Wednesday, August 15, 2018

சுதந்திர தின அழைப்பிதழ்


சுதந்திர தின அழைப்பிதழ்:

நான் அனாமிகா, உங்கள் வசிப்பிடத்திற்கருகே வசிக்கும் மற்றுமொருப் பெண். பணி முடிந்த தினத்தின் இறுதியில் வீடு திரும்ப வாகனம் தேடிக்கொண்டிருப்பவள் , பேருந்தில் கூட்ட நெரிசலில் உங்கள் அருகே சங்கோஜமாக உடல் குறுக்கி நின்று கொண்டிருப்பவள் , ஒரு சக மனுஷி, The so called தாய்க்குலம்.

இந்த கடிதத்துடன் சுதந்திர தின விழாவிற்கான அழைப்பிதழையும் இணைத்துள்ளேன், சுற்றமும் நட்பும் சூழ தவறாது கலந்து கொள்ள வேண்டும். நிச்சயம் நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
நமது அடிமை சாசன பிரமான பத்திரத்தை 1947-ஆம் ஆண்டின் ஆகஸ்டு 15 நள்ளிரவில் வெள்ளைக்கார அரசாங்கம் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கைகளில் ஐந்தைந்து ஆண்டுகள் அடிமைகளாய் கிடக்க சுயாட்சி என்னும் பெயரில் திருத்தி எழுதிக் கொடுத்துவிட்டுப்போனதே , அந்த நிகழ்வின் நினைவாக வருச வருசம் வருகிறதே.. அந்த விடுமுறைதினத்திற்கான அழைப்பிதழ் அல்ல இது.

“நள்ளிரவில் தனி ஒரு பெண் தைரியமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர தினம்” என சொல்லிவிட்டுப்போனாரே காந்தி, அந்த நள்ளிரவுக்கான அழைப்பிதழ்.

கூட்டம் கூட்டமாய் மானபங்கம் செய்யப்பட்ட வாச்சாத்திப்பெண்கள், நிர்பயா, ஜிஷா, ஹாசினி, நந்தினி, தனம், ஆசிஃபா, அழக்கூட தெரியாத அந்த எட்டு மாதக்குழந்தை, லிஃப்டுக்குள் மூச்சுத்திணறிய வடநாட்டு சிறுமி, மீடியா வெளிச்சத்திற்கு வராமல் செத்துப்போன இன்னும் நிறைய பெண்கள், எப்போது நான் என பயத்துடன் வாழும் பெண்கள், இவர்கள் அத்தனை பேரின் சார்பாக அனாமிகாவாகிய நான் உங்கள் அத்தனை பேரின் கைகளிலும் இந்த அழைப்பிதழை கொடுக்க வந்திருக்கிறேன்.

பிறந்து , வளர்ந்து , இரையாகி இறந்து போன அந்த அத்தனை பெண்களிடம் பொதுவாக ஒன்று இருந்தது, ஆம் அந்த ஒற்றைப்பொருளை மையப்படுத்தித்தான் அத்தனை குரூரங்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த ஒற்றைப்பொருளுக்குள் தான் நாம் நமது சமூகத்தின் மான, அவமானங்களையும், கவுரவுத்தையும், ஒழுக்கத்தையும் பூட்டி பூட்டி பாதுகாத்து வைத்து வந்திருக்கிறோம். வைத்தும் கொண்டுள்ளோம்.

ஆதி காலம் தொட்டு இந்த பொருளை அழிப்பதையும் சிதைப்பதையும், அபகரிப்பதையும் தான் வீரம், அதிகாரம், ஒடுக்குமுறை போன்றவற்றின் வெளிப்பாடாக பெரும்பாலுமாக நம் வரலாறுகளின் ரத்தக்கறைபடிந்த பக்கங்களுக்குள் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதையே நம்மில் பலர் அறியாமையால் நம்பியும் தொலைக்கிறோம்.

நாம் அத்தனை பேருமே பிறப்பதற்கு காரணமாக நம்மை ஒரு சிறுதுளியாக உள்வாங்கி பாதுகாத்து , பராமரித்து, பிரசவித்து முழு மனிதனாக இந்த பூமிக்குள் வெளியேற்றக் காரணமாய் இருந்த அந்த ஒற்றைப் பொருளை, நம் பிறப்பின் வாசலாக இருந்த அந்தப் பொருளை (பெண் உறுப்பை) எப்படி நாம் சிதைக்க முன்வந்தோம் என்றே இப்போதும் யோசித்துக்கொண்டிருக்கிறேன் .

மாதர் தம்மை இழிவு செய்தபடி கொழுத்துத்திரியும் இந்த மடைமயை நாம் கொழுத்த வேண்டாமா ?

Image courtesy: vikatan
                             
பார் புகழும் இந்த பாரத தேசத்தில் பெண் உறுப்பை தெய்வமாக வழிபட கோவிலெல்லாம் கூட இருக்கிறது. அசாம் மாநிலத்திலிருக்கும் காமாக்கியா கோவிலில் யோனி தான் தெய்வமாக நின்று அருள் பாலிக்கிறது. எத்தனை சீரிய நாகரிகம் நம்முடையது. பிறப்பின் ஊற்றாக போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டிய பெண்மையை நாம் எஞ்ஞனம் இழிவு செய்ய முற்பட்டோம்.


மனிதன் தவிர்த்து இந்த பிரபஞ்சத்தில் வாழும் எந்த மிருகமும் தன் சக உயிரின் பெண் உறுப்பின் மீது தனது ஆக்ரோசத்தை, வன்மத்தை, அதிகாரத்தை, ஆனவத்தைக் காட்டி தனது வீரத்தையும், ஆண்மையையும் நிலைநாட்டியதாக நான் கேள்விப்பட்டதில்லை. விருப்பில்லாமல் உறுப்பைத்தொட விரும்பும் கீழோராக நாம் எப்போது மாறிப்போனோம் எனத் தெரியவில்லை.

இப்பொழுதும் கூட  தாமதமில்லை , புள்ளிவிவரங்களால் சதா நம்மை பயமுறுத்திக்கொண்டே இருக்கும் மீடியாக்களை புறந்தள்ளிவிட்டு அகல விழிகளால் இந்த தேசத்தை விசாலப் பார்வையால் கண்போம். 

பெண்மையை மதிக்கும் மனிதர்களின் எண்ணிக்கையோடு , குற்றம் செய்கிறவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பாருங்கள், எண்ணிக்கையில் இங்கு நாம் தான் அதிகம். இனியும் கூட நாம் நினைத்தால் நல்லதொரு தேசத்தை இங்கிருந்து கூட நாம் உருவாக்கலாம். எதிர்கால சமூகத்தை சிருஷ்டிக்க நம்மால் முடியும்.

உங்கள் பிள்ளைகளுக்கு வீரத்தை சொல்லிக்கொடுங்கள், தைரியத்தை சொல்லிக்கொடுங்கள், குற்றம் செய்கிறவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு தற்காப்புக் கற்றுக்கொடுங்கள், தவறானவர்களை தவிர்க்க சொல்லிக்கொடுங்கள். வீரம் மிக்க கதைகளை குழந்தைப்பருவத்திலிருந்தே சொல்லிக்கொடுங்கள், அடங்காப் பிடாரி, அதிகப்பிரசங்கி, பெண்பிள்ளையா அடக்க ஒடுக்கமா இரு, ஆம்பள அழக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பேதம் காட்டி வளர்க்காமல் சமத்துவத்தை சொல்லிக்கொடுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு அதிக அன்பு காட்டி வளர்ப்பது நல்லது தான் , அதே நேரம் அவர்களையும் அன்பு மிக்க, அன்பை உணரும் ஜீவிகளாக வளருங்கள். தாய்மையை வணங்கும் பண்பு நம் தேசத்தில் மிக முக்கியமான ஒன்று. தாய்மையை மதிப்பது உயிரின் இயல்பு. தாயை, தன் சகோதரியை, தன் வீட்டு பெண்களை மதிக்கும் ஆண் பிற பெண்களையும்  அவர்களின் பெண்மையையும் நிச்சயம் மதிப்பான்.

உங்கள் தர்க்கங்களை நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களுக்கு நல்லது கெட்டதுகளை மட்டும் அடையாளம் காட்டி வெறுமனே அவர்கள் வளர உதவுங்கள்.

தண்டனைகளுக்குப் பயந்து தவறு செய்யாதிருக்க நாம் ஒன்றும் காட்டுமிராண்டி சமூகம் அல்ல , உலகின் பிற தேசத்தினர் காடுமிராண்டிகளாய் வாழ்ந்த காலத்திலேயே நவ நாகரிகமாய், சீரிய பண்பாட்டுடன் வாழ்ந்தவர்கள் நாம். நமக்குத் தெரியும் இனிவரும் உலகை புத்துலகாய் செய்ய என்ன செய்ய வேண்டுமென.

இன்னமும் யோனிகளின் வழியாகத்தான் நாமெல்லாம் பிறந்து கொண்டிருக்கிறோம்.

சுற்றமும் , நட்பும் சூழ இந்த சுதந்திர தினத்திற்கு நிச்சயம நீங்கள் வர வேண்டும். பிறக்கப் போகும் இந்த புதிய தினத்துக்கு நாளும் , இடமும் நாம் குறித்தாக வேண்டும்.






அன்புடன்,
அனாமிகா
15/08/2018



 

Post Comment

Tuesday, August 14, 2018

பொதுபுத்தி பாலியல் வறட்சியும் – தனி நபர் கற்பழிப்புகளும் | #Yours Shamefully

யூட்யூபில் அதிகம் பார்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அதிகம் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த வைரல் குறும்படமான Yours Shamefully  பற்றிய விவாதம் தான் இந்த கட்டுரை…



Yours Shamefully
Yours Shamefully

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களுக்கு மட்டுமே தூக்கு தண்டனை என்கிற சட்டத்திருத்தம்  நடைமுறைப் படுத்தப்பட்ட நடப்பு ஆண்டில் (2018 ஆம் வருடம் ) நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது கதை. 12 வயதும் 45 நாட்களுமான குழந்தை ஃபாத்திமா, ஆதவன் மற்றும் டேனியல் தாமஸ் என்கிற இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட  வழக்கிற்கு இறுதித் தீர்ப்பு வழங்கவிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெமினி . இது தான் இந்த குரும்படத்தின் ஒன்லைன் கதை.
தூக்குத் தண்டனை கட்டாயமில்லை என்கிற நிர்பந்தம் – 2067 க்குப் பிறகான பெண்களின் நிலை பற்றி அவரது மகளின் திருமண பந்தத்தை தொடர்புபடுத்தி நீதிபதிக்கு வரும் ஒரு Fantasized  கனவு – அவர் என்ன தீர்ப்பு வழங்கினார் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு. இந்த மாதிரி வழக்குகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற டைரக்டர் விக்னேஷ் கார்த்திக்- ன் கருத்து தான் இந்தப் படத்தின்  ஹார்ட் பீட்.

இக்குறும்படம் கிட்டத்தட்ட இதை  பார்க்கும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது, இக்குறும்படத்திற்கு வந்திருக்கும் டிஸ்லைக்குகளும், நெகடிவ் கமெண்ட்களும் முழு படம் பார்க்க பொறுமை இன்றி அந்த நீதிபதி காணும் கனவு காட்சியை மட்டும் கண்டுவிட்டு கடுப்பானவர்கள் என்றே நினைக்கிறேன்.  2067- க்கு பின் நடப்பதாகக் காட்டப்படும் அந்தக் காட்சி மட்டும் படமாக எடுக்கப்பட்டிருப்பின் ஒட்டுமொத்தமாக எல்லோரும் நெகடிவாகத்தான் இந்த படத்தை விமர்சித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
2067-க்குப் பிறகான பெண்களின் நிலை என்று காட்டப்படும் அந்தக் காட்சியில் போலிஸ் பாதுகாப்போடுதான் பெண்கள் நடமாடுகிறார்கள், பாலியல் கொடுமைகளாலும், பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர்களாலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து குறைந்து (2013- 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் , 2026ல்  –  1000 ஆண்களுக்கு 785 பெண்கள் என 2064 – ல் 1000 ஆண்களுக்கு 270 பெண்கள் எனக்  குறைவதாக இந்த குறும்படத்தில் ஒரு பயடேட்டா முன்வைக்கப்படுகிறது. 2016 ல் மட்டும இந்திய தேசம் முழுக்க 36000 பாலியல் வக்கிர புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவாம்! ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே போகும் இந்நிலை இப்படியே தொடர்ந்தால்.. பெண் குழந்தைகள் வளரும் முன்னரே பாலியல் பசிக்கு இறையாகி சாகடிக்கப்படுவார்கள்.
இந்நிலை இப்படியே தொடர்ந்தால்… என்கிற நூலைப் பிடித்துக்கொண்டு மிக நேர்த்தியாக தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் கார்த்திக். கடந்த காலம் எப்படி இருந்ததோ அதன் அடிப்படையில் தான்  நிகழ்காலம் இருக்கும் , அதே மாதிரி நிகழ்கால செயல்களின் தாக்கம் எதிர்காலத்தை பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி தினசரி 50 க்கும் மேற்பட்ட பாலியல் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அரசு புள்ளிவிவரம் சொல்கிறது. பதியப்படாமல் பலியாகும் அபலைகள் எத்தனை பேரோ தெரியவில்லை! இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விடும் தான், இக்கருத்தைத் தான் இக்குறும்படத்தின் முதல் பகுதி சித்தரித்திருக்கிறது.
நீதிபதி ஜெமினியின் கனவில் வரும் காட்சியில் 2067ம் வருடத்திய இந்திய அரசு ஒவ்வொரு பெண்ணும் ஆண்களின் எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்காக குறைந்தது இரண்டு திருமணமாவது செய்து கொள்ள வேண்டும் என சட்டம் போடுகிறது, தனது மகளுக்கு இரண்டாம் கனவனை தேடிக் கட்டிவைக்கும் கணம் நீதிபதி அவர்கள் இரண்டு கணவன்மார்களுடன் படுக்கையில் தன் மகள் இருக்கும் திடுக்கிடும் காட்சியைக்கண்டு அதிர்ச்சியில் கண் விழிக்கிறார்.
இந்த குறும்படம் எழுப்பும் கேள்விகள்:
1)ஹாஸினி, ஆசிஃபா பானு, என எத்தனை குழந்தைகளை நாம் காமுகர்களுக்கு சாகக்கொடுக்கப் போகிறோம்.
2)இத்தகைய மிருகங்களை கொடுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.வெறுமனே தூக்குதண்டனை போதாது. அப்பொழுது தான் இதற்குப் பின் வருகி்ற காமுகர்கள் இதை பாடமாக எடுத்துக்கொண்டு திருந்துவார்கள் .
3)கற்பழிப்புக் கொலைகள் தொடரும் பட்சத்தில் ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை குறைந்து போய் 1000 ஆண்களுக்கு வெறும் 270 பெண்கள் என்பதாக குறைந்துபோகும் காலம் வரலாம். அப்போது ஆண்களின் ஆசையை ஈடுகட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 திருமணங்கள் கட்டாயம் எனும் சட்டபூர்வமாக சொல்லப்படலாம்.

இந்தக் குறும்படம் நிலைப்படுத்தும் கேள்விகள் நம் பொதுபுத்தி மனோநிலையில் ஏற்கனவே இருந்த ஒன்று தான், நம் வீட்டாருக்கு இப்படியொரு நிலைமை வந்தால் நாம் என்ன செய்வோம் என்கிற சைக்காலஜிக்கல் தாக்குதல் தான் இதுவும் “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல” என்கிற வசவின் மாறுபட்ட வடிவம் தான் இத்திரைப்படம் சொல்லும் விசயமும், நாம் இத்தகு பிரச்சினைகளுக்கு சிந்திக்கும் தண்டனைகளும்.
ஏன் நாம் ஒரு விசயத்தை சரியா, தவறா என மனசாட்சிப்படி சிந்திக்காமல், பயத்தின் அடிப்படையில் சிந்திக்கிறோம், பயமுறுத்தும் வகையில் தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று ஏன் யோசிக்கிறோம்?
Yours Shamefully
பொதுபுத்தி பாலியல் வறட்சியும் – தனி நபர் கற்பழிப்புகளும் :
தாகம் வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும், என்பது நடைமுறை நியதி ஆனால் தண்ணீரைப் பார்க்கும்போதெல்லாம் தாகம் கொள்ளும் மனப்பான்மை நோய்மை. பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் காமுறும் வக்கிர சமூகமாக நாம் மாறி இருக்கிறோம். இந்த குறும்படத்தை விளம்பரபடுத்தி அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட யுக்தியைப் பாருங்கள். படுக்கையில் இரண்டு ஆண்களுக்கு நடுவில் படுத்திருக்கும் ஒரு பெண். அந்த யூட்யூப் சேனலில் பகிரப்படும் விசயங்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்தவைகளும், கிசுகிசுகளுமாகத்தானே இருக்கிறது.
நாமும் யூடியூபில் அதிகமாய் இப்படிப்பட்ட கருமங்களைத் தானே தேடித்தேடி  பார்க்கிறோம்.  டிரெண்டிங்க் ஆக்கித் தொலைக்கிறோம், கண் சிமிட்டும் கன்னி, புருவம் உயர்த்தி புன்னகைக்கும் அழகி இப்படி நாம் டிரெண்டிங் செய்த வீடியோக்களின் பின்னனியில் நம் மனதிற்க்குள் இருக்கும் காம உணர்வை நாம் சொறிந்து கொண்டு சுகப்படும் காரணம் மறைமுகமாக இருக்கத்தானே செய்கிறது. தேடி பல வீடியொக்கள் பார்த்து , பிறர் வாட பல செயல்கள் செய்யும் நல்லவர்கள் தானே நாமெல்லாம்.
மறைமுகமாக மனதிற்குள் தவறு செய்யும் மனிதர்களான நாம்,  உணர்ச்சிப்பெருக்கு எல்லைமீறி டோபமைன் சுரப்பில் சுரணைகெட்டு தன் சுயநினைவு மறந்து வெளிப்படையாக தவறு செய்பவர்களை தண்டிக்க சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம்.
வெறிபிடித்த மன நிலையில் இருக்கும் ஒருவனுக்கு என்ன சொன்னாலும் எடுபடாது, ஆக வெறிபிடித்த எல்லோரையும் கொன்றுவிட வேண்டும், வெறி பிடிக்கும் அபாயம் இருக்கும் எல்லோரையும் கொன்று விட வேண்டும்.
மனங்கள் தோறும் கொலைவெறித்தனம் தலைவிறித்தாடும், அரசாங்கமே கொலை செய்கிறது கொலை செய்வது பாவமில்லை, தவறு செய்பவன் என நம் மனதிற்கும் தோன்றும் பட்சத்தில் கொன்று போடலாம் தவறே இல்லை என சப்கான்ஷியஸாக நம்பும் சமூகமாக நாமெல்லாம் கொலைகார சமூகமாக மாறுவோம். சர்வ நிச்சயமாக மாறுவோம்.
பயமுறுத்த வேண்டும், ஆணுருப்பை பொது இடத்தில் வைத்து அறுக்க வேண்டும், தலையை வெட்டிக்கொள்ள வேண்டும், சுட்டுக்கொள்ள வேண்டும் …  யாவரும் காணும் வகையில் சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும்.இதை பார்க்கும் யாரும் அடுத்த இப்படி செய்ய பயப்பட வேண்டும்… சரி தான் , இந்த தண்டனைகள் யாவுமே சரிதான் , சிகரெட்டு டப்பாக்களில் புற்றுநோய் புகைப்படத்தை  மிகக்கொடுரமாக சித்தரித்து , வாங்கிப் புகைத்தால் உனக்கும் இது வரும் என பயமுறுத்துகிறோமே, போதாக்குறைக்கு திரைப்படங்கள் துவங்கும் முன் புகையின் பாதிப்பை சொல்லி பயமுறுத்துகிறோமே! பயமுறுத்தி பயப்பட்டு நல்லவர்களாகிவிடும் நல்லவர்களா நாம்.
உடனடி நிவாரனம், தற்காலிக விடுதலை என்கிற மனப்பான்மை உடன் சிந்திக்கும் நாம், நிரந்தர தீர்வு பற்றியும் யோசிக்க வேண்டும்.
நிரந்தர தீர்வுகள்  என்பவை மனதளவில் நம் எதிர்கால ஆணும் , பெண்ணும் ஒருவரையொருவர் பரஸ்பரமாக சக உயிராக பாவித்து, புரிந்து வாழும் சூழலை உருவாக்குவதில் இருந்து துவக்கலாம்.
எதிர்கால சமூகம் என்பது நம் குழந்தைகள் தானே. அவர்களுக்கு நல்லது கெட்டதுகளை உளவியல் ரீதியில் மனதில் பதியும் படி புரிய வைப்பது மூலம்  நல்லதொரு அரோக்கியமான  சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும். என் மனதில் பட்ட சில நிரந்தர தீர்வுகளை இங்கு தருகிறேன்.
நீங்கள் உங்களுக்கு பட்டதை கமெண்ட்டில் கருத்தாக பதிவு செய்யுங்கள்…
1) திருத்தவே முடியாத மிருகங்களை கொல்வதில் தவறில்லை, ஆக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு தூக்குதண்டனை என்பது எல்லா வயது பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களுக்கும் தரப்பட வேண்டும்.
2) பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் அவர்கள் நம் சக உயிரிகள் என்ற சிந்தனை ஆண் குழந்தைகள் மனதில் ஆழமாக பதிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை நிறுவனங்கள் இதை முன்னெடுக்க வேண்டும், அரசு சிலபஸ் போடும் அதன் பின் சொல்லிக்கொடுப்போம் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். (ஒரு பெண்ணின் பிறப்புறப்பில் கைவிட்டு அவள் குடலை ஒருத்தன் இழுக்கிறான் என்றால், அவளை அவன் உயிரினமாகவே மதிக்கவில்லை என்று தானே பொருள்).
3) பாலியல் வறட்சியை ஏற்படுத்தும் சமாச்சாரங்களிலிருந்து விலகி இருக்க மனோ தி்டம் வேண்டும். கலை, இலக்கிய ஈடுபாடும், பெண் பிள்ளைகளுடன் சகஜமாக இயல்பாக பழக உரையாட பதின்மத்தில் இருக்கு ஆண் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
4)ஆண் பெண் உடலில் நடக்கும் பதின்ம மாற்றங்களை பக்குவமாக சொல்லிக்கொடுக்க வேண்டும்.
5)  பெண்களுடன் ஆரோக்கியமாக பழகும் ஆண்களை பெண்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும்., காதல் எனப்பழகி நண்பர்களுக்கு இரையாக்கும் நல்ல உள்ளங்களிடமிருந்து விலகி இருக்க , கெட்டப்புத்திக்காரர்களை நல்லவர்கள் என நம்பாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.



#Yours Shamefully 

 

Post Comment