Wednesday, March 20, 2013

பரதேசியும்,பாலாவும்,அப்புறம் நானும்





" சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் வெள்ளையர்களின் தேயிலை தோட்டத்தில் பணிபுரிய அப்போதைய சென்னை மாகானத்தில் இருந்த கிராமத்து மக்களை கொத்தடிமைகளாக அந்த தேயிலை தோட்டத்திற்கு அழைத்து சென்றார்கள், பிழைக்க வழி கிடைத்ததே என்று அந்த அப்பாவி கூட்டமும் வேறு வழியின்றி வேலைக்கு செல்கின்றனர்... இன்று நாம் அருந்தும் தேனீருக்காக அன்று ரத்தம் சிந்திய லட்சக்கணக்கான மக்களின் உண்மைக்கதை... "

 படம் துவங்குவதற்கு முன்பே திரையில் எழுத்துக்களாகவும் குரலாகவும் பாலா கதையின் கருவை சொல்லிவிடுகிறார்.அதன் பின்பே கதை ஆரம்பிக்கிறது.

தமிழில் வெளிவரும் வழக்கமான படங்களில் இருந்து பாலாவின் படங்கள் வித்தியாசமாகவே இருக்கும். "பரதேசி" யும் இதற்கு விலக்கல்ல. படத்தில் சோகம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.ஒட்டுப்பொறுக்கியின் (ஹீரோ) அப்பாவித்தனம், சாதி கொடுமை, அடிமையாக செல்லும் மக்கள் படும் துயரம் என நிறைய இடங்களில் அழ வைக்கிறார் இயக்குனர் பாலா.

 எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் வசனமும், வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் கிராமத்து வாசனையை நம்மை சுவாசிக்க செய்கின்றன. கிராமத்து மக்களின் இயல்பையும் நக்கல்,நையாண்டி,குசும்பு போன்றவற்றையும் வசனங்களில் அழகாக ரசிக்கும் விதத்தில் பதிவு செய்திருக்கிறார் நாஞ்சில் நாடன். ஜி.வி. யின் இசை கதையின் பின்புலத்தில் சலனமின்றி நம் பயணத்தை தொடர வைக்கிறது.

சாளூர் கிராமத்தில் தண்டோரா போட்டு தகவல்களை சொல்லும் ராசா என்கிற ஒட்டுப்பொறுக்கியாக வருகிற அதர்வா முரளி -ன் நடிப்பு அற்புதம். அப்பாவி கேரக்டர் ,ஊரார் தருகிற வேலைகளை செய்து கொண்டு.
அவர்கள் கொடுக்கிற கஞ்சியையோ, கூலையோ பெற்றுக்கொண்டு ( ஒட்டுப்பொறுக்கிக்கொண்டு...) சுற்றி வருகிற இளந்தாரிப்பையனாக கதையில் பயணப்படுகிறார்.

தனது பேரன் ராசாவை(ஹீரோவின் பெயர்) தாய் தந்தை இல்லாத குறை தெரியாமல் வளர்த்த கிழவி கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கூனல் கிழவி பேராண்டியை பாசமாக திட்டுகிற இடங்கள் அருமை.!

ஒட்டுப்பொறுக்கியின் அத்தை பொண்ணாக ஹீரோயின்.,வழக்கமான தமிழ் படங்களைப்போலவே அத்தை பெண் மீது ஹீரோவுக்கு காதல் பூக்கிறது.I Love You என்கிற வழக்கமான சினிமா முறையில் அல்லாமல் "நான் உன்ன நெனக்கிறேன்" .. என்று கிராமத்து வார்த்தையில் வேதிகா தன் காதலை சொன்ன இடம் சிலிர்க்க வைத்தது.( பஞ்சாயத்து இல்லாமல் கிராமத்து கதையா ?? என நினைக்கும் போது கதையின் ஒரு இடத்தில் பஞ்சாயத்து கூடுகிறது ).

வெள்ளையனின் கைக்கூலியாக இருக்கும் "கங்கானி" தேயிலை தோட்டத்துக்கு   மக்களை இனிக்க இனிக்க பேசி ஆசைகாட்டி வேலை வாங்கி தருவதாக கூறி கொத்தடிமைகளாக கொத்து கொத்தாக தூக்கி செல்கிறார். சாமி சிரிப்பு.. சிரிப்பா.. பேசுது பாரு என்று கங்கானியின் பேச்சை நம்பி வெள்ளந்தியாக வெள்ளைக்காரனுக்கு அடிமையாக பன்னிரன்டனா பத்திரத்தில் கைநாட்டு போட்டு பச்சை மலை எஸ்டேட் நோக்கி பாதம் நோக 48 நாட்கள் நடந்து பயணம் போகிறது அந்த பாவப்பட்ட கூட்டம்.

இடைவேளைக்கு பின் தேயிலை தோட்டத்தில் கிராமத்து மக்கள் படுகிற துயரத்தை பதிவு செய்துள்ளார் பாலா. ஒரு நாளைக்கு முப்பது கூடை கொழுந்து இலைகளை பறிக்க  வேண்டும் என்று புதிய அடிமையாக வந்த பெண்ணிடம் பழைய அடிமையாக இருக்கும் ஒரு பெண் பாடம் சொல்லி தருகிறார்.( ஒரு கூடையை நிறைக்கவே மணிக்கணக்கு ஆகும்.போல பெரிய கூடை...30 கூடை நிறைக்கனுமானு சொல்லும் போது உழைப்பை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் மீது கோபம் வந்தது?? ).இது தவிற அட்டைப்பூச்சி கடி, வெள்ளையனின் காமப்பசி, சவுக்கடி,விசக்காய்ச்சல் என தேயிலை பறிக்க போன கூட்டம் பல உராய்வுகளால் தேய துவங்குகிறது.

                                 

கொடிய நோய் வந்து கொத்தடிமைகள் கொத்து கொத்தாக செத்து மடியும் போது கர்த்தரின் பெயர் சொல்லி மதம் பரப்ப ஒரு கூட்டம் வருகிறது. (இந்த லிங்கில் உள்ளகட்டுரையில் இலங்கையில் துயரப்படும் நம் தமிழினத்தை மதம் மாற்ற முயன்ற உண்மை கதையைஉருக்கமாக மணி அண்ணன் எழுதியுள்ளார்) இவனுங்களையெல்லாம் என்ன தான் பண்றது...

அழுகைக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் கர்த்தரின் கருணையால்  ரசிகர்களின் மனதிலும்,முகத்திலும் புன்னகை பூக்க செய்து சில நிமிடம் சிரிக்க வைக்கிறது "அல்லேலூயா..." பாடல் (அழுகாச்சி ராகங்களாகவே ஒளிக்கும் கிறித்தவ இசை ஜி.வி பிரகாசின் கருணையால் துள்ளலாக இசைக்கிறது).விச காய்ச்சலில் இறந்து போன அடிமைகளுக்காக அடிக்கும் சாவு கொட்டு போல ஒலிக்கிறது.(பாடல் எனக்கு மிக பிடித்திருந்தது).

வேலைக்கு கூலி,வேளா வேளைக்கு உணவு என நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.மருத்துவர்,சாமியார்,வெள்ளைக்காரன், வெள்ளைக்காரனின் கைக்கூலியான "கங்கானி" இவர்கள் தான் அடிமைகள் தயவில் அற்புத வாழ்வை வாழ்கிறார்கள் .வழக்கமான சினிமாக்களில் வருகிற மாதிரி ஹீரோ பறந்து சண்டைபோட்டு அடிமைகள் வாழ்வை மீட்க வரமாட்டானா என்று எண்ண வைக்கிறது...

அடிமை இந்தியா... ஆங்கிலேயனின் ஆதிக்க வெறி... ஆகியவற்றை உருக்கமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். தமிழ் சினிமாவில் ஒரு முத்திரையாக என்றென்ன்றும் இந்த பரதேசி இருப்பான்.


(படம் முடிந்ததும் சுதந்திர காற்றை நமக்கு வாங்கி தந்த தலைவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!! கூறிக்கொண்டேன்..)

"செந்நீர் தானா ? செந்நீர் தானா?
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா?

என்று டீ குடிக்கும் போதெல்லாம் இனி யோசித்துகொள்வோம் !

பரதேசி - படமல்ல பதிவு !

டிஸ்கி: கடற்கரை  வலைப்பூவில் வெளிவரும் முதல் திரை விமர்சனம் இது..

படத்தில் உள்ள குறைகளை பற்றிய பதிவு... மறக்காம இதையும் படிங்க...

Labels: , , , , ,

6 Comments:

At Wed Mar 20, 08:58:00 am , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் நன்று...

தொடர வாழ்த்துக்கள்...

 
At Wed Mar 20, 09:22:00 am , Blogger Unknown said...

This comment has been removed by the author.

 
At Wed Mar 20, 09:23:00 am , Blogger Unknown said...

//கதையை எழுதியது "பாலா" என்றே படத்தில் வருகிறது. ஆங்கில திரைப்படங்களில் " Based on the Story Of ……" "Adopted from....... " என்று போடுவது மாதிரி தமிழில் ஏன் அப்படி போடுவதில்லை என்று எனக்கு கோபம் வருகிறது.//

கொஞ்சம் லேட்டா போனிங்களா???படம் துவங்கும் முன்பே.. this movie is inspired by the Novel Red tea writter by Paul Harris Danie காண்பித்து விட்டு தான் படமே துவங்கும்.

 
At Wed Mar 20, 09:26:00 am , Blogger Vijayan Durai said...

@senthilkumar

நன்றி பாஸ்

 
At Wed Mar 20, 02:34:00 pm , Blogger ஜீவன் சுப்பு said...

நெகட்டிவா சொல்றேன்னு நினைக்க வேண்டாம் .
சினிமா விமர்சனம் படிச்சு படிச்சு புளிச்சு போச்சு . வேண்டாமே இனியும் சினிமா விமர்சனம் . உம்மிடம் கதை , கவிதைன்னு எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு அதுவே போதும் .

 
At Wed Mar 20, 05:57:00 pm , Blogger சீனு said...

// உழைப்பை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் மீது கோபம் வந்தது?? // அருமையான வார்த்தைகள்

//இவனுங்களையெல்லாம் என்ன தான் பண்றது...// இந்தப் பையன் ரொம்ப அனுபவப் பட்டு இருக்கான்னு நினைக்கிறன்

//"செந்நீர் தானா ? செந்நீர் தானா?
செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா?// அட இந்த வரிகளை இப்பொழுது தான் உருப்படியாய் படிக்கிறேன்.. என்ன ஒரு வரிகள்....

விமர்சனம் எழுத நன்றாகவே வருகிறது... தொடர்ந்து முயலவும்... என்ன ஒன்று பிடித்த படங்கள் என்று கூறியதால் மகிழ்ச்சி....

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home