய்னிங்க் அப்படி). உன்னுடைய நிறம் என்ன என கேட்டால் க்ரே என சொல்லுமாம். உலகில் தன்னைப்பற்றி பேசிய மனிதனல்லாத ஒரே உயிரினம் இந்த கிளி தான் என்கிறார்கள். அதுமட்டுமின்றி இல்லாத பொருளைப் பற்றி கேட்டால் அதை இல்லை என சரியாக சொல்லி இருக்கிறது,  உதாரணமாக அந்த இடத்தில் வாழைப்பழங்கள் இல்லை என வைத்துக்கொள்வோம், இங்கு  எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன எனக்கேட்டால் , வாழைப்பழங்கள் இல்லை என சொல்லியிருக்கிறது (பூச்சியத்தை புரிந்து கொண்ட ஒரே மனிதனல்லாத உயிரினம் என்கிறார்கள்).
 
எத்தனை சிகப்பு !! எத்தனை ஊதா !! ( பயிற்றுநர் பெப்பர்பெர்க் உடன் அலெக்ஸ்)

தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தால் , அல்லது அது அயர்வாக உணரும் சமயங்களில் "i wanna go " என சொல்லிவிட்டு கூண்டுக்கு நகர்ந்துவிடுமாம்.

6 வரையிலான எண்கள் , 7 நிறங்கள், 5 வடிவங்கள், நூற்றுக்கணக்கான வார்த்தைகள், 50 வகையான பொருட்களை அடையாளம் காணல், குட்டிக்கணக்குககள் என ஒரு ஐந்து வயது குழந்தைக்கான அறிவு அந்த அலெக்ஸிற்கு இருந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

இந்த ஜந்துவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://alexfoundation.org/

இது ஒரு புறம் இருக்க ஐன்ஸ்டீன் என்ற பெயருடைய இன்னொரு கிளி பல குரல்களில் பேசி அசத்துகிறது.

பொதுவாக மனிதர்களைத் தவிர்த்து மனிதர்களைப் போல பேசத்தெரிந்த ஒரே ஜீவராசிகள் பறவைகள் தான் , காகங்கள், (பாரதியாரின் காக்காய் பார்லிமென்ட் கதை நினைவுக்கு வருகிறது :) )  மைனாக்குருவிகள், போன்றவைகளுக்கும் பயிற்சி கொடுத்தால் பேச வைக்க முடியுமாம், ஆனால் கிளிகள் தான் கெத்து காட்டுகின்றன.

என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இன்னொரு மொழி, தேனிக்களின் நடன மொழி.

*******

தேனீக்களின் நடன மொழி : 

தேனீக்கள் நடன அசைவுகள் மூலம் பேச்சில்லாமலேயே  பேசிக்கொள்கின்றன என்பதை கேள்வியுறும் போது "அட !! " சொல்ல தோன்றுகிறது.

அப்படி என்ன தான் நடன மொழியியின் மூலம் அவை பேசிக்கொள்கின்றன.

உணவு இருக்கும் இடத்தை ஒரு தேனி அறிந்து கொண்ட உடன் உணவிருக்கும் இடத்தை அது தன் கூட்டுக்குச் சென்று  உடனிருக்கும் தேனிக்களுக்கு உடலசைவுகளாக உணர்த்துகின்றன.

தேன் அங்க இருக்கு !!
                                                   
ஒரு நாள் ஆஸ்திரேலிய உயிரியலாளர்  Karl Von Frisch தோட்டத்தில் பூக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் , அப்போது பூவில் ஒரேயொரு தேனீ அமர்ந்து தேனருந்தி கொண்டிருந்திருக்கிறது, பின் சில விநாடிகளுக்கு அந்த தேனி மறைந்துவிட்டு இன்னும் சில தேனீக்களின் பட்டாளத்தோடு திரும்பி வந்து பூக்களை மொய்த்துக்கொண்டிருந்திருக்கிறது. தேனை கண்டு சென்ற முதல்  தேனீ எப்படி மற்ற தேனீகளுக்கு தேனிருக்கும் இடத்தை சொல்லியிருக்கும் என ஆராய்ச்சி செய்யத்துவங்கியுள்ளார்.




சூரியனின் திசை, புவியின் ஈர்ப்பு சக்தி, அதன் உயிரி கடிகாரம் (இன்ன இன்ன நேரத்தில் சூரியன் இன்ன இன்ன திசையில் தான் இருக்கும் என்பதை தீர்மானிக்கும் தேனிக்களின் உள்ளார்ந்த அறிவு), புறஉதா கதிர்களை கண்டறியும் திறன், திசை காணும் அறிவு இவைகளை அடிப்படையாகக் கொண்டு தேனிக்கள் நெளிவு சுளிவுகளுடன் கூடிய அந்த நடனத்தை ஆடி அதன் கூட்டில் உள்ள மற்ற தேனீக்களுக்கு சூரியனின் திசையிலிருந்து உணவு இருக்கும் இடத்தின் கோணம், திசை,  தூரம் போன்றவற்றை கூறுகின்றன.

 இந்த வீடியோவைப் பாருங்கள் , விளக்கமாக விளங்கிக்கொள்ள முடியும்.


இந்த நடனமொழியை கண்டுபிடித்து உலகத்துக்கு அறிவித்த ஆஸ்திரேலிய உயிரியலாளர்  Karl Von Frisch க்கு 1973 க்கான நோபல் பரிசு கிடைத்தது .
தேனீ க்களுடன் ...

*******

இது போல ஒவ்வொரு பிராணியும், தாவரமும் தத்தங்களுக்குள் தங்களுக்கே உரித்தான பிரத்யேக, சங்கேத மொழி முறைமைகளைப் பயன்படுத்தி உயிவாழ்தலுக்கு அவசியமான கருத்துக்களைப்   பரிமாறிக்கொள்கின்றன.

அஃறினைகளின் உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மொழிகளை ஆராய்ந்து  அவைகளை ரோபட்டுகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பிராணிகளின் மொழி நம் மொழி போல விசாலமானவைகள் அல்ல, Limited !  

இரை தேடுதல் ,இணை கவர்தல் , இனம் காணல் என குறுகிய எல்லைகளுக்குட்பட்ட குறைவான குறியீடுகளுடன் இருப்பவை. நம் பேசிக்கொள்ளும் மொழிகள்  போல சிக்கலான  சொல் அடுக்குகள், இலக்கண முறைகள் எல்லாம் கொண்டவைகள் அல்ல.

மனிதர்களைப்போல பள்ளிக்கூடங்கள் நடத்தி அவைகளின் எதிர்கால சந்ததியினர்களுக்கு அவைகள் பாடங்கள் 
சொல்லிக் கொடுப்பதில்லை. மொழியை  குரலாக, எழுத்துக்களாக, வீடியோவாக பதிவு செய்யும் தொழில்நுட்ப அறிவு அவைகளுக்குக் கிடையாது. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு விலங்குக்கும், தாவரத்துக்கும் inborn ஆகவே, தன்னிச்சையாகவே அதனதன் மொழியறிவும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 



இன்னும் பேசலாம்....


Labels: , ,

Wednesday, March 09, 2016

கனவுகள் (3)


னித உடல் என்பது பல அடுக்குநிலைகளாலான  உடல்களின் தொகுப்பு என்கிற நம்பிக்கை நம் பழங்கால இந்திய கலாச்சாரத்தில் இருந்திருக்கிறது, சமணர்கள் மனித உடல் ஒன்பது உடல்களின் தொகுப்பு என்கிறார்கள், புத்த மதத்தினர் 7 உடல்களின் தொகுப்பு என்கிறார்கள், பதஞ்சலியின் யோக சாஸ்திரம் , உபநிடதங்கள் மற்றும் நம் தமிழ் கலாச்சாரத்தின் மிக முக்கிய நூலான திருமந்திரம் போன்றவற்றில் மனித உடல் ஐந்து உடல் அடுக்குகளாக பரவி இருக்கிறது என்கிற குறிப்புகள் உள்ளன.

ஓஷோ  " The psychology of esoteric" என்கிற உரையில் மனித உடலின் ஒவ்வொரு உடல் அடுக்குக்கும் கனவு நிலைகள் உண்டு என்கிறார். அதாவது ஒவ்வொரு உடலும் அதற்கேயுரிய பிரத்யேக கனவுலகில் சஞ்சாரிக்கிறது என்கிறார்.

ஆனால் எல்லோர் உடலும் எல்லா அடுக்குகளாக வளர்வதில்லை, What you feed, will grow , என்கிற சித்தாந்தத்தின் படி எந்த அடுக்கை நாம் வளர்க்கிறோமோ அது வளரும்.அதன் கனவுகளை நாம் காண முடியும்.

புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் ஓஷோ கூறும், ஏழு உடல் அடுக்குகளையும் அதனதன் கனவு நிலைகளையும் சுருக்கமாக பார்க்கலாம்.

1. முதல் உடல் அடுக்கு: பூத உடல் (Physical Body)

நமது புற உடலில் ஏற்படும் பாதிப்புகள் இந்த உடலடுக்கின் கனவுகளை பாதிக்கிறது, "கண்ணில் ஒரு வழி இருந்தால்... கனவுகள் வருவதில்லை..." என வைரமுத்து பாடுவது இந்த உடல் சார்ந்த கனவுகள் தான்,  காய்ச்சலாக இருக்கும் போது நமக்கு துர்கனவுகள் ஏற்படுவது. வெளியே கேட்கும் பாடலை கனவுக்குள் கதை , திரைகதை, வசனம், டைரக்சன் செய்து கனவிற்குள் நிகழ்த்திக்காட்டுவது , அம்மா எழுப்பிவிட மேலே ஊற்றும் தண்ணீரை மழையாக மாற்றுவது எல்லாம் முதல் உடல் அடுக்கு சார்ந்த கனவுகள். பிராய்ட் சொல்லும் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளால் ஏற்படும் கனவுகள் கூட முதல் வகை தான்.

2.வெளி உடல் (Etheric Body)

இதுவரை சந்தித்தே இராத நபர்களை சந்தித்தல், உண்மையான சாமியார்கள் கனவில் வந்து அருள் வாக்கு சொல்லுதல், (சாய் பாபா ஒருவர் கனவில் தோன்றி அவரை அங்கே நீ செல்லாதே என்றிருக்கிறார், அவர் செல்ல வில்லை, அடுத்த நாள் அங்கே ஒரு பெரு விபத்து நிகழ்ந்திருக்கிறது,  //எல்லோர் கனவிலும் போய் சொல்ல வேண்டியது தானே என்கிறீர்களா !!  Remember நாம் எந்த உடலுக்கு தீனி போடுகிறோமோ அந்த உடல் வளர்கிறது, அது சார்ந்த கனவு காட்சிகள் தெரிகிறது.// ),  பார்த்தே இராத இடங்களை பார்த்தல் , தெய்வீக கனவுகள் , ராஜா கனவுகளில் தெய்வம் தோன்றி அந்த இடத்தில் தோண்டு என கூறி அங்கே அவர் அடுத்த நாள் தோண்ட அங்கே தெய்வ சிலை இருப்பது எல்லாம் இந்த வகை கனவுகள் தான்.

3.ஆகாச உடல் (Astral Body)

கனவுலகில் கடந்த ஜென்மங்களுக்கு செல்லுதல்,ஆகாச உடலின் கனவுகளில் சாத்தியமாம். கால, வெளிக்கு அப்பாற்பட்ட கனவுகள் இவை என்கிறார்கள். கடந்த ஜென்மத்திய நினைவுகளை இந்த கனவுகள் தான் தருகின்றனவாம்.நவீன மனோவியலில் கர்ல் ஜங்க் கூறும் Collective Unconcious என்கிற வகை  இது.

4.மன உடல் (Mental Body)

நம் கடந்த கால நினைவுகள் மட்டுமின்றி எதிர்கால நிகழ்வுகளையும் காட்டும் வல்லமை இந்த மன உடல் கனவுகளில் சாத்தியப்படுகிறதாம். நெருங்கிய உறவுகள் இறக்கப்போவதை, அவர்களுக்கு ஏற்படப்போகும் வாதைகளை காட்சிகளாக இந்த உடல்சார் கனவுகள் தான் நிகழ்த்துகின்றன என்கிறார்கள்.அதேபோல விஞ்ஞானிகளுக்கு விடை தெரியாத சிக்கலான விசயங்களுக்கு விடை தருவது , படைப்பாளிகளுக்கு படைப்பு தருவது எல்லாம் இந்த வகையறா கனவுகள் தான்.

5.ஆன்ம உடல் (Spiritual body)

தனிமனித அளவிலான உடல் அடுக்கு விரிவடைவது இங்கிருந்துதான், ஆன்மீக கருத்துக்கள், மத சார் நம்பிக்கைகள், Myths , போன்றவையெல்லாம் இந்த வகை கனவுகளால் தான் உருவாகியுள்ளன என்கிறார் ஓஷோ, ஆன்ம உடல் வளர்ச்சி பெற்ற பல நபர்களால் ஒரே கனவை ஒரே நேரத்தில் காண முடியும் என்கிறார். உலகின் வெவ்வேறு மதங்களுக்குள் ஒரே மாதிரியான Concepts இருப்பதற்கு இவ்வகை கனவுகள் தான் காரணம் என்கிறார்.

6.பிரபஞ்ச பேருடல்(Cosmic Body)

பிரம்மம் , மாயை, இறை தத்துவம், இறைவன் ஒருவரே, மற்றும் பல ஆன்மீகத்தின் உயரிய கருத்துகள் யாவும் இந்த உடலின் கனவுகள் தான் பெற்றுத்தந்தன என்கிறார்.

7.ஏதுமற்ற உடல் (Nirvanic Body)

உருவமற்ற உருவம், சத்தமற்ற சத்தம் ,போன்றவைகளை காணும் கனவு., அதாவது கனவற்ற நிலை இது , இதனை ஓஷோ முடிவிலாத கனவு (Eternal Dream)  என்கிறார் . Seems mysterious.


தலையை சுற்றுகிறது... :) . இன்றைக்கு இது போதும்

ஒருவரது கனவிற்குள் நாம் நுழைய முடியுமா !, அடுத்தவர் என்ன கனவு காண வேண்டும் என்பதை நாம் நிர்மாணிக்க முடியுமா, அடுத்தவர் காணும் கனவுகளை நாம் பார்க்க முடியுமா !  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கனவுகள் தொடரும் (4)

Labels: , , ,

Tuesday, March 08, 2016

கனவுகள் (2)


நாம் விழித்திருக்கும் நேரங்களில் நம் உடலில் அடினோசின் எனும் வேதிச்சுரப்பு சுரந்து ரத்தத்தில் கலப்பதால் தான் நாம் அசதியாக உணர்கிறோம், இந்த அடினோசினாகப்பட்டது இதய துடிப்பின் வேகம், தசைகளின் இயக்கம், மூச்சு என சகலத்தையும் வேகம் குறைத்து தூக்கம் என்கிற உணர்வை தருகிறது. எவ்வளவு விழித்து இயங்குகிறோமோ அவ்வளவு அடினோசின், எவ்வளவோ அடினோசினோ அவ்வளவு தூக்கம். இயற்கையான போதை .

அதுசரி நம் உடல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் களைத்துப்போய் கவிழ்ந்திருக்கும் நேரத்தில் காட்சிப்பதிவுகளை ஓட்டி கனவுகளை ஏன் ஏற்படுத்த வேண்டும்.கனவுகள் இல்லாத உறக்கமே முழுமையான ஓய்வு என இந்திய சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கனவுகளுக்கு காரணங்கள் என்ன, கடந்த பதிவில் அறிவியல் உலகம் கூறும் காரணங்களில் சிலவற்றைப் பார்த்தோம். சிலர் கனவுகள் காரணத்தோடு நிகழ்கின்றன என்கிறார்கள், சிலர் அவை காரணமற்ற கண்டபடியான காட்சிப்பதிவுகள் என்கிறார்கள் , நம் வகையில் இரண்டு வகைக் கனவுகளும் இருக்கின்றன என நம்பி வைப்போம் :)

பொதுவாக நமக்கு வரும் அத்தனை கனவுகளையும் கீழ்காணும் நான்கு வகைகளாக கூறிவிடலாம்.

1 அர்த்தமற்ற கனவுகள்
2 அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக வரும் கனவுகள்
3 எதிர்காலம் பற்றிய கனவுகள்
4 நமக்கு மேலே உள்ள பிரபஞ்ச சக்தி நமக்கு ஏதேனும் அறிவிக்கும் கனவுகள்

அதுசரி, அர்த்தமற்ற கனவுகள் என்று ஒரு வகை சொல்கிறீரே !!
நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தங்கள் இருக்கின்றனவா.,
சிக்மன்ட் பிராய்ட்,கார்ல் ஜங்க் பொன்ற மனோ விஞ்ஞானிகள் துவங்கி நம்மூர் மரத்தடி ஜோசியர் வரைக்கும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்கிறார்கள்.
நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம், (அப்போதெல்லாம் இன்டர்நெட் பரிட்சயம் இல்லை) நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவந்து ஒரு பழைய நோட்டுப்புத்தகத்தில் இன்ன கனவுக்கு இன்ன அர்த்தம் என குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன் . இரண்டு ,மூன்று புத்தகங்களை Refer செய்திருப்பேன்.

கீழ்காணும் கனவு பலன்கள் ஒரு புத்தகத்தில் சிக்கியது...

திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும்.

கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும்.
இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும்.

கனவில் கோயிலைக் கண்டால் குடும்பத்தில் சண்டை வரும்.

வீடு தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் செல்வம் பெருகும்.

உத்தரகாமிகாமகமஹாதந்திரம் என்கிற புத்தகத்தில் ஸ்வப்னாத்யாய விதி என்கிற படலத்தில் சில கனவு பலன்கள் கூறப்பட்டிருக்கின்றன அதில் மரணத்தை கனவில் காண்பது அசுபம் என்றும் மங்கல சின்னங்களை காண்பது சுபம் என்றும் எழுதியிருக்கிறார்கள்.,

பல்லிவிழும் பலன்கள் மாதிரி கனவுகளுக்கு பலன் கள் கூறும் அந்த புத்தகங்கள் ,ஒவ்வொன்றும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு விளக்கம் தரும். கடுப்பாகிப் போய் கனவுக்கு அர்த்தம் சொல்லும் பிராஜெக்டுக்கு பாதியிலேயே முற்றும் போட்டுவிட்டேன்.

Dreams are just Dreams , we project our own meanings into it என்கிறார் ஓஷோ, உண்மை தான்
நம் நமது புலன் உறுப்புகளின் உதவியோடு மனதிற்குள் சேகரித்த குப்பைகள் தான் கனவுகளாக தூக்கத்தின்போது அலையாடி விளையாடுகின்றன,
பிறவியிலிருந்தே பார்வையற்றவராக இருக்கும் ஒருவரின் கனவு சத்தங்களாகவும் ,வாசனைகளாகவும் மட்டுமே இருக்க முடியும், காட்சிகள் அதில் வருவதில்லை.

நாம் பார்த்த, கேட்ட அல்லது உணர்ந்த, விசயங்கள் தான் கனவில் வருகின்றன, அதேபோல கனவில் புதிய விசயங்கள் எதுவும் வருவதில்லை, என்கிறார்கள் விஞ்ஞானிகள்

நேற்று என் கனவில் நான் இதுவரை சந்தித்தே இராத ஒரு புதுப் பெண் என் Dream Girl வந்தாளே ! அது எப்படி என யோசிக்கிறபோது, சப்கான்சியஸாக, அல்லது அன்கான்சியஸாக உன் கண் உன்னையும் அறியாது கூட்டத்தில் இருந்த பெண் யாரையாவது மனதிற்குள் குறிப்பெடுத்திருக்கும், அந்த குறிப்பு தான் கனவின்போது கிளம்பி உன்னை Dream Girl ஐ தேடி அலைய கிளப்பி விடுகிறது என்கிறார்கள் கனவு விஞ்ஞானிகள் (oneirologists) .

Alright, அப்படியென்றால் கனவில் எதிர்காலம் வருவதெல்லாம் கப்ஸா என்கிறீர்களா !

பார்ப்போம்


கனவுகள் தொடரும் ... (3)

Labels: , , ,

Monday, March 07, 2016

கனவுகள் (1)

.

மீபத்தில் எனக்கொரு கனவு வந்தது ... , இது போன்றதொரு கனவு இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறது, அதற்கு பின் இப்போது தான்.

நாம் உறங்கும் இடமும் நமது கனவுகளை பாதிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்று என படித்தாக நியாபகம்., நைட் ஷிஃப்ட் -ல் நான் வழக்கமாக தூங்கும் இடத்தை மாற்றியது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.  கடந்த முறை இதேபோன்ற கனவு சென்னையில் வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்த நாளொன்றின் உண்டு மயங்கிய மதியத்தில் நன்பரொருவரின் அறையில் தட்டியது.  வினோதமான கனவுகள் !

கனவுக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறேன், அங்கே ஒரு கனவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஒரு கட்டத்தில் புறக்காரணி ஒன்று நிஜ உலகில் என்னை உறக்கத்திலிருந்து எழுப்புகிறது , சென்னைக் காலத்தில் பூட்டியிருந்த  அறைக்கதவு தட்டப்பட்டது., நேற்றைய கனவில் எங்கள் ஹோட்டல் செக்யூரிட்டி எழுப்புகிறார்.

நிஜ உலகில் நான் இன்னமும் துயிலில் தான் கிடக்கிறேன் .  இரண்டு சம்பவங்களின் போதும் இதே கதை தான்.

கனவு சம்பவம் - 1 

இடம்: நன்பரின் அறை

அறையின் உள்ளே : நான் மட்டும்

எழுப்பிவிட்ட புறக்காரணி : கதவு தட்டும் சத்தம்

சத்தம் கேட்டதும் எனது  கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த தூக்கத்திலிருந்து நான் விழித்துக்கொள்கிறேன், கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த கனவு களைந்துவிடுகிறது, தட்டப்பட்ட கதவை எழுந்து சென்று திறந்து விடுவது மாதிரியும்  சீக்கிரம் திறக்க மாட்டியா என என்னைத் திட்டியபடி  நன்பன் அறைக்குள் வந்து கட்டிலில் சாய்வது மாதிரியும் ,  திறந்த அந்த கதவை நான் மறுபடியும் சார்த்திவிட்டு அறைக்குள் வந்து மீண்டும் தூங்குவது மாதிரியும் கனவில் காட்சிகள் built up செய்யப்படுகின்றது. ,

ஆனால் நிஜத்தில் நான் எழுந்திருக்கவே இல்லை. திரும்பவும் கதவு தட்டப்படும் சத்தம் திரும்பவும் திறக்கிறேன், திரும்பவும் சத்தம் , சத்தம், சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கதவு திறந்தும் எப்படி சத்தம் மட்டும், தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல... சிலிர்ப்பியதில் நிஜ உலகிலிற்குள் எழுந்து கொள்கிறேன், நிஜ உலகில் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. போய் திறந்து விட்டேன். எவ்வளவு நேரமா தட்டிட்டே இருக்கேன் ... திட்டியபடியே நன்பன் அறைக்குள் வந்து கட்டிலில் சரிகிறான், நானும் .

கனவு சம்பவம்-2 

இடம்: ஜெனரேட்டர் அறை

அறையின் உள்ளே : நான் மட்டும்

எழுப்பிய புறக்காரணி : செக்யூரிட்டியின் குரல்

சத்தம் கேட்டதும் எனது  கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த தூக்கத்திலிருந்து நான் விழித்துக்கொள்கிறேன்,  , காலை ஆகிவிட்டது  விடிந்துவிட்டது என்ற காரணத்தால் தான் அவர் எழுப்பி இருக்கிறார் , கனவின் உள்ளே இருந்த உறக்கத்திலிருந்து நான் எழும்பி அன்றைய பணிகளை செய்ய ஆரம்பிக்கிறேன், தண்ணீர் ஏற்றும் மோட்டாரைப் போடுகிறேன் தண்ணீர் சிந்தி என் மேல் சிதற நான் நிஜ உலகிற்குள் பிரவேசிக்கிறேன், " என்னப்பா நல்ல தூக்கமா !"  "ம்.." கண்ணைக்கசக்கிக்கொண்டு எழுந்திரித்து மோட்டார் போட செல்கிறேன். தண்ணீர் தெளிக்கிறது.

 எனது இந்த கனவுகளின் பின்னாலான அறிவியல் காரணம் என்னவென்று தெரியவில்லை ,தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சரி, கனவுகள் பற்றி கொஞ்சம் உருப்படியாக எதாவது பேசலாம்.

 கனவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ...

கனவுகள் பற்றி பேச்சை ஆரம்பிக்கலாம் என யோசிக்கையில் மனதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் ஓடுகின்றன.

அறிவியல் , ஆன்மீகம், தத்துவார்த்தம் என ஒவ்வொரு டிபார்ட்மென்டிலும் கனவுக்கான Chapter கள்  இருக்கின்றன. கனவுகள் ஏன் வருகின்றன, அவற்றின் காரணம் என்ன, அவற்றின் அர்த்தங்கள் என்ன? , கெட்ட கனவுகள் எதனால் வருகின்றன? ,  கனவுகள் எதிர்காலத்தை சொல்லுமா ? , வித்தியாசமான கனவுகள், கனவுகள் பற்றிய ஆச்சரிய தகவல்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம் :)

கனவுகள் எதனால் வருகின்றன !

ஆழ்மனதின் ஆழத்தில் பதிந்துபோன உணர்வுகள் மற்றும் ஆசைகளே கனவுகளாக எழுகின்றன என்கிறார் நவீன மனோவியலின் தந்தை என அழைக்கப்படும் சிக்மன்ட் பிராய்ட். அதுமட்டுமின்றி அவர் தனது Interpretations of Dreams புத்தகத்தில் கனவுகள் எதுவாயினும் அதற்கு Sexual Motive ஒன்று  கட்டாயம் இருக்கும் என்கிறார்.

கார்ல் ஜங்க் என்ற சைக்காலஜிஸ்ட் கனவுகள் என்பவை stress எனப்படும் மன உலைச்சலில்  லிருந்து  விடுபெற நிகழ்கின்றன என்கிறார், ஏழை ஒருவன் செல்வந்தனாக இருப்பபது போல் கனவு காண்பது , நமக்கு வேண்டாத அந்த நபர் செத்துப்போவது போல காண்பது, அலுவலகம் வெள்ள நீருக்குள் மூழ்கிப்போவது  போன்றவை இவ்வகை தான் என்கிறார்.

கனவுகள் ஆராய்ச்சியை பொறுத்தவரை விஞ்ஞானம் கத்துக்குட்டி நிலையில் தான் இருக்கிறது என தோன்றுகிறது. காலத்திற்கு ஒரு கதை சொல்லிக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு ஆராய்ச்சி முடிவை சொல்லிக்கொண்டு, சகட்டுமேனிக்கு Theory களை சொல்லிக்கொண்டு திரிகிறது.  ஒரு சின்ன  Sample !

ஆரம்பத்தில் கனவுகள் REM எனப்படும் தூக்கத்தின் முதல் நிலையில் தான் வருகின்றன, மற்ற நிலைகளில் வருவதில்லை என்றது,

Rapid Eye Movement அதாவது "அதிவிரைவு கண் அசைவு " என்பதன் சுருக்கமே REM , உறங்கிகொண்டிருப்பவரின் மூடிய கண்கள் இமைகளுக்கு உள்ளாக அங்குமிங்குமாக அசையுமே அது தான் REM.

பின் REM - ல் கனவுகள் அதிகம் வருகின்றன., மற்றவைகளில் கம்மி என்றது .இப்போது , REM உறக்கத்தில் தூக்கமும் விழிப்பும் இருப்பதால் கனவுகள் நினைவில் இருக்கின்றன, மற்றவற்றில் ஆழ்நிலை உறக்கநிலைக்கு சென்று விடுவதால் கனவுகள் நினைவில் இருப்பதில்லை என்கிறது.

ஆழ்ந்த உறக்கம் இல்லாதபோது விழிப்பும் தூக்கமும் கலந்த நிலையில் இருப்போம் ,அப்போது நமக்கு வரும் கனவுகள் நியபகமாக இருக்கும், கனவுகள்  சில இடங்களில் படுக்கும் போது அதிகமாக இருக்க இதுதான் காரணமாம்  (எல்லா கனவுகளும் நியாபகம் இருக்கும்).

இன்னும்  என்னவெல்லாம் சொல்கிறார்கள் !

1) கனவுகள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளை அனெய்ரோலாஜி ( oneirology ) என்கிறார்கள், கனவுகளின் போது உடல் செயல் நடவடிக்கைகள், உள்ளுருப்புகளின் செயல்கள், மூளைச் செயல்பாடுகள், மூளை வெளியிடும் அலைகள் போன்ற இத்யாதிகளை ஆராய்கிறார்கள். கனவுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள்  இதில் இல்லை அது தனி டிபார்ட்மென்ட்- ல் வருகிறது :) . கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன , அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறார்கள் oneirologist கள். !

2) நமது உடலின்  புலன்கள் sleep mode ற்கு மாறும்போது, மூளை semi sleep mode ல் உடல் உயிருடன் இருப்பதற்கான அத்தியாவசிய இயக்கங்களான மூச்சு, இதயத்துடிப்பு, போன்ற இத்யாதிகளை கவனித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அது தன்னையும் , நியூரோ டிரான்ஸ்மிட்டர்களையும். (தகவலை கடத்தும் நரம்புகள்)  Refresh செய்துகொள்கிறது  இதை synaptic Efficacy Refreshment என்கிறார்கள்.அநேகமாக இது REM உறக்கத்தில்தான் நிகழ்கிறதாம். அப்போது மூளைக்குள்  குறைந்த அதிர்வெண்ணில் (14 Hz, என்கிற அளவில்) அதிர்வலைகள் எழுகின்றன, இந்த இயக்கத்தின் பலனாகவே  அதாவது மூளை தான் கண்ட ,கேட்ட, உணர்ந்த காட்சிகளை எல்லாம் consolidate செய்து தன்னை refresh செய்து கொள்வதால் தான் கனவுகள் எழுகின்றன என்கிறார்கள். 

4) நாம் தூங்கும் போது மூளை நரம்புகளுக்குள் நிகழ்கிற குருட்டாம்போக்கான சிக்னல் பரிவர்த்தனைகள் காரணமாகவே கனவுகள் நிகழ்கின்றன என்கிறார்கள்.


5) கனவுகளுக்கு அர்த்தம் சொல்வது, கனவுகள் எதிர்காலத்தை சொல்வது, கனவுகள் பல சிக்கல்களுக்கு விடை சொல்வது போன்றவைகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்லவில்லை. 

கனவுகளுக்கு விஞ்ஞானிகள் கண்டபடி காரணம் சொல்கிறார்கள், ஆனால் இன்று வரை அது ஒரு புதிராகவே நிலைத்து நிற்கிறது...

கனவுகள் தொடரும் ....

Labels: , , ,

Monday, November 16, 2015

மழை அதிகாரம்

                                 மழை அதிகாரம்


மழையைப் பழித்தல் 
வேலைக்குப் போக முடியல,
பொழப்ப கெடுத்துருச்சு,
நாசமாய்ப்போற மழை,
மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு,
சாக்கடை நெரஞ்சுடுச்சு,
ரோட்டுல நடக்க முடியல

நமக்குலாம் மழை தேவையா !,
போய் வேற எங்கயாவது பெய்ய வேண்டியதுதானே !
நாம இப்ப மழைய கேட்டோமா ?!


மழையை வியத்தல்:


 வானிருந்து பூமி வருதலால் அது அமிழ்தம்

                           - அறத்துப்பால் அதிகாரம் 2 .  வான் சிறப்பு

லகில் உயிர் நிலைத்திருப்பதற்கான மூலக் காரணங்களுள் தண்ணீரின் பங்கு கணிசமானது, அதிமுக்கியமானது.

தண்ணீர் - உலகிலும் சரி , உடலிலும் சரி முக்கால்வாசி இடத்தை இதுதான் ஆக்கிரமித்திருக்கிறது.நிலமும் சரி, உடலும் சரி தண்ணீர் போட்ட பிச்சை தான்.

எல்லா வகையிலும் மழை தான் தண்ணீரின் ஆதாரம்..

மழையைப் பொருத்தவரை அசுரத்தனம், அதீதம், அநியாயம், அதிகம் என்றெல்லாம் வரையறைகள் வைப்பது தவறு. பூமியின் தேவைக்கருதி அது பெய்கிறது., உங்களுடைய, என்னுடைய தேவைகருதி அல்ல.

சிலப்பதிகாரத்தின் வாழ்த்துப்பாடலில் இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் எனப் பாடி மழையை வணங்குகிறார், ( தற்போது தமிழகம் கண்டுகொண்டிருப்பது ஒருவகையில் மாமழை தான். மா.. மழை !).

                                    *****

டந்த சில தினங்களாக முன்பெப்போதும் போலில்லாது மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அநேக இடங்களை மூழ்கடித்து இன்னமும் பெய்துகொண்டிருக்கிறது. சில இடங்களை சிறிதும் இரக்கமின்றி தலைமுழுக தயாராகிக் கொண்டிருக்கிறது.

மழையில் நனைந்தபடி நடத்தல், மழையை ரசித்தபடி தேநீர் பருகுதல், பெய்து தேங்கிய மழைநீரில் காகிதக்கப்பல் விடுதல்... இவையெல்லாம் ரசிப்பதற்கும், நினைப்பதற்கும் அழகாய்த்தான் இருக்கின்றன. ஆனால் உண்மை வேறுவிதமாக வடிவெடுத்திருக்கிறது.

"வேலைக்கு போக முடியல", " பொழப்ப கெடுத்துருச்சு, "நசமாய்ப்போற மழை", " இந்த மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு, சாக்கடை நெரஞ்சுடுச்சு, ரோட்டுல நடக்க முடியல", ...

அநேக இடங்களில் மழை அழையா விருந்தாளியாக அவமதிக்கப்படுகிறது. நன்றியை தன் வாழ்வின் அங்கமாக கொண்ட தமிழினம் நன்றிகெட்டு எப்படி இப்படி ஆனதென்று தெரியவில்லை. உனக்கு வந்தா தெரியும் என என்னை நீங்கள் கைகாட்டலாம்., எனக்கு கவலையில்லை., மழையைப் பழித்தல் தவறு என்கிற என் கருத்தை நான் மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ! பெரும்பாலும் நாம் சுயநலமானவர்கள், குடை கொண்டுபோகாத போது , ஒதுங்குவதற்கு இடம் இல்லாதபோது, கொடியில் துணி காயப்போட்டிருக்கும்போது, மாடியில் கருவாடோ,வடகமோ,வற்றலோ உலரும்போது, மழை பெய்ய ஆரம்பித்தால் மழையைப் பழிக்கிறோம்.

வீடுநோக்கி செல்லும் குடையற்ற தினங்களில் நான் வீட்டிற்கு போகும் வரை மழை பெய்ய வேண்டாம் என நினைத்துக்கொள்கிறோம்.

பள்ளி/கல்லூரி நாட்களில் மழையின் காரணமாக விடுமுறை ஆக வேண்டுமென அடைமழை வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம். வேண்டாத தினங்களில் அலுவலகங்கள் மழைக்குள் மூழ்கி விடுமுறை கிடைக்காதா ? என ஏங்குகிறோம்.

நமக்கு உதவுவது மட்டும்தான் நல்லது, என்கிற சித்தாந்தம் நமக்குள் வேர்விட்டு ,கிளைவிட்டு மரமாகி காடாக விரவிக்கிடக்கிறது. எதுவும் உடனுக்குடன் பலன் தர வேண்டும் என்கிற இன்ஸ்டன்ட் கலாச்சார புத்திக்கு மழைநீர் நிலத்திற்குள் சென்று நாளைய சந்த்திக்கு உதவும் என்று சொன்னால் உறைக்கப்போவதும் இல்லை, அவர்கள் அதை நம்பபோவதும் இல்லை.

மாமழை !

சென்னையைப் பற்றி பேசியே ஆக வேண்டும் , சென்னையைப்பற்றி பேசாவிட்டால் இந்த மழைக் கட்டுரை ஜென்ம சாபல்யம் அடையாது. 
இந்திய பெருநகரங்களில் தண்ணீரை மிகக்குறைவாகப் பயன்படுத்தும் புண்ணியபூமி சென்னை என்கிறது ஒரு புள்ளிவிவரம். காரணம் தண்ணீர் சிக்கனம் இல்லை, தண்ணீருக்கான பற்றாக்குறை. பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள மக்கள்கூட்டம் ஆழ்துளையிட்டு பூமிக்குள்ளிருக்கும் நீரை உறிஞ்சுகிறது.

தமிழக தலைநகராம் சென்னையில் ஒரு வருடம் குப்பைக்கொட்டியவன் என்கிற முறையில் ஒரு விசயம் சொல்கிறேன். தமிழகத்திலேயே மிக மோசமான குடிநீர் சென்னையில் தான் இருக்கிறது, அதற்கு மெட்ரோ வாட்டர் என புனைபெயர் வேறு !

தண்ணீரை காசுக்கு வாங்கி குடிப்பது கௌரவம் என்னும்  நிலை மாறி சாவைத்தள்ளிப்போடும் சாகசக்கலை என்னும் அளவிற்கு சென்னையின் நிலைமை இருக்கிறது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் ,

சமநிலை என்பது பிரபஞ்ச தத்துவம். 

குறைகிற போது நிறைத்து சமன்செய்ய முயல்வது தான் இயற்கையின் குணம். காற்றழுத்தம் குறைவுபட்டால் அதிகமாக இருக்கும் இடத்திலிருக்கும் காற்று குறைவழுத்தத்தை நோக்கி நகரும், எலக்ட்ரான்களை குறைவு படுத்தினால் மின்னோட்டம் உருவாகி அவை சம்மாகும், நிலத்திற்குள்ளிருக்கும் நீரின் அளவை குறைத்துக்கொண்டே வந்தால் சமப்படுத்த தன்னால் ஆனதை இயற்கை செய்யும்.

மழையே பெய்யாது என நம்பி ! தண்ணீர் வற்றிப்போன ஆறு, குளம் , ஏரி, கண்மாய் என அத்தனையிலும் வீடுகட்டிக்கொண்டு வாழ்கிறோமே ! அந்த இடங்களில் மழை நீர் வந்தால் அது மழையின் பிழை என்று சொல்வது நியாயமா !?

அண்டை மாநிலங்களிடம் நீர் கேட்டு அழுகிறோமே கேரளத்திலும், கர்நாடகத்திலும் மரங்கள் அதிகம் இருக்கின்றன, அங்கே மனிதர்களுக்கு மட்டுமின்றி மரங்களுக்கும் காடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்கின்றோமா !
                                          *****


  • தமிழகத்தில் காமராசர் ஆட்சிக்குப் பிறகு அணைகளே அமையவில்லையாமே !!
  • பெய்த மழைத் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் என்ன செய்யும் , மோட்டார் போட்டு மறுபடியும் மண்ணுக்குள் அனுப்புமா, வடிகால் அமைத்து கடலுக்கு அனுப்புமா !? வற்றட்டும் என அப்படியே விட்டுவிடுமா !!
  • நிவாரண நிதி என்று எவ்வளவு பணம் கொடுப்பார்கள்
  • வரப்போகும் புயலுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் ?
  • இந்த மழை எப்போது நிற்கும்?

ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது ! வீட்டிற்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது,

கட்டுரையை பதிவதற்கு முன் மழையை எட்டிப்பார்த்தேன்..

சர சர குரலில் மறுபடியும் ஒரு மழைத்துளி என்னிடத்தில் பேசியது ...

"வியக்கவும் வேண்டாம், பழிக்கவும் வேண்டாம் .. , நகர மட்டும் கொஞ்சம் இடம் கொடுங்கள். "

அடித்தாலும் அணைத்தாலும் அவள் அன்னை என்போமே மழையும் கூட நம் அன்னை தான் !
ஹையா!! லீவு உட்டாச்சு 



Labels: , , , ,

Tuesday, December 02, 2014

எச்சரிக்கை

இலக்கியங்கள் - ஜாக்கிரதை



“நான் என் பாட்டுக்கு எழுதிக் கொண்டே போவேன், நீ புரிந்துகொண்டால் புரிந்துகொள் , இல்லாவிட்டால் சொறிந்துகொண்டு போ என்கிற மனப்பான்மை நல்லதல்ல”
                                                                                                                       -சுஜாதா
 தேர்ந்த பெண்ணியவாதி ஒருவரின் கவிதை ஒன்றை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதில் அவர் என்ன சொல்கிறார் என்பதை ஏனோதானோ என ஏதோ ஒன்றாகத் தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . வாசிக்கிறோம், வாசித்துப் புரியவில்லை ,திரும்ப திரும்ப வாசிக்கிறோம் ,புரிந்து கொள்ள முற்படுகிறோம் ,புரிகிறதோ இல்லையோ ஆனால் நம் மனம் ஒரு புரிதலை தானே சித்தரித்துக்கொள்கிறது.

 இப்படியான அரைகுறை புரிதல்கள் சரிதானா, என எனக்குள் சிந்திக்கும் போது, சர்வ நிச்சயமாக தவறுதான் என உள்ளுணர்வு சொல்கிறது.
தர்க்கரீதியாக என்னை நானே சமாதானம் செய்தபடி,எனக்கு நானே கூறிக்கொள்கிறேன், “சரியான ஒரு விசயத்தை தவறாக புரிந்துகொள்வது எப்படி தவறோ, அதேமாதிரி சரியான ஒரு விசயத்தை தவறாக புரிந்து கொள்ளப்படுகிற மாதிரி கூறுவதும் தவறுதான் “

இலக்கியம் என்றாலே ஏன் பெரும்பான்மையான மக்கள் பயந்து தலை தெறிக்க ஓடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு அது புரியவில்லை என்பது தான் காரணம். 

நம்மவர்களில் பெரும்பான்மையினரின் உலகம் என்பது அவசர அவசரமாக எழுந்து, இயற்கை உந்துதல்களை முடித்து, பல் தேய்த்து , குளியல் என்கிற பெயரில் தூக்கத்தை தண்ணீர் ஊற்றி கலைத்து ,துரித கதியில் தயாராகி வேகவேகமாக இட்லியையோ, தோசையையோ விழுங்கிவிட்டு அலுவலகம், பள்ளிக்கூடம்,கல்லூரி, தொழிற்சாலை என எங்காவது செல்கிறவர்களாலும், அரக்க பறக்க கனவனையோ , குழந்தையையோ பணிக்கோ, பள்ளிக்கோ தயார் செய்கிற தாய்க்குலங்களாலும் தான்  நிறைந்திருக்கிறது.

ஆங்காங்கே கிடைக்கிற ஓய்வு நேரங்களை தூங்கிக் கழித்தும் ஓய்வெடுத்துக்கொண்டும் கழிக்கவே பெரும்பான்மை சமூகம் விரும்புகிறது, இந்த இடைப்பட்ட ஓய்வு நேரத்தில் களைத்துப்போய் கிடக்கிறவர்களுள் என்னை மாதிரி யாராவது ஒருத்தர் அதிகப்பிரசங்கித்தனமாக கவிதைப் படிக்கிறேன், இலக்கியம் வாசிக்கிறேன் என இலக்கியமில்லாத இலக்கியத்தையும், கவிதையல்லாத கவிதைகளையும் கையில் எடுக்கிற போது , “ஓ !! இலக்கியம் என்றால் இதுதான் போல !!”  என்கிற ஆற்றாமையிலும் ,பயத்திலும் கடுப்பாகவோ அல்லது “ஐ !! கவிதை எழுதுவது இத்தனை எளிதா “ என்கிற விசப்பரிட்சையிலோ இறங்கி விட நேர்கிறது.

என்டர் கவிதைகளையும், புரியாத இலக்கில்லாத இலக்கிய குப்பைகளையும் சேர விட்ட பெருமை , சாட்சாத் நவயுக எழுத்தாளர்களையே சாரும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
முடிவில்லாத Dominos Effect  மாதிரி , இன்னமும் அடுக்கி வைத்த அத்தனையும் விழுந்துகொண்டே இருக்கிறது, விழுகிற ஒவ்வொன்றும் விழாதிருப்பதை விழுத்தாட்டிக்கொண்டே செல்கிறது.
எழுத்துலகில் Updation  அவசியம் தான் ஆனால் புதுமை என்கிற பெயரில் அர்த்தமற்ற குப்பைகளை குவித்தல் தவறு.

சரி.,

வாசிக்கிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது., அதிலும் தமிழ் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைந்துவிட்டது என சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அது உண்மையா ?,  உண்மை போல் தான் தெரிகிறது., அதேநேரம் வாசகர்களுக்கு பிடித்த மற்றும் தேவையான விசயங்களை புரிகிற வகையில் சலிப்புத்தட்டாத நடையில் எழுதித்தருகிற எழுத்தாளர்களும் குறைந்துவருகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்கிற மாதிரி எழுதிக்குவிக்கிறவனெல்லாம் எழுத்தாளன் என்கிற மூடநம்பிக்கை பரவலாக பரவி வருகிறது.

கண் ஆரோக்கியம் பற்றிய புத்தகம் ஒன்றின் அட்டையில் கண்ணாடியுடன் போஸ் கொடுக்கிறார் ஒரு எழுத்தாளர், தமிழ் வழிக்கல்வி பற்றி பேசுகிற எழுத்தாளர் ஒருவர் தன் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

எழுத்தாளன், கவிஞன், படைப்பாளி என்கிற அரியாசனங்கள் பல அற்புத  மனிதர்கள் ஏறியவை, ஏறுவதற்கு முன் ஏறுவதற்காக தயார் செய்து கொள்ளுங்கள், ஏறியிருக்கிறவர்கள் பொறுப்போடு எழுத்தாளுங்கள் !
ஒரு குட்டிக்கதை சொல்லிவிட்டு ஆரம்பித்து வைத்த விசயத்தை முடித்து விடுகிறேன் !

கொசுப்பிரச்சினையைக் குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடந்ததே !!, அந்த மாதிரி மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் அவர்கள் ஊரில் பெருகிவரும் எலித்தொல்லையைக் குறைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை ஆரம்பித்தது, ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுத்தார்கள், முடிவில் பூனை வளர்க்கும் ஐடியா பெரும்பான்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டது, வீட்டுக்கொரு பூனை அரசு சார்பில் இலவசமாக தரப்படும் என தீர்மாணம் எழுதப்பட்டது.

இலவச பூனை விநியோகம் இனிதே ஆரம்பித்தது.., அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், சாமானியர்கள், பணக்காரன் ,ஏழை என எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

தெனாலிராமன் வீட்டிற்கும் ஒரு பூனை கொடுக்கப்பட்டது, “ராஜா பூனையை மட்டும் தருகிறாரே , பூனை வளர்க்க மானியம் எதுவும் தரவில்லையே , எப்படி அந்த மானியத்தை அரசரிடமிருந்து சமயோசிதமாக வாங்கலாம்” என யோசனை செய்த தெனாலிராமனுக்கு ஒரு பொறி தட்டியது.

பூனையை கட்டிப்போட்டு பசியோடு போட்டான் , பசித்த பூனைக்கு சுடச்சுட சூடான பாலை வைத்தான்., குடிக்க முயன்று நாக்கை வைத்து வெந்துபோனது., தொடர்ந்து சூடான பாலையே வைக்கிறான், சூடான பதார்த்தங்கள், சூடான பால் , சூடு கண்டு சூடு கண்டு பாலையும், உணவையும் வெறுத்து விடுகிறது பூனை.
சில நாட்களுக்குப் பிறகு..,

அரசவை சார்பாக பூனைகளை வீட்டிற்கு வீடு சென்று சோதனை செய்யும் இலாகா தன் பணியை ஆரம்பிக்கிறது, தெனாலிராமனின் பூனையைப் பார்த்து அதிர்ச்சியான அரசு ஊழியர்கள் என்ன இது என விசாரிக்கிறார்கள் “ நான் என்ன செய்யட்டும் இந்த பூனை பாலையே குடிக்க மாட்டேன் என்கிறது, பாலைப் பார்த்தாலே பயந்து ஓடி விடுகிறது. “ எனக்கூறுகிறான்

“பால் குடிக்காத பூனையா... விளையாடுகிறாயா நீ ?”

“நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்..”

“அட ! ஆமாம், என்னடா இது வினோதமாய் இருக்கிறது”

அரசர் முன் அழைத்துச் செல்லப்படுகிறான் , அரசர் விசாரணையை ஆரம்பிக்கிறார், இவன் செய்த தில்லாலங்கடி வேலை யாருக்குமே பிடிபடவில்லை, அரசரே அவனிடம் வினவுகிறார் “ஏய் ராமா ! வழக்கம் போலவே இது நிச்சயம் உன் தந்திரமாகத் தான் இருக்க வேண்டும், எதற்காக இந்த தந்திரம்”  என்று

அரசனிடம் தன் சமயோசிதத்தைப் பயன்படுத்தி பரிசு பெருகிறான்  அதன்பின் மக்களுக்கு பூனை வளர்ப்பு மானியமும் பெற்றுத்தருகிறான் என்பதாக கதை முடிகிறது.

தற்கால வாசகனும் தெனாலி ராமன் வளர்த்த பூனை மாதிரி தான் பாடப்புத்தகம் பயமுறுத்தும் பயமுறுத்தல்களிடமிருந்து தப்பி வாசிப்பதற்காக புதிதாக புத்தகம் எடுப்பவனை கனமான, வாசிக்க சிரமமான, வாசித்தால் களைப்பாகிற வகையறா எழுத்துக்களைக் காட்டி பயமுறுத்தினால் அவன் என்ன செய்வான் !!
புத்தகங்களை கண்டு ஓடுவதைத் தவிர...

(இன்னும் பேசலாம்... )


Labels: , ,