Sunday, December 24, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 4


அத்தியாயம் 0 

எலக்ட்ரானைத் தேடி ...

1600-ல் பியர்ரி கஸாண்டி (Pierre Gassendi) என்ற பிரெஞ்சு அறிஞர் லுக்ரடியஸின் “பொருட்களின் இயல்நிலை பற்றி” என்கிற கவிதைத்தொகுப்பை வாசித்துவிட்டு  அணு பற்றிய கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்படுகிறார்., அதுபற்றி அதிதீவிரமாக யோசிக்கிறார்.,





  • அணுக்களே, நம் அகிலத்தின் விதைகள்.
  • பொருட்களின் உருவாக்கம் , சிதைவு, உருமாற்றம் மற்றும் அதன் அழிவு என்பதெல்லாம் அணுக்களின் இணைவு மற்றும் தளர்வின் காரணமாகவே ஏற்படுகிறது, 
  • அணுக்கள் நகரும், சத்தம் என்பது அணுக்களின் நகர்வினாலேயே ஏற்படுகிறது.
  •  காற்று அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் காற்று அணுக்கள் நெருக்கம் அடைவது தான் .. 
என்றெல்லாம் இவர் அணு பற்றி மேலும் சில புதிய சிந்தனைகளை சொல்லி வைக்கிறார்,

அணுவைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதை ஆராய்ச்சி செய்து மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும் என இவர் கூறிய கருத்து அணு என்கிற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?, அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அவர் காலத்திய அறிவு ஜீவிகள் பலரை யோசிக்க வைத்தது.

 அணு பற்றிய ஆராய்ச்சி என்கிற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாலோ என்னவோ! இவரை நவீன அணுவியல் கொள்கையின் தந்தை என அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.


 இந்திய அணுக்கொள்கை : கி.மு 600 களில் இந்தியாவில் ஆச்சார்யர் கனத் என்றழைக்கப்பட்ட கஷ்யப முனிவர் தனது வைஷேசிக சூத்திரம் என்கிற புத்தகத்தில் “ உலகில் உள்ள அனைத்தும் அணு என்கிற கண்ணுக்கேத் தெரியாத துகளால் உருவானவை, அவை ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகிறது”, என்று கிரேக்க அறிஞர்கள் அணு பற்றி யோசிப்பதற்கு முன்னரே குறிப்பிட்டு இருக்கிறார். (இந்த நூல் கி.மு.648-ல் யுவான்சுவாங்க்- ஆல் சீன மொழியில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டிருக்கிறது,) ஆனால் அணு பற்றிய இந்திய`க் கருத்துக்கள் உலகம் முழுக்க பரவிட வில்லை, அதேசமயம் நம் பழங்கால இந்திய அறிவு புற உலகம் சார்ந்து விஞ்ஞானமாக விரியாமல் அக உலகம் சார்ந்து யோகம்,தியானம் என்று மெய்ஞானமாக மலர்ந்திருக்கிறது..
                           
                             ***************************
           
அணு பற்றிய ஆராய்ச்சிகள்:


பியர்ரி கஸாண்டியின் கருத்துக்களை  அடிப்படையாகக் கொண்டு அணு என்னும் வஸ்து இருக்கிறதா என்று 1662-ல் ராபர்ட் பாய்ல் எனும் வேதியியல் விஞ்ஞானி  ஆராய்ச்சி செய்கிறார். முதன் முதலில் அணுவின் இருப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் இவரே ! 

அவர் எப்படி , எதை வைத்து , என்ன ஆராய்ச்சி செய்தார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னர்,  ஆராய்ச்சி செய்வது என்பதைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளலாம், 

ஆராய்ச்சி செய்வது எப்படி?

அறிவியல் உலகம் ஆராய்ச்சி செய்து முடிவுகளை கண்டறிய நான்கு படிநிலைகளைக் கொண்ட ஒரு வழிமுறையை வகுத்துள்ளது.,


  1. கவனித்தல் & தகவல் சேகரிப்பு : நிகழும் ஒரு விஷயத்தை உற்று நோக்கி , அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும், பின் அதுசார்ந்த தகவல்களை புத்தகங்கள், அதைப் பற்றிய முந்தைய ஆராய்ச்சிக் குறிப்புகள், வல்லுநர்களின் பதில்கள் , என எப்படியெல்லாம் சேகரிக்க முடியுமோ அப்படியெல்லாம் முயன்று போதுமான வகையில்   சேகரித்துக்கொள்ள வேண்டும் . ராபர்ட் பாய்ல் அவருக்கு முந்தைய அறிவியலாளர்கள் அணு பற்றி கூறின அத்தனை தகவல்களையும் திரட்டிக்கொண்டார்.
  2. கருத்துரு உருவாக்குதல்: அதன்பின் நமது ஆராய்ச்சியின் பலனாக என்னக் கிடைக்கப்போகிறது என்பதை ஒரு கருத்துருவாக உருவாக்க வேண்டும், ஆங்கிலத்தில் இதை Hypothesis என்கிறார்கள் .  இந்த கருத்துருக்கள் உண்மையா? அல்லது பொய்யா ?என்பதை கண்டறிவதே ஆராய்ச்சியின் நோக்கம்.
  3. சோதனை: இது தான் முக்கியமான படிநிலை,  அதாவது நாம் உருவாக்கி வைத்திருக்கும் Hypothesis  உண்மையா , பொய்யா என கண்டறியும் வழிமுறை. என்ன செய்ய வேண்டும் ,எப்படி செய்ய வேண்டும் எத்தனை முறை சோதனை செய்ய வேண்டும், என்பவைகளையெல்லாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். , சோதனைகள் செய்தல், சோதனை முடிவுகளை பட்டியலிடுதல் பொன்ற செயல்பாடுகள்  இந்த நிலையின் கீழ் வருகின்றன.
  4.   சோதனை முடிவு: ஆராய்ச்சி ,நமக்குதோன்றின கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறதா, நாம் கற்பிதம் செய்து கொண்ட Hypothesis சரியா ? , ஆராய்ச்சியின் பலனாக வேறு ஏதாவது புதிய விஷயங்கள் கிடைத்துள்ளனவா என்று ஒரு முடிவுக்கு வருதல்.
ராபர்ட் பாய்லின் ஆராய்ச்சி: 
ராபர்ட் பாய்ல்
ராபர்ட் பாயில்  தனது ஆரய்ச்சிக்கு  எடுத்துக்கொண்ட  Hypothesis கள் : 

1)காற்று என்பது அணுக்களால் ஆனது
2)காற்று அணுக்களால் ஆனது என்று நிரூபணம் செய்தால் அணுவின் இருப்பு உண்மை .

இந்த ஆராய்ச்சிக்கு ராபர்ட் பாய்ல்  எடுத்துக்கொண்டது  5மீட்டர் நீளமுள்ள  ஒரு  J வடிவ குழாய் அதன், மேல்முனை திறந்த நிலையிலும், கீழ்முனை அடைக்கப்பட்டும்  இருந்தது. மேல்முனை வழியே  திரவ நிலை உலோகமான பாதரசத்தை ஊற்றினார்.

ஊற்றப்பட்ட பாதரசம் படத்தில் காட்டப்பட்டிருப்பது மாதிரி , J  வடிவ  குழலினுள் சிறிது காற்று வெளியை விட்டுவிட்டு நிரம்பிக் கொண்டது,  பிறகு அவர்  இன்னும் கொஞ்சம் பாதரசத்தை ஊற்றினார் , இப்போது காற்று மேலும் அழுத்தப்பட்டது, பாதரசத்தை ஊற்ற ஊற்ற காற்று இன்னும் இன்னும் அழுத்தப்படுவதை பாய்ல் கவனிக்கிறார்.

பாயிலின் பரிசோதனை

எந்த விகிதத்தில் அதாவது இத்தனை எடை பாதரசம் ஊற்றும் போது, இத்தனை இன்ச் அளவு காற்று அழுத்தப்படுகிறது என்பதை  ஒவ்வொரு முறையும்  குறிப்பெடுத்துக்கொள்கிறார்,  (அழுத்தமும், அளவும் நேர்விகிதத்தில் இருக்கிறது, இவ்விரணடின் பெருக்கற்பலன் மாறிலி என பாய்ல் சொன்ன, இந்த விதி  பாய்லின் விதி என்று அழைக்கப்படுகிறது.)

எப்படி காற்று அழுத்தப்பட்டது ? , சிறிய வெளிக்குள் அது எப்படி பொருந்திக்கொண்டது ? என்றெல்லாம் பாய்ல் யோசித்து ஒரு லாஜிக்கல் முடிவுக்கு வருகிறார். ஒரு பஞ்சை அழுத்தும் போது அது சிறியதாக சுருங்குகிறது,அதேமாதிரி  ஒரு பிரெட்டை அழுத்தும்போது அது சிறியதாக சுருங்குகிறது., ஏனென்றால் அவற்றில் சிறு சிறு துளைகள் கொண்ட இடைவெளிகளுடன் கூடிய அமைப்பு  இருக்கிறது. அழுத்தும்போது அவைகளின் சிறுசிறு துளை இடைவெளிகளில் இருக்கும் காற்று வெளியேறி பஞ்சின் பகுதிகள் அல்லது பிரெட்டின் பகுதிகள் நெருங்கி வருகின்றன.

 காற்றை அழுத்தும் போதும் இதே மாதிரியான ஒரு விஷயம் தான் நிகழ்ந்திருக்க முடியும் , அதாவது காற்றில் உள்ள அணுக்கள் அதிக இடைவெளிகள் கொண்டவை, அவற்றை அழுத்தும் போது, நெருக்கும்போது  அவை அந்த இடைவெளிகளை மீறி நெருங்கி வருகின்றன. ஆக காற்றும் சிறு சிறு அணுக்களால் ஆனவை தான் , ஆக அணு என்கிற ஒன்று நிச்சயம் கற்பனை வாதம் கிடையாது, அப்படி ஒன்று சர்வ நிச்சயமாக இருக்கிறது என  தன் ஆய்வு  முடிவை  உலகுக்கு உரைக்கிறார்.

இடைவெளிகளுடன் காற்றணுக்கள்: அழுத்தம்=நெருக்கம்


அணு பற்றிய  இன்னபிற முக்கியமான ஆராய்ச்சிகளையும் , எலக்ட்ரான் எப்படி கண்டறியப்பட்டது என்பது பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...


                                                                                                                            -----அறிவோம்...

Labels: , , ,

Saturday, February 02, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-8


இதுவரை இணைய இணைய உலகின் ஆரம்ப கால கதையை வரலாற்றுப்பார்வையில் பார்த்தோம். இணையத்தின் ஆரம்ப கால கதையை நாம் இந்த பதிவிலிருந்து அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஒரே விசயத்தை வெவ்வேறு பார்வையில் பார்க்கும்போது அதன் வெவ்வேறு பரிமாணங்களை அறிய முடியும்.

ஆரம்ப கால இணையம்:

 "தேவையே கண்டுபிடிப்பின் தாய்"

றிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதர்களின் தேவையை அடிப்படையாக அடிப்படையாக வைத்து தோன்றியவைதான்.இணையத்தின் தேவை பற்றி மனித மனம் எப்போது சிந்திக்க ஆரம்பித்தது என்று நாம் கால சக்கரத்தை பின்னோக்கி நகற்றும் போது ...(ரொம்ப... பின்னாடி போனால் புறாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.,)

 உலகின் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு.
இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளான மின்சாரம்,தந்திமுறை,ரேடியோ போன்றவைகளின் துவக்கம் தான் இணையத்தினைப் பற்றி மனித மனம் சிந்திக்க காரணமாக அமைந்தது.
தந்தி முறையின் பரிணாம வளர்ச்சி தான் இணையற்று விரிந்திருக்கும் இப்போதைய இணையம் என்று ஆணித்தரமாக கூறலாம்.

                                 தந்திக்கருவி

டொக் டொக்....

இந்த கருவி எப்படி செயல்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா?,தகவலை அனுப்பும் இடத்தில் இந்த கருவியை அழுத்தி அழுத்தி மோர்ஸ் குறியீடு அடிப்படையில் ஒலிக்குறிப்புகள் ஏற்படுத்தப்படும். தகவலை பெறும் இடத்தில் அந்த ஒலிக்குறிப்புகள் கேட்கும் (கம்பி வழியாக பயணித்து), இந்த ஒலிக்குறிப்புகளை மீண்டும் தகவலாக மாற்றி புரிந்து கொள்ள வேண்டும். டொக்...டொக் டொக்.... என்று மட்டும் சத்தம் கேட்கும் அதை எழுத்துக்களாக மாற்றி தகவல் புரிந்து கொள்ள வேண்டும்...

இந்த மோர்ஸ் குறியீடுகளை படத்தில் காணலாம். புள்ளி "சின்ன டொக்...". கோடு "பெரிய டொக்..."

                       மோர்ஸ் குறியீடு - ஒலியை மொழியாக்கி புரிந்து கொள்ளுங்கள்....


SOS எனும் மோர்ஸ் குறியீடு மிகவும் பிரசித்தம், Save Our Souls என்று அர்த்தம் கொண்ட இந்த ஒலி க் குறியீட்டை ஆபத்து காலங்களில் பயன்படுத்துகிறார்கள்.இன்றும் கூட ஆபத்து கால தகவலுக்கு SOS என்று தான் பெயர் உள்ளது !



                                                    தந்தி கருவி இயக்கப்படுகிறது... டொக்... டொக் டொக்...

தேவை கண்டுபிடிப்புகளின் தாயாக இருக்கிறது என்றால் கற்பனை அவற்றின் தகப்பனாக இருக்கிறது. பெறும்பாலும் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அறிவியல் சார்ந்த பொருளும் ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு மனித கூட்டத்தின் கற்பனையாகவே முதலில் உருவாகி இருக்கும்.

இணையம் பற்றி இணையம் உருவாவதற்கு முன்பே யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா ?.
1863 -ல் அறிவியல் புனை கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் " ஜூல்ஸ் வெர்னெ "(Jules verne) இணையம் பற்றி சிந்தித்திருக்கிறார், அவர் காலத்தில் தந்தி முறை செயல் பாட்டில் இருந்திருக்கிறது ,இந்த தந்தி முறையில் அந்த காலத்தில் மோர்ஸ் குறியீடுகள் எனப்படும் சங்கேத ஒலிக்குறியீடுகளை அனுப்புவது மட்டுமே அப்போதைய சாத்தியக்கூறாக இருந்தது, ஆனால் "ஜூல்ஸ்" Telegraphy எனப்படும் தந்தி முறையின் மேம்பட்ட வடிவமாக புகைப்பட தந்தி முறை (Photo Telegraphy) பற்றி கற்பனை செய்திருக்கிறார், புகைப்பட தந்திமுறை மூலமாக எழுத்து படைப்புகள், கையெழுத்துக்கள்,புகைப்படங்கள் போன்ற இன்னபிற விசயங்களை அனுப்ப முடியும் என்று கற்பனையில் கண்டறிந்து கூறியிருக்கிறார்.

ஜூல்ஸ் வெர்னே சில குறிப்புகள்:

இவரு தாங்க அந்த ஜூல்ஸ் வெர்னெ

துமட்டுமல்ல இந்த மனிதர் நிலவிற்கு மனிதன் செல்வது பற்றிக்கூட தன் கதைகளில் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது புத்தகங்களில் சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
Twenty Thousand Leagues Under the SeaA Journey to the Center of the EarthAround the World in Eighty DaysThe Mysterious IslandDick Sand, A Captain at Fifteen  போன்றவை குறிப்பிடத்தக்கவை.பிற மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டாவது நபர் இவர் (முதல் நபர் அகதா கிரிஸ்டி).இவர் அறிவியல் புனைக்கதைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 

இணைப்பு கம்பிகள்:

மின் வழி தகவல் தொடர்பு தந்திவழி தகவல் தொடர்பு முறை,மற்றும் தொலைபேசி முறை வளரத்துவங்கிய காலத்தில் தான் வளரத்துவங்கியது,உலகின் முதல் கம்பிவழி இணைப்பில் தகவல் பரிமாற்றம் 1844 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்க்டன் மற்று பால்டிமோர்(Baltimore) ஆகிய இரு இடங்களுக்கிடையே நிகழ்ந்தது 17 வருடங்களில் 1858 வாக்கில் தந்திகம்பிகள் அமெரிக்காவின் பெரும்பான்மை இடங்களை இணைப்பில் கொண்டு வந்திருந்தது.
அந்த கால தொலைபேசி

  
ஜூல்ஸ் வெர்ன் அவர்களின் கற்பனை உயிர் வடிவம் பெற 100 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. இணையத்திற்கான இணைப்பின்  அடிப்படையாக இந்த தந்திமுறை தான் இருந்திருக்கிறது,நாம் இன்று பயன்படுத்துவது கூட இதன் மேம்பட்ட இணைப்பு முறைதானே தவிற புதிய சரக்கு கிடையாது.

யோசித்து பாருங்கள்...

 யிரமாயிரம் எண்ணங்கள்,எழுத்துக்கள்,கணக்கில்லா கற்பனைகள்,கவிதைகள்,புகைப்படங்கள்,இசை,தகவல்கள்,பண பரிவர்த்தனைகள்,வியாபாரம் என்று எத்தனையோ விசயங்களை சுமந்து கொண்டு சத்தமில்லாமல் கடலுக்கடியில்,பூமிக்கடியில்(கம்பி வழி இணைப்பு),விண்வெளியில் (செயற்கை-கோள் இணைப்பு) என நம்மை இணைக்கும் இந்த இணையத்தின் பிரமாண்டத்தை...!


                                                                                                                                  இன்னும் கூறுவேன்

மின்னஞ்சல் முகவரி:vijayandurairaj30@gmail.com

Labels: , , , , , ,

Friday, January 18, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -16




கடந்த பதிவில் உலகின் முதல் ஹார்டுவேர் -சாப்ட்வேர் இணைப்பாக வடிவமைக்கப்பட்ட ஜேகுவார்ட் தறி பற்றி பார்த்தோம் .கைத்தறிக்கும் கணிப்பொறிக்கும் என்ன சம்பந்தம்?...கடந்த பதிவை கேள்வியுடன் முடித்திருந்தது நினைவிருக்கலாம் . 

ஆரம்ப கால கணினிகள் துளை இடப்பட்ட அட்டைகள் (punched cards ) பயன்படுத்தின ,அதே அட்டைகளை தான் கைத்தறிகளும் பயன்படுத்தின 


இந்த பதிவில் கணிப்பொறியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தின் துவக்கத்தையும் பார்க்கலாம் .

கைத்தறி கணிப்பொறி : 
 

ஜேகுவார்ட் கைத்தறி  உலகின் முதல் நிரல்படு சாதனம்(programmable device).,புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் மனிதன் தரும் கட்டளைகளை புரிந்து வேலை செய்யும் சாதனம் .

மனிதனின் கட்டளைகளை எந்திரம் எப்படி புரிந்து கொள்ளும் ?

 எந்திரங்களுக்கு நாம் பேசுகிற மொழி புரியாது ,மனித மொழியை புரிய வைக்கவும் முடியாது (இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு :இந்த கட்டுரையின் ஏதேனும் பத்தியை கூகுள் மொழி பெயர்பில் கொடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பாருங்கள் ).மொழி இயங்கும் முறை மிகவும் சிக்கலானது,எந்திரம் மனித மொழியை புரிந்து கொள்ள காலங்கள் பல ஆகலாம் .
  சரி நாம் விசயத்திற்கு வருவோம் எந்திரத்திற்கு புரிகிற மாதிரி கட்டளை இட இரண்டே வழிமுறைகள் தான் இருக்க முடியும்
 1. மனித மொழியை எந்திரத்திற்கு கற்று தரும் கடினமான வழிமுறை
2.எந்திரத்தின் மொழியை நாம் கற்றுக்கொண்டு கட்டளை இடும் எளிய வழிமுறை
 இதில் இரண்டாவது வழிமுறை மூலமாகவே எந்திரங்களுக்கு கட்டளைகள் இடப்படுகின்றன .

எந்திரம்... மந்திரம்... தந்திரம்... :
 
எந்திரங்களுக்கு  எந்திர மொழி மூலமாக கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன ,அதை எந்திரங்கள் புரிந்துகொண்டு வேலையை முடித்துக்கொடுக்கின்றன ,அது சரி மனிதனுக்கு எப்படி எந்திர மொழி தெரியும் ??,(ரொம்ப யோசிக்காதீர்கள் ).அது எப்படி என்பதை அடுத்த பத்தியில் இருந்து  பார்க்கலாம் .

தண்ணீர் குழாயை வல இடமாக சுற்றினால் குழாயில் இருந்து தண்ணீர் வருகிறது,அதை திசை - மாற்றி திருகினால் தண்ணீர் நின்று விடுகிறது ,தண்ணீர் குழாயின் மொழி இது .தண்ணீர் குழாய்  இரண்டு கட்டளைகள் மட்டுமே தெரிந்த ஒரு குழந்தை எந்திரம் .இந்த இரு கட்டளைகளை நாம் எப்படி மாற்றி மாற்றி கொடுத்தாலும் அது செய்யும் , இது போன்று ஒவ்வொரு எந்திரத்திற்கும் ஒவ்வொரு மொழி உண்டு .ஆனால் பாவம் தண்ணீர் குழாய்க்கு "வாசிக்க தெரியாது " ,சில எந்திரங்களுக்கு வாசிக்க தெரியும்...(எப்படி வாசிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் கமெண்ட்-ல் சொல்லுங்கள் அல்லது vijayandurairaj30@gmail.com   மெயில் அனுப்புங்கள் )

எந்திர மொழிகளை  பற்றிய ஞானம் மனிதனுக்கு எப்போது வந்தது ???

1880 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு தனது நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது , அதை நடத்தி கணக்குப்போட்டு ,எண்ணிக்கையை சொல்ல அமெரிக்க அரசாங்கம் எடுத்துக்கொண்ட கால அளவு ஏழு ஆண்டுகள் (அம்மாடியோவ்!),
 1890-ல் மீண்டும்  கணக்கெடுப்பை நிகழ்த்த திட்டமிட்டது ,இந்த காலகட்டத்தில் மக்கள் தொகை ஓரளவு வளர்ச்சி அடைந்திருந்தது ,இதனால் இம்முறை சென்சஸ் கணக்கெடுப்பை செய்ய 13 வருடம் ஆகலாம் என்று தோராயமான கணிப்பு சொல்லப்பட்டது .இதற்கு ஏதேனும் மாற்று வழி உள்ளதா? என்று ஆராய்ச்சி செய்து சென்சஸ் கணக்கெடுப்பை விரைவாக நடத்த வேண்டும் என்று  அமேரிக்கா முடிவு செய்தது .

கணக்கெடுப்பை எளிதாக்கிய துளை இடப்பட்ட அட்டைகள் :

ஹெர்மன் ஹாலரித் (Herman Hollerith) என்ற புள்ளியியலாளர்  இந்த பிராஜக்ட் பற்றிய சிந்தனையுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் ,அப்போது ரயிலில் டிக்கெட் கொடுக்கும் நபர் டிக்கெட்டில் துளை  இடுவதை பார்த்தார் ,அந்த துளைகள் பயணியின் வயது மற்றும் அவரது பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்கிற தகவல்களை குறிக்கும் விதமாக இருந்தன . (நம்மூர் பேருந்துகளில் கட்ரக்டர்கள் கிழித்து தரும் டிக்கெட்டில் அந்த கிழிந்த இடம் நாம் வண்டியில் ஏறின இடத்தை குறிக்கும் )

டிக்கெட்டில் துளை இடும் எந்திரம் ரயில் கண்ட்ரக்டருடன் 


                                                                               துளை இடப்பட்ட டிக்கெட்

அவர் மனதில் ஒரு மின்னல் ,இதே முறையை நாம் சென்சஸ் கணக்கெடுக்க பயன்படுத்தினால் என்ன ?,சென்சஸ் கணக்கெடுப்பு பிரச்சனைக்கு தீர்வுடன் ரயிலில் இருந்து இறங்கினார் ஹாலரித்.


ஹாலரித்  சென்செக்ஸ் எடுக்க பயன்படுத்திய அட்டைகள் 12 வரிசை மற்றும் 24 நெடுவரிசை (12 rows  ,24 columns  ) உடைய அட்டைகள்

அந்த அட்டைகள் சென்செக்ஸ் கணக்கெடுப்பில் எப்படி உதவின ?,துளை இடப்பட்ட அட்டைகள் எப்படி கணினி வளர்ச்சிக்கு காரணமாயின என்றும் அடுத்த பதிவில் பார்க்கலாம்...






Labels: , ,

Friday, January 04, 2013

மாயஉலகம் (தொடர்பதிவு -15)


(உலகின் முதல் ஹார்ட்வேர் -சாப்ட்வேர் தொழில்நுட்பம் )
இது பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படை விசயத்தை புரிந்து கொள்வோம் ...

ஹார்ட்வேர் என்றால் என்ன ?? சாப்ட்வேர் என்றால் என்ன ??, உங்களுக்கு இதற்கான விடை தெரிந்திருக்கலாம்,இருந்தாலும் இதன் விளக்கத்தை இன்னொரு முறை(சாதரண வார்த்தைகளில்) தெரிந்து கொள்வோம் .

வன்பொருள் (hardware ) -மென்பொருள் (software ) ??:

மனிதனின் செயலை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட "பல அல்லது சில பொருட்களின் கூட்டாக "(compound)உருவாக்கப்பட்ட எந்தவொரு சாதனமும் "எந்திரம்" என்றழைக்கப்படும்.எந்திரம் மனிதனால் இயக்கப்படும் பொருளாக மட்டும் இருந்து வந்த காலங்களில் வன்பொருள் மென்பொருள் என்று பாகுபடுத்தி பார்க்கும் அவசியம் இல்லாதிருந்தது ,எந்திரத்தை தானாக (automatic ) ஒரு வேலையை செய்ய வைக்க முயன்ற முயற்சியின் விளைவாக விளைந்தது தான் மென்பொருள் எனும் விஷயம் .தானாக வேலை செய்யும் எந்திரம் (automatic machine ) என்று அழைக்கப்படும் எந்திரங்கள் உண்மையில் தானாக வேலை செய்கின்றனவா??

தானியங்கி எந்திரங்கள் :

ஆழமாக யோசித்து பார்த்தால் தானாக வேலை செய்யும் எந்திரங்கள் என்று ஒன்று இல்லவே இல்லை , மனிதனின் கட்டளைகளின் படியே அவை வேலை செய்கின்றன , தானியங்கி எந்திரங்கள் எப்படி வேலை செய்ய வேண்டுமென்று முன்பே அவைகளின் மூளைகளில் கட்டளைகள் எழுதப்படுகின்றன ,இந்த கட்டளைகளின்படியே அவை வேலைகளை "தானாக" செய்கின்றன.

வன்பொருள்:

கண்ணால் பார்க்க முடியும் எந்திர பாகங்கள்.

மென்பொருள்:

எந்திரங்களை தானாக வேலை செய்ய அவற்றின் மூளைகளில் எழுதப்படும் கட்டளைகளின் தொகுப்பு .


உலகின் முதல் ஹார்டுவேர் -சாப்ட்வேர் :
உலகின் முதல் தானியங்கி கருவி ஒரு நெசவு எந்திரம் ,இந்த தானியங்கி நெசவு எந்திரத்தை 1801- ல் ஜோசப் மேரி சார்லஸ் (செல்லப்பெயர் ஜேக்குவார்ட் ) என்றழைக்கப்பட்ட வியாபாரி ஒருவர் வடிவமைத்தார் ,இந்த தானியங்கி நெசவுக்கருவி "ஜேக்குவார்ட் -தறி "(jacquard loom ) என்று சார்லஸ் -ன் செல்லப்பெயரின் மூலமே செல்லமாக அழைக்கப்பட்டது .

ஜேக்குவார்ட் தறி வடிவமைக்கபடுவதற்கு முன்பே சிற்சில தானியங்கி தறிகள் நடைமுறையில் இருந்துள்ளன.இவைகள் நமது ஜேக்குவார்ட் -தறியின் முன்னோடிகள் . இந்த கருவிகளை மேம்படுத்தியே ஜேகுவார்ட் தறி வடிவமைக்கப்பட்டது.ஆனால் முதல் வெற்றிகரமான தானியங்கி கருவி ஜேக்குவாட்-னுடையதே .இந்த கருவி மூலமாக நாம் விரும்பும் வடிவமைப்புகளை துணிகளில் உருவாக்க முடிந்தது .

நெசவு :
நெசவு செய்யும் எந்திரத்தில் பக்கவாட்டில் நூலிழைகள் இறுக்கி கட்டப்பட்டிருக்கும் (Weft),பக்கவாட்டில் உள்ள நூலிழைகளின் ஊடாக நெட்டுவாக்கில் (warp) நூலிழைகளை பிண்ணுதல் என்ற முறையில் துணிகள் நெசவு செய்யப்படுகின்றன


.


ஜேக்க்வார்ட் தறியின் உதவியுடன் சிக்கலான வடிவமைப்புகளை கூட துணிகளில் டிசைன் செய்ய முடிந்தது ...

,இந்த டிசன்களின் படங்களையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள படங்களில் காணலாம் .
BROKAT
DAMASK
MATELASSE

ஜேகுவார்ட் நெசவு எந்திரத்தின் உதவியுடன் டிசைன் செய்யப்பட்ட ஜேகுவார்ட்

ஜேக்குவார்ட்-ன் இந்த படம் இவர் உருவாக்கிய தறி எந்திரத்தின் உதவியில் உருவாக்கப்பட்டது
இதை உருவாக்க 24,000 துளை இடப்பட்ட அட்டைகள் (punched card ) பயன்படுத்தப்பட்டன ! ,இந்த துணி தற்போது லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது

எப்படி இயங்கியது இந்த கருவி ??
இந்த தறியில் punched cards என்றழைக்கப்பட்ட ஓட்டை போடப்பட்ட அட்டைகள் பயன்படுத்தப்பட்டன (இவைதான் மென்பொருள் (software),அட்டைகளில் இருந்த துளைகளின் மாறுபாடுகளுக்கு ஏற்ப டிசைன்கள் உருவாக்கப்பட்டன.
இவைதான் மென்பொருள் (software )
ஜேக்குவர்ட் தறியில் போலுஸ் (bolus hooks ) எனும் சிறப்பு வகை கொக்கிகள் இருந்தன .இந்த கொக்கிகள் மூலமாகவே நெசவு எந்திரத்தில் நூற்பு வேலை செய்யப்பட்டது .
போலுஸ் (bolus hooks )

ஓட்டை அட்டைகளில் (punched cards ) துளை உள்ள பகுதி அடைப்பு பகுதி என இரு பகுதிகள் இருக்கும் ,போலுஸ் கொக்கிகள் நூலை தறியில் நூற்பு செய்யும் போது இந்த அட்டைகளில் உள்ள துளையுள்ள பகுதியில் நூலின் அடர்த்தி அதிகமாகவும் ,துளைஇல்லாத இடங்களில் நூலின் அடர்த்தி குறைவாகவும் நெய்யப்படும் ,இப்படியாக ... அடர்த்தி குறைவு மற்றும் அடர்த்தி மிகுதி அடிப்படையில் துணியில் டிசைன்கள் ஏற்படுத்தப்பட்டன.,(ஒரே டிசைன்-பேட்டர்ன் துணியில் திரும்ப திரும்ப வரும் படியாகவும் செய்ய முடிந்தது).
நெசவு எந்திரத்துக்கும் கணிப்பொறிக்கும் என்ன தொடர்பு ? அடுத்த பதிவு வரை காத்திருங்கள்....






Labels: , ,