Wednesday, November 09, 2016

வார்தைகளின் வார்த்தைகள்



எல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் எல்லோராலும் ஒரே மாதிரி இருந்துவிட முடிவதில்லை , ஆளுக்கேற்ற மாதிரி ஆடை உடுத்தி இடத்திற்கேற்ற மாதிரி நடிக்க வேண்டிய நாகரீக கோமாளிகளாகத்தான் நாமனைவரும் இருக்கிறோம், "உண்மையாக யாருமே இல்லை" என வருத்தப்படுகிறவர்களால் கூட உண்மையான முகங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதும், அவர்களால் கூட உண்மையான முகத்துடன் எப்போதும் இருக்க முடிவதில்லை என்பதும் தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அவன் ஒரு நடிக்கத்தெரியாத அப்பாவி, மிக எளிதில் மனமுடைந்து போகும் இலகுமன பிராணி , ஆளுக்கேற்ற மாதிரி பச்சோந்தியாக தெரியாத படுபாவி., போலிகளை கண்டு கண்டு கடுப்பாகி வெறுப்பின் உச்சத்தில் யாவரையும், யாவற்றையும் வெறுத்து ,தனது நம்பிக்கையை வார்த்தைகள் கொண்டு கிழித்தெறிந்து எரித்தழிக்க முயல்கிறான் அவன் . வார்த்தைகள் மெல்ல மெல்ல அர்த்தமிழந்து அவனிடத்தில் மௌனமாகிப்போய் நிற்கிற போது அவன் வார்த்தைகளை வார்த்தைகளால் ஏசுகிறான்... (வார்த்தைகளும்  வாய்திறந்து அவனோடு பேசின ...)

ஏய் வார்த்தைகளே !!
ஏய் வார்த்தைகளே !!

உங்களை வீசித்தானே எல்லோரும்
காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் !
என் கைக்கு மட்டும் ஏன் உங்களை
வீசி எரியும் வித்தை வாய்க்கவில்லை

உங்களை கொண்டு தானே
என்னை ஏமாற்றுகிறார்கள்
ஏன் நீங்கள் என்னிடத்தில்
வாய் திறந்து சொல்லவில்லை !

உங்களை நம்பித்தானே
என்னையே மறுதலித்து
என்னையும் அடமானம் வைத்தேன்
ஏன் நீங்கள் தடுக்கவில்லை !

அவனி முழுக்க நிறைந்திருக்கும்
அத்தனை வர்த்தைகளும்
ஆதரவேதுமின்றி !
அர்த்தமிழந்து அலையட்டும் !

ஹ்ம் ..

உங்களை ஏசக் கூட
உங்கள் உதவிதானே
தேவைப்படுகிறது
எங்களுக்கு !
அந்த திமிரோ ?

உங்களையே சேர்த்து
உங்களிடத்தில் கேட்கிறேன்
உள்ளது உள்ளபடி
உண்மை சொல்வீர்களா ??

உங்களின் நிரந்தர இருப்பிடம் எங்கே ?
எங்கே இருக்கிறீர்கள் நீங்கள் ?
பேச்சின் பின்னாலா ?
எழுத்தின் பின்னாலா ?
வாசிப்பின் பின்னாலா ?

பின்னும் நாங்களில்லை
முன்னும் நாங்களில்லை
எல்லாமும் எல்லோரும்
எங்கள் பின் இருப்பதனை
அறியாயோ மானிடனே !
சர்வம் வார்த்தை மயம் !!

உங்களைக்கொண்டு தானே
நாங்களே பேசிக்கொள்கிறோம்
நீங்கள் கூட பேசுவீர்களா?
இத்தனை கால மௌனம்
உடைபட்ட மாயம் ?

இதுவரைக்கும் எம்மை யாரும்
உம்மைப்போல எரித்ததில்லை
உண்மையைச் சொல்லச் சொல்லி
உலுக்கியும் எடுத்ததில்லை.

ஓ!
அழுதிட்ட பொழுதுகளில்
அறுதலாய் வரவில்லை
அடித்துலுக்கிக் கேட்கையிலே
பதில் சொல்ல வந்தீர்களோ??

பேசப்படும் பொருளும்
பேச்சும் பொருளும் நாமே !!
பேச்சில் மறைந்திருக்கும்
சத்தமும் அமைதியும் நாமே !!

கேட்கிற சக்தியிருந்தால்
கேட்கமலேயே கேட்கும்
நாங்கள் கூறும்
ஆறுதல்கள் அறிவுரைகள்
அமைதியான பேருரைகள் !

ஏனெனக்குக் கேட்கவில்லை?

அழுகிற பொழுது அழுகையிலும்
சிரிக்கிற பொழுது சிரிப்பினிலும்
பேசுகிற போழுது பேச்சினிலும்
எதன்போதும் ஏதோ ஒன்றால்
எப்போதும் எம் குரலை
மறைத்து விடுகிறீர்கள் !!

மறுபடியும் உம்மை கேட்கிறேன்
ஏனெனக்கு
உங்களை வீசியெறிந்து
காரியம் சாதித்துக் கொள்ளும்
வல்லமை வாய்க்கவில்லை?

யாருக்கும் கேட்டிராத எம் குரலை கேட்பவனே !!
வல்லமை இல்லையென்று
சொன்னவன் எவனுனக்கு !!
எதைக் கொண்டு எமையிழுத்தாய் !

 எப்போதும் எம்மருள் தப்பாது உமக்குண்டு !
 ஒரு நிமிசம்....
 கயவர்களுக்கும் கூட
 உன் வல்லமை வாய்த்திருக்கிறதே ??
 காரணம் ??

 எம்மை நம்பி வாய்திறக்கும் யாவருக்கும்
 நன்று தீது பாராமல் எங்களருள் கிடைப்பதுண்டு !!

 எல்லோர் வார்த்தைகளையும் நம்பி விடாதே
 ஆனால் வார்த்தைகளின் உள்ளிருக்கும்
 வார்த்தைகளின் வார்த்தைகளை நம்பு !!....
 வேறு யாரோ கூப்பிடுகிறார்கள்
 வருகிறோம் !!!!
    
   

Labels: , , ,

Wednesday, March 02, 2016

கவிதையோடு சில நிமிடம் (கவிஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு)


ரவு தன் அகண்ட கருவிழிகளைக் காணும் திசையெங்கும் பரப்பியபடி விழித்திருந்தது. என் காதுகளுக்குள் விக்கலும், விசும்பலும், அழுகையுமாகக் கேட்ட அந்தக் குரலை பின் தொடர்ந்து தூங்காத எனது இன்னொரு இரவை விழித்த விழிகளுடன் கடந்து கொண்டிருந்தேன்.

யாருமற்ற தனிமையில் யாரோடும் பேசாமல் வார்த்தைச் சுழலுக்குள் சிக்கி மூச்சுத் திணறியபடி அழுது கொண்டிருந்தது கவிதையொன்று. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான இடைவெளியில் நின்றபடி உயிர்கயிறை இறுக்கமாக பற்றி ஊசலாடிக்கொண்டிருந்தது.

என்ன செய்துவிட முடியும் என்னால் , தவித்துக்கொண்டிருக்கும் கவியைச் சற்றே தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தேன். அதன் மூச்சுத்திணறல் இன்னும் இன்னும் அதிகமாகிக்கொண்டேயிருந்தது...

தண்ணீர் வேண்டுமா ? “ கையிலிருந்த தண்ணீர் புட்டியை நீட்டினேன்.

நீட்டிய புட்டியை நீள்கரம் கொண்டு பற்றி நீரினை பருகியபடிநீர் !” என்றது.

நானா?”

ஆம்

கேள்வி கேட்டது கவிதை என்பதால் கர்வத்தோடுநான் ஒரு கவிஞன்என்றேன்.

பெரும் சிரிப்புச் சிரித்தது தனது மூச்சுத் திணறல் மறந்து, அழுகையை மறந்து...

ஏன் சிரிப்பு ?

மறுபடியும் இடைவெளி இல்லாத அந்தச் சிரிப்பு.

“இத்தனை அழகாய் சிரிக்கிறாயே... , ஏன் அழுதுகொண்டிருந்தாய்...!”

கட்டாயம் சொல்கிறேன், தண்ணீர் தந்தவனாயிற்றே!“

சொல்என்றேன்

உன் மனக்கோப்பைக்குள் மணித்துளிகள் நிரப்பிக்கொள் !”

ம்என்றபடி நான் சன்னமாகச் சிரித்தேன்.

ஏன் சிரிப்புஎன்றது.

அதொன்றுமில்லை கவிதை ஒன்று கவிஞனாகி கவிதை சொன்னதால் , கவிஞன் எனக்குள் கவிதை உதித்துச் சிரிப்பாகக் கசிந்துவிட்டது.”

அது சரி , இப்போது நான் பேசியதை கவிதை என்கிறாய் !! , அழகான வார்த்தைகளை அடுத்தடுத்து அடுக்கி வைத்தால் கவிதை , என்று எவன் உன்னிடத்தில் சொல்லிக்கொடுத்தான்.” சிரித்தது.

நானும் சிரித்தேன்.. இருவருமே சிரித்துக் கொண்டோம்.

அது இருக்கட்டும் நீ ஏன் கவிஞன் ஆனாய்என்றது.

அது ஒரு விபத்து, நீ மூச்சுத்திணறி அழுது கொண்டிருந்ததன் காரணத்தைச் சொல்கிறேன் என்றாயே !”

சொல் மூட்டைப் பொதியொன்றின்
சுமை பொறுக்க முடியாமல்,
தப்பிக்கத் தலைப்பட்டேன்
முடியாமல் சிறைபட்டேன்,
சொல் மூட்டை எனை வதைக்க
வார்த்தைக்குள் அடைபட்டு
வாய்திறக்க முடியாமல்
சுவாசம் தடைபட்டேன்,
உந்தன் கண்பட்டேன் ! “

சொல்மூட்டையின் பொதியால் இறக்கும் நிலை வரையில் சென்றாயா ! ஆச்சரியமாக உள்ளதே. “

மௌனமாக இருந்த அதை நோக்கி கேட்டேன்எத்தனை வார்த்தைகளை அல்லது சொற்களை உம்மால் சுமக்க முடியும், இத்தனை என்று எதுவும் வரைமுறை, விதிமுறைகள் உள்ளனவா ?”

இத்தனை என்று வரைமுறையெல்லாம் எதுவுமில்லை, எத்தனை சொல்லும் சுமப்போம் யாம் !”.

இதென்னடா ! குழப்பம், முரணாகத் தெரிகிறதே, எத்தனை சொல்லும் சுமப்பாய் என்றால் சொற்பொதி தாளாது சோர்ந்தது ஏன்”.

எங்களால் சொற்களைச் சுமக்க முடியும் , ஆனால் சொற்களால் உருவாக்கப்பட்ட மூட்டைகளை அல்ல”.

விளங்கவில்லையே... கொஞ்சம் விளக்கிச் சொல்வாயா !”.

என் கையைப் பிடித்து, உள்ளங்கை விரித்து அதிலொரு காகிதத்தை எடுத்து வைத்தது.

காகிதம் பறக்கும், சரிதானே...”

ம், காற்று வீசினால் பறக்கும்என்றேன்.

அந்தக் காகிதத்தைக் கசக்கி ஒரு பந்து போலாக்கி மறுபடியும் என் கையில் வைத்தது.

இது பறக்குமா !”

சத்தியமாகச் சாத்தியமில்லை, வேண்டுமென்றால் நன்றாகக் காற்று வீசினால் நகரும்”.

பெருங்குரலெடுத்துப் பேசத்துவங்கியது, “ சொல் என்பது பொதுவாகவே சுமை தான், சொற்களின் கூட்டம் என்பது பெருஞ்சுமை, கசங்கின காகிதம் மாதிரி அவைகளால் ஒருபோதும் பறக்க இயலாது, சொற்களை ஏதொரு மாற்றமுமின்றி , காரணமின்றிக் கண்டபடி அடுக்கி வைத்து எம்மீது ஏற்றினால் மூச்சுத் திணறாது என்ன செய்யும். பல சமயங்களில் மூச்சுத் திணறி, சுவாசம் சுத்தமாக நின்றுபோய் நாங்கள் மரித்துப்போவதும் கூட உண்டு., தண்ணீர் பிரிந்த மீன் குஞ்சுகள் போலத் துடிதுடித்துச் செத்துப்போயிருப்போம்... வார்த்தைக் குவியல்களுக்குள் கவிதையின் பிணங்கள் அமிழ்ந்து கிடக்குமே கண்டதில்லையா நீ !”

ம்..”

கவிதையின் பிணங்களில் பின்னப்பட்ட வார்த்தை அடுக்குகள் ஒருபோதும் கவிதையல்ல , புரிந்துகொள் அவற்றை உயிர்ப்பிக்க முடியாது, பார்... நான் கூடச் செத்திருப்பேன் நீர் ஊற்ற ஆளின்றி நிராதரவாய் நின்றிருந்தால்,”. கூப்பிய அதன் கரத்தைத் தொட்டு ஸ்பரிசித்தேன்.

உயிரோடு உம்மை வார்த்தைக்கோட்டைக்குள் சிறை வைக்க இயலாதா ?”.

பறவைகளைச் சிறை வைத்தல் பழிச்செயல்”.

பின் எப்படி உங்களை வார்த்தைகளில் , வார்த்தைகளால், வார்த்தைகளுக்குள் வசப்படுத்த முடியும்”.

கண்ணுக்குப் புலப்படாமல் கண்முன்னாலேயே நிற்கும் எங்களைக் கண்டுகொள்ளப் பழக வேண்டும், முதலில் “.

அப்புறம்

கண்டுபிடித்த எங்களை வார்த்தைக் கயிற்றில் வலிக்காமல் மெல்ல கட்ட வேண்டும்,”.

கட்டுதல் தவறில்லையா”.

அன்னைத் தன் குழந்தையை வேலை செய்து கொண்டிருக்கையில் கட்டி வைத்திருந்து பின் கட்டி அணைத்துத் தூக்குவதில்லையா ?, அதே மாதிரி

ஓ !

பின், கட்டிய வார்த்தைக் கயிற்றை வார்த்தையாலேயே அவிழ்த்து எம்மை விடுவிக்க வேண்டும்”.

அதெப்படி சாத்தியம்

அது கவிஞனின் சாமர்த்தியம்

.”

சொல்லின் சுமை களைந்து அதைச் சிறகுகள் போலாக்கி எம்மைச் சுற்றிலும் ஒட்ட வேண்டும், தேர்ந்த சிறகுகள் கொண்டு இறக்கைகள் செய்து எமக்கு அணிவிக்க வேண்டும்”.

வானமென்ற அந்த நீலப்பெரும்பறவை இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் தூக்கி பறக்கிறதே அது போல எம்மை வாசிக்கிற அத்தனை பேரையும் தூக்கி சுமந்து பறக்கும் வல்லமையைத் தர வேண்டும்

தூக்கி சுமக்கையில் சுமை இருக்காதா உமக்கு

அது சொற்களால் பின்னப்பட்ட எம் இறக்கைகளின் வலிமையைப் பொருத்தது”.

இப்போது உன் சுமை எப்படி இருக்கிறது என்றேன்”.

இன்னும் அப்படியே தான் இருக்கிறது, உம்மோடு பேசியதில் கொஞ்சம் மறந்திருந்தேன்”..

மெல்ல அதன் மீது ஒட்டியிருந்த சொற்களை ஒவ்வொன்றாய்க் களைந்தெறிந்தேன்.

அந்த இரவு முழுவதும்  அது என்னோடு பேசிக்கொண்டேயிருந்தது...

பின் என்னிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சிறகுகள் இல்லாமல் , இறக்கைகள் இல்லாமல், அப்போது தான் வெளுத்திருந்த அந்த நீல வானின் கீழே நீல நிறமாகி சொற்கள் ஏதுமின்றிச் சுதந்திரமாய்ப் பறக்கத்துவங்கியது.

அதன் பறத்தலை பார்வையால் பின் தொடர்ந்து வானத்தையே பார்த்தபடி நின்றேன் ! சில நிமிடங்களுக்கெல்லாம் வானமாகிப் போயிருந்தது.









Labels: , ,

Sunday, October 21, 2012

நகர (நரக) மழை

           மழைநீரில் தன்னை முழுவதும் நனைத்திருக்கும் மின் கம்பி:         இடம்:சென்னை கோயம்பேடு


மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த மழை


(மழையை ரசிப்பதற்கும்,மழையில் நனைவதற்கும் நம் அன்றாட பணிகள் மற்றும் அலுவல்களுக்கிடையில் நேரம் இருப்பதில்லை,அன்பின் ஊற்றாக வானம் பூமி மீது ஊற்றும் மழை மீது நமக்கு பெறும்பாலும் வெறுப்பு தான் வருகிறது,நகர வாழ்வில் மழை என்பது நரகமாக தான் இருக்கிறது)

அன்றைக்கு மழையின் வீச்சு பூமி மீது கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.மழையை திட்டிய படியே என் அலுவலக பணிக்கு பேருந்து பிடிக்க சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன்...சரசர ஓசையில் மெல்லிய குரல் ஒன்று கேட்டது... அது வெறும் மழையின் சரசரப்பு தான் யாரோ பேசுவது போலவே என் காதுகளுக்கு கேட்டது.துளித்துளியாக பூமி வரும் மழையில் ஒரு துளி மெல்ல என் காதருகே வந்து என்னோடு பேச துவங்கிற்று...

இப்பொழுதெல்லாம்...
எங்களை ஏன் யாரும் ரசிப்பதே இல்லை?
எங்களின் வாழ்வின் அதாரம் "நீர்" என்று
எப்போதும் எங்களை வாயார புகழ்வீர்களே!
எங்கே போனீர் எங்களை வரவேற்காமல்...

நித்தமும் நீங்கள் வேண்டுகிறவர்கள்
மொத்தமாய் வந்திருக்கிறோம்
வரவேற்க வில்லை என்றாலும் பரவாயில்லை
கொட்டித்தீர்க்கும் எங்களை திட்டி தீர்க்காதீர்கள்

சாலைகளை சிதைத்து
சாக்கடைகளை நிறைத்து
தொல்லை தர பூமி வந்த 
தொல்லை கும்பல்
இல்லை நாங்கள் !

மரங்களின் கையசைப்பில் மனமிரங்கி
தரை இறங்கி தரணி வந்தவர்கள்
வற்றிக்கொண்டிருக்கும் உயிர்த்துளியை
துளித்துளியாய் நிறைக்க வந்தவர்கள்

வேலைகளை முடக்க வந்த 
முட்டாள் மழையென்று
முனுமுனுப்பு செய்பவர்களே !

அன்றாட வாழ்வை பாதிக்க வந்த
படுபாவி மழையென்று
பல்லவி பாடுபவர்களே !

கொஞ்சம் கவனியுங்கள்

ஓய்வின்றி சுற்றும் பூமி
காய்ந்து விடாதிருக்க
கடவுள் அனுப்பிவைத்த
கருணை மனுக்கள் நாங்கள்

பால் வற்றிப்போன 
பூமியின் தனங்களில்
மீண்டும் பால் சுரக்க
மருந்தாய் வந்தவர்கள்

எம்மை சேமிக்க சொல்லி 
விளம்பரங்கள் செய்கிறீரே !

நாங்கள் நகரக்கூட
இந்த நகரத்தில் இடமில்லை
வரவுக்கே "வழி"யில்லை
எம்மை எங்கே சென்று சேமிப்பீர்

பாராட்ட சொல்லியோ!
வசைபாட சொல்லியோ!
உங்களை ஒருபோதும்
நாங்கள் கேட்டதில்லை !

எங்களுக்கும் அரசியல் தெரியும்
அதிகம் பெய்து அழிக்கவும் செய்வோம் !
அளவாய் பெய்து காக்கவும் செய்வோம் !
பெய்யாதிருந்து வதைக்கவும் செய்வோம் !

நீங்கள் வசிக்கும் உலகை
வளர்த்து விட்டவர்கள் நாங்கள்
உறுதியாய் கூறுவோம்
உங்களுக்கு உயிர் தந்தவர்கள் நாங்கள்

பூமி காப்பது உங்களுக்கு கடமை
பூமி காப்பது எங்களுக்கு உரிமை
                                                                                           -விஜயன்



இது எனது 50 வது பதிவு.நான் கவிதைகளை தனியாக வானம்பாடி என்ற தளத்தில் எழுதி வருகிறேன்,இனி கடற்கரையிலும் எழுத தீர்மானித்துள்ளேன்,கவி வானில் சுற்றி திரியும் வானம்பாடி இனி என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கடற்கரையிலும் பறக்கும்.




Labels: , , ,