Thursday, December 11, 2014

பட்டியலிடப்படாத புது சித்தன்

கவிச்சித்தன் பாரதி 

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
 யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
                                      -பாரதி

ரலாற்றை கி.மு , கி.பி எனப் பிரித்து அடையாளப் படுத்துவது மாதிரி , தமிழ் கவிதையின் காலகட்டத்தை பாரதிக்கு முன், பாரதிக்குப் பின் என பிரித்துச் சொல்லலாம். அவனுக்கு முன் புழக்கத்தில் இருந்த கவிமரபை ,கவிதைக்கான வடிவத்தை, அதில் ஊடாடும் சொல்வரிசைகளை, வார்த்தைகளை புதிதாக்கி கவி செய்தவன் பாரதி. புதுக்கவிதை வடிவத்தை தமிழுக்குள் அறிமுகம் புகுத்தியவன் பாரதியே என்றே சொல்லலாம்.

சொல் புதிது, பொருள் புதிது
சோதி மிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மாகவிதை

என்று தன் கவிதைகளுக்குத் தானே ஒரு வரையறை சொல்கிறான். பாரதியின் கவிக்குழந்தைகளை இசைத்தொட்டில் கட்டி ஆட்டுவித்தால் இன்றளவும் கூட ரசிப்பதற்கு ஆளுண்டு.

தேச விடுதலை, தெய்வப் பாடல்கள், மனஉறுதிப் பாடல்கள், மாமனிதர்களைப் பற்றிய பாடல்கள் என பல பாடுபொருள்களைக் கொண்டு பாடியிருக்கிறான்., அவை அத்தனையையும் மொத்தமாய்ச் சேர்த்தால் சில நூறு பக்கங்களில் அடக்கிவிடலாம், அவனது மொத்தக் கவிதைகளையும் குறைந்தபட்சம் 50 ரூபாய் கொடுத்து மலிவுவிலை பதிப்பாக வாங்கி விடலாம்.

சரி,  நாம் கட்டுரைக்கிட்ட தலைப்பை கவனிப்போம் :)

பாரதி தனக்கென சுயசரிதை ஒன்றை எழுதுவதற்கெண்ணமிட்டு ஒரு பாட்டுத்தொடரை ஆரம்பித்தான் , அவனது அதிர்ஷ்டமோ , நம் அதிர்ஷ்டமோ என்னவோ அது 66 பாடல்கள் மட்டுமே எழுதப்பட்ட நிலையிலேயே பாரதி தனது உலக வாழ்வை முடித்துக்கொண்டான்.

அதன் முதல் வரியிலேயே தன்னை ஒரு சித்தன் என பறைசாற்றிக்கொண்டு ஆரம்பிக்கிறான். நான் இன்ன தேதியில் பிறந்தேன், தாய் தந்தையர் இன்னார் என்றெல்லாம் கதை சொல்லி அதை வாழ்க்கைக்கோப்பாகச் செய்யாமல் வாழ்வியல் கோப்பாக செய்திருக்கிறான்.   
பாரதி 66 


இந்த பாடல் கோப்பை கூர்ந்து நோக்கும் போது சுயபுரணம் பாடாமல் சுயமாய் தான் உணர்ந்த உண்மைகளை அவன் உரைப்பதை உணர முடியும் .சக்தி உபாசனை, கவலையொழித்தல்,மெய்ஞான உரைகள், தான் கண்ட மனிதர்கள் என கூறிக்கொண்டு போகிறான் , ஒரு பாடலில் இப்படி சொல்கிறான்.,

விசமருந்தியும் சாகமல் இருக்கும் வித்தை கற்றால், வேறென்ன வேண்டும் எனக்கிங்கு என,

இதேபோல அநேகமான பாடல்களில் மரணமில்லை தனக்கென சொல்லிக்கொள்கிறான்.அதே சமயம் அதை வாசிப்போருக்கும் அப்படிச் சாகதிருப்பதற்கான சாத்திரத்தையும் கற்பிக்கிறான்.

இம்மாதிரியாக பாரதி பாடிய ஞானப் பாடல்களைக் கவனிக்கும் போது அவன் சித்தர்களின் மனோநிலையில் நின்று அதை அமைத்துக் கொடுத்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பெரிய பெரிய மேற்கோளெல்லாம் கூட வேண்டாம், இளையராஜா மெட்டமைத்து பாரதி திரைப்படத்தில்  "நிற்பதுவே , நடப்பதுவே " என்றொரு பாடல் வருமே,  கேட்டிருக்கிறீர்களா .

அதில் அவன்  எல்லாமே மாயையா, இது, அது, நான் என எல்லாமே மாயையா !!, கற்றது, கேட்டது, கருதுவது எல்லாமே மாயையா !!, காட்சிப்பிழையா, தோற்ற மயக்கங்களா !! என புலம்பித் தீர்க்கிறான்... ஒரு மாபெரும் குழப்ப சுழலை உருவாக்கி அதில் குதிக்கிறான்.

அதே நேரம் அந்த பாடலின் கடைசி வரியில் (பாரதி திரைப்பட பாடலில் இந்த கடைசி வரி பாடப்படவில்லை) ஒரு முடிவுக்கு வருகிறான்.

 காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே- நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் – இந்தக் காட்சி நித்தியமாம்.


எதையெல்லாம் பார்க்கிறேனோ அது எல்லாம் உண்டு, உண்மை, நித்தியம் என.

பாரதியிடம் எனக்கு மிக மிகப் பிடித்த குணாதிசயம் இது தான், தானே கேள்விச்சுழலை உருவாக்கி உள்ளே குதித்துப் பின் வார்த்தை கயிறொன்றைக் கட்டி ,அதைப் பிடித்துக்கொண்டு வெளிவந்துவிடுவான்.இதே வகையறாவில் இன்னும் நிறைய பாடல்களைச் சொல்லலாம்.

" நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா !" பாடலில் கூட

"பொன்னை,  உயர்வை, புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று " புலம்பிக்கொண்டே சென்று, இறுதியில் துன்பமில்லை ,தோல்வியில்லை என முடித்திருப்பான்.

குழப்பம் கொண்டு, மீண்டு வருதல் என்பதுதான் சித்தர்கள் உருவாக ஆதார காரணம், பட்டினத்தார்,இடைக்காடர் என அநேக சித்தர்கள் அப்படித்தான் வந்திருக்கிறார்கள். பாரதியும் அப்படித்தான் , ஒருமுறை அப்படி முழுவதும் மூழ்கி, பின் ஆழ்ந்த தெளிவு பெற்று  வெளிவந்த பின்னர் அவர்களை துன்பம் எதுவும் அணுகுவதில்லை.

புரட்சிக் கருத்துக்களை தூவிவிட்டதை காரணம் சொல்லி  வெள்ளையர்கள் பாரதியை சிறைபிடிக்க முயல்கிறார்கள், வறுமை, துன்பம், கவலை, என பல விசயங்கள் அவரைத் துரத்துகின்றன. இருந்தும் அவரது பாடல்களில் அந்த துன்பத்தின் சுவடு அணுத்துகள் அளவுகூட கிடையாது.

The Law Of Attraction என்று ஒரு தியரி சொல்கிறார்கள் துன்பமில்லை , துன்பமில்லை என சொல்லிக்கொண்டே இருந்தால் துன்பம் இல்லாதொழிந்து போகும், நான் வெற்றிகொள்வேன் என மனப்பூர்வமாக அவநம்பிக்கை சிறிதுமின்றி எண்ணிக்கொண்டே இருந்தால் வெற்றி கிடைக்கிறது. சதா கஷ்டம் தான்., இறைவனிட்ட வழி இது, எல்லாம் தலையெழுத்து எதுவும் மாறப்போவதில்லை என சொல்லிக்கொண்டிருந்தால் துன்பம் நீங்காதிருந்து வதைக்கிறது,

நினைத்ததே நிகழ்கிறது என்பதே நிதர்சனம்  .

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆன்ந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று " என சுதந்திரம் வருவதற்கு முன்பே பாடிவைத்தவன் பாரதி

இதைச் சுட்டிக்காட்டி பலர்,  பாரதி ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள் , இன்னொன்றும் சொல்வேன் நான் , அவன் அத்தனை தீர்க்கமான சிந்தனையுடன் , எண்ணச்செறிவுடன் , சதா சர்வ காலமும் சுதந்திர நினைவுடன்  அதை பாடியதால் தான் , அந்த பாடலை அவன் பாடிச்சென்ற சில வருடங்களிலேயே சுதந்திரம் கிடைத்தது, வெள்ளையன் நம் நாடு விட்டு அகன்றான் .

                                 ***********

மகாகவி பாரதியார்

ம்மை இதை செய், அதை செய் என்றெல்லாம் உள்ளிருந்து இயக்கும்  அந்த கண்ணுக்குப் புலப்படாத செயலிக்கு (சாப்ட்வேர் புரோக்ராமிற்கு ) Mind என பெயரிட்டுள்ளோம், இந்த மைன்டை பழங்கால சாத்திரங்கள் மனம்,புத்தி,சித்தம்,அஹங்காரம் என பிரித்துள்ளன.

அஹங்காரம் : நான் என்ற உணர்வு

மனம் – இந்த நான்கிற்கான கூட்டுப்பெயர், பிறந்தது முதலாய் நாம் கற்றுக்கொள்ளும் அத்தனையும் +  கடந்த ஜென்மத்திய நினைவுகளின் சாரம்

(ஒப்பீடு : கணினியில் பதியப்பட்ட டேட்டா,கோப்புகள்)

புத்தி- ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம் மாதிரி, நமக்குள் பதிவானவை

(ஒப்பீடு: Software)

சித்தம்: எதை செய்ய வேண்டும் என்று சொல்கிற செயல் உணர்வு, நிகழ்வுகளுக்கேற்ப நமது response ஐ தருவது.
(ஒப்பீடு: Software ஐ வேலை செய்ய வைக்கும் இயங்கு செயலி (executor))

சித்தம் குழம்புவதால் தான் இன்ப,துன்பங்கள் எல்லாம் ஏற்படுகின்றன, (எந்த நேரத்தில் எந்த புரோகிராமை எக்ஸ்கியூட் செய்ய வேண்டும் எனத் தீர்மாணிப்பது சித்தம் தானே)

சித்த தெளிவு கொண்டவனே சித்தன்., (சித்து வேலை செயனல்ல J )

ஒரு பாடலிலே பாரதி மாயை உடன் சண்டை பிடிக்கிறான்.,

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே- நீ
சித்தத் தெளிவெனுந்த் தீயின்முன்
நிற்பாயோ? – மாயையே !

சித்த தெளிவு கிடைத்து விட்டால் மாயை இருக்காது என்பதைத் தான் கால காலமாக சித்தர்கள் அனைவரும் நிரூபணம் செய்து வந்துள்ளனர்,
சித்தம் தெளிவாக்கு , அல்லால் இதை செத்த உடலாக்கு என சித்த சுத்தியை வேண்டிய நம் பாரதியும் ஒரு புதுயுக சித்தன் தான்.

சிவ வாக்கிய சித்தர் கல்லை சிவமென்று வணங்குபவர்களை நோக்கி
செங்கலும், கருங்கலும் சிவந்த சாதிலிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவனிருப்பான் என்கிறீர்
உம்பதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல் பாடலாகுமே  -    என சொல்கிறார்

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? – பல
பித்த மதங்களிலேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?  - என கோப்ப் படுகிறார் பாரதி.

சில பாடல்களில் அது வேண்டும், இது வேண்டும் என அன்னை பராசக்தியை ஆசை கொண்டு கேட்கும் அதே பாரதி , வேறு சிலதில் ஆசை தவறென்கிறான்,

சினம் கொள்ளாதே என்கிற அதே பாரதி தான்

சாத்திரம் பேசுகிறாய்- கண்ணம்மா !
சாத்திர மேதுக் கடீ !
ஆத்திரங்க் கொண்டவர்க்கே, -கண்ணம்மா
சாத்திரமுண்டோ டீ !

ஆத்திரம் கொண்டவர்க்கு சாத்திரம் எதற்கடி என கண்ணம்மாவை கடிந்துகொண்டே கன்னத்தில் முத்தம் கேட்கிறார்
அவரது முரண்களுக்குள் எல்லாமொரு இணைப்புக் கண்ணி இருக்கிறது., காரணம் இருக்கிறது, ஒரு அழகும் இருக்கிறது.

சித்தர்களை புரிந்து கொள்வது சிரமம், அவர்களது செயல்கள் சாதரணர்களுக்கு கிறுக்குத் தனங்கள் போலும் கூட தெரியலாம். அதற்காக கிறுக்கர்களையெல்லாம் சித்தன் என்றுவிட முடியாது. ( All dogs barks, but all who barks are not dogs என்பது மாதிரி.). பாரதியின் வாழ்வில் இருந்து பல நிகழ்வுகளை ஆதாரம் சொல்ல முடியும்.

வீட்டில் உள்ளவர்க்கே சோறில்லை என இருக்கும் போது காக்கைக் குருவிகளுக்கு அதை எடுத்து தூவிக் கொண்டிருப்பது, தாழ்ந்த ஜாதியினர் என ஒதுக்கி வைத்தவர்களௌக்கு பூநூல் போட்டு உயர்குடி ஆக்குவதற்கு முயல்வது, சிங்கத்திடம் சென்று “நீ காட்டு ராஜன் நான் ,கவி ராஜன் என ராஜ சந்திப்பைக் கோருவது .,  மதம் பிடித்த யானையைப் பார்த்து ஊரே ஓடும் போது அதை நேருக்கு நேர் எதிர்கொள்வது., மரணித்த பின்னாலும் சாகாதிருப்பது.


பாரதியை ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது , அவனை ரசிக்காமல்,வியக்காமல் இருக்க முடிவதில்லை.,

மகாகவியே உன் பாதம் பணிகிறேன்....





 

Post Comment

Tuesday, December 02, 2014

எச்சரிக்கை

இலக்கியங்கள் - ஜாக்கிரதை



“நான் என் பாட்டுக்கு எழுதிக் கொண்டே போவேன், நீ புரிந்துகொண்டால் புரிந்துகொள் , இல்லாவிட்டால் சொறிந்துகொண்டு போ என்கிற மனப்பான்மை நல்லதல்ல”
                                                                                                                       -சுஜாதா
 தேர்ந்த பெண்ணியவாதி ஒருவரின் கவிதை ஒன்றை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதில் அவர் என்ன சொல்கிறார் என்பதை ஏனோதானோ என ஏதோ ஒன்றாகத் தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . வாசிக்கிறோம், வாசித்துப் புரியவில்லை ,திரும்ப திரும்ப வாசிக்கிறோம் ,புரிந்து கொள்ள முற்படுகிறோம் ,புரிகிறதோ இல்லையோ ஆனால் நம் மனம் ஒரு புரிதலை தானே சித்தரித்துக்கொள்கிறது.

 இப்படியான அரைகுறை புரிதல்கள் சரிதானா, என எனக்குள் சிந்திக்கும் போது, சர்வ நிச்சயமாக தவறுதான் என உள்ளுணர்வு சொல்கிறது.
தர்க்கரீதியாக என்னை நானே சமாதானம் செய்தபடி,எனக்கு நானே கூறிக்கொள்கிறேன், “சரியான ஒரு விசயத்தை தவறாக புரிந்துகொள்வது எப்படி தவறோ, அதேமாதிரி சரியான ஒரு விசயத்தை தவறாக புரிந்து கொள்ளப்படுகிற மாதிரி கூறுவதும் தவறுதான் “

இலக்கியம் என்றாலே ஏன் பெரும்பான்மையான மக்கள் பயந்து தலை தெறிக்க ஓடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு அது புரியவில்லை என்பது தான் காரணம். 

நம்மவர்களில் பெரும்பான்மையினரின் உலகம் என்பது அவசர அவசரமாக எழுந்து, இயற்கை உந்துதல்களை முடித்து, பல் தேய்த்து , குளியல் என்கிற பெயரில் தூக்கத்தை தண்ணீர் ஊற்றி கலைத்து ,துரித கதியில் தயாராகி வேகவேகமாக இட்லியையோ, தோசையையோ விழுங்கிவிட்டு அலுவலகம், பள்ளிக்கூடம்,கல்லூரி, தொழிற்சாலை என எங்காவது செல்கிறவர்களாலும், அரக்க பறக்க கனவனையோ , குழந்தையையோ பணிக்கோ, பள்ளிக்கோ தயார் செய்கிற தாய்க்குலங்களாலும் தான்  நிறைந்திருக்கிறது.

ஆங்காங்கே கிடைக்கிற ஓய்வு நேரங்களை தூங்கிக் கழித்தும் ஓய்வெடுத்துக்கொண்டும் கழிக்கவே பெரும்பான்மை சமூகம் விரும்புகிறது, இந்த இடைப்பட்ட ஓய்வு நேரத்தில் களைத்துப்போய் கிடக்கிறவர்களுள் என்னை மாதிரி யாராவது ஒருத்தர் அதிகப்பிரசங்கித்தனமாக கவிதைப் படிக்கிறேன், இலக்கியம் வாசிக்கிறேன் என இலக்கியமில்லாத இலக்கியத்தையும், கவிதையல்லாத கவிதைகளையும் கையில் எடுக்கிற போது , “ஓ !! இலக்கியம் என்றால் இதுதான் போல !!”  என்கிற ஆற்றாமையிலும் ,பயத்திலும் கடுப்பாகவோ அல்லது “ஐ !! கவிதை எழுதுவது இத்தனை எளிதா “ என்கிற விசப்பரிட்சையிலோ இறங்கி விட நேர்கிறது.

என்டர் கவிதைகளையும், புரியாத இலக்கில்லாத இலக்கிய குப்பைகளையும் சேர விட்ட பெருமை , சாட்சாத் நவயுக எழுத்தாளர்களையே சாரும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
முடிவில்லாத Dominos Effect  மாதிரி , இன்னமும் அடுக்கி வைத்த அத்தனையும் விழுந்துகொண்டே இருக்கிறது, விழுகிற ஒவ்வொன்றும் விழாதிருப்பதை விழுத்தாட்டிக்கொண்டே செல்கிறது.
எழுத்துலகில் Updation  அவசியம் தான் ஆனால் புதுமை என்கிற பெயரில் அர்த்தமற்ற குப்பைகளை குவித்தல் தவறு.

சரி.,

வாசிக்கிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது., அதிலும் தமிழ் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைந்துவிட்டது என சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அது உண்மையா ?,  உண்மை போல் தான் தெரிகிறது., அதேநேரம் வாசகர்களுக்கு பிடித்த மற்றும் தேவையான விசயங்களை புரிகிற வகையில் சலிப்புத்தட்டாத நடையில் எழுதித்தருகிற எழுத்தாளர்களும் குறைந்துவருகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்கிற மாதிரி எழுதிக்குவிக்கிறவனெல்லாம் எழுத்தாளன் என்கிற மூடநம்பிக்கை பரவலாக பரவி வருகிறது.

கண் ஆரோக்கியம் பற்றிய புத்தகம் ஒன்றின் அட்டையில் கண்ணாடியுடன் போஸ் கொடுக்கிறார் ஒரு எழுத்தாளர், தமிழ் வழிக்கல்வி பற்றி பேசுகிற எழுத்தாளர் ஒருவர் தன் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

எழுத்தாளன், கவிஞன், படைப்பாளி என்கிற அரியாசனங்கள் பல அற்புத  மனிதர்கள் ஏறியவை, ஏறுவதற்கு முன் ஏறுவதற்காக தயார் செய்து கொள்ளுங்கள், ஏறியிருக்கிறவர்கள் பொறுப்போடு எழுத்தாளுங்கள் !
ஒரு குட்டிக்கதை சொல்லிவிட்டு ஆரம்பித்து வைத்த விசயத்தை முடித்து விடுகிறேன் !

கொசுப்பிரச்சினையைக் குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடந்ததே !!, அந்த மாதிரி மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் அவர்கள் ஊரில் பெருகிவரும் எலித்தொல்லையைக் குறைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை ஆரம்பித்தது, ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுத்தார்கள், முடிவில் பூனை வளர்க்கும் ஐடியா பெரும்பான்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டது, வீட்டுக்கொரு பூனை அரசு சார்பில் இலவசமாக தரப்படும் என தீர்மாணம் எழுதப்பட்டது.

இலவச பூனை விநியோகம் இனிதே ஆரம்பித்தது.., அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், சாமானியர்கள், பணக்காரன் ,ஏழை என எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

தெனாலிராமன் வீட்டிற்கும் ஒரு பூனை கொடுக்கப்பட்டது, “ராஜா பூனையை மட்டும் தருகிறாரே , பூனை வளர்க்க மானியம் எதுவும் தரவில்லையே , எப்படி அந்த மானியத்தை அரசரிடமிருந்து சமயோசிதமாக வாங்கலாம்” என யோசனை செய்த தெனாலிராமனுக்கு ஒரு பொறி தட்டியது.

பூனையை கட்டிப்போட்டு பசியோடு போட்டான் , பசித்த பூனைக்கு சுடச்சுட சூடான பாலை வைத்தான்., குடிக்க முயன்று நாக்கை வைத்து வெந்துபோனது., தொடர்ந்து சூடான பாலையே வைக்கிறான், சூடான பதார்த்தங்கள், சூடான பால் , சூடு கண்டு சூடு கண்டு பாலையும், உணவையும் வெறுத்து விடுகிறது பூனை.
சில நாட்களுக்குப் பிறகு..,

அரசவை சார்பாக பூனைகளை வீட்டிற்கு வீடு சென்று சோதனை செய்யும் இலாகா தன் பணியை ஆரம்பிக்கிறது, தெனாலிராமனின் பூனையைப் பார்த்து அதிர்ச்சியான அரசு ஊழியர்கள் என்ன இது என விசாரிக்கிறார்கள் “ நான் என்ன செய்யட்டும் இந்த பூனை பாலையே குடிக்க மாட்டேன் என்கிறது, பாலைப் பார்த்தாலே பயந்து ஓடி விடுகிறது. “ எனக்கூறுகிறான்

“பால் குடிக்காத பூனையா... விளையாடுகிறாயா நீ ?”

“நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்..”

“அட ! ஆமாம், என்னடா இது வினோதமாய் இருக்கிறது”

அரசர் முன் அழைத்துச் செல்லப்படுகிறான் , அரசர் விசாரணையை ஆரம்பிக்கிறார், இவன் செய்த தில்லாலங்கடி வேலை யாருக்குமே பிடிபடவில்லை, அரசரே அவனிடம் வினவுகிறார் “ஏய் ராமா ! வழக்கம் போலவே இது நிச்சயம் உன் தந்திரமாகத் தான் இருக்க வேண்டும், எதற்காக இந்த தந்திரம்”  என்று

அரசனிடம் தன் சமயோசிதத்தைப் பயன்படுத்தி பரிசு பெருகிறான்  அதன்பின் மக்களுக்கு பூனை வளர்ப்பு மானியமும் பெற்றுத்தருகிறான் என்பதாக கதை முடிகிறது.

தற்கால வாசகனும் தெனாலி ராமன் வளர்த்த பூனை மாதிரி தான் பாடப்புத்தகம் பயமுறுத்தும் பயமுறுத்தல்களிடமிருந்து தப்பி வாசிப்பதற்காக புதிதாக புத்தகம் எடுப்பவனை கனமான, வாசிக்க சிரமமான, வாசித்தால் களைப்பாகிற வகையறா எழுத்துக்களைக் காட்டி பயமுறுத்தினால் அவன் என்ன செய்வான் !!
புத்தகங்களை கண்டு ஓடுவதைத் தவிர...

(இன்னும் பேசலாம்... )



 

Post Comment

Tuesday, October 21, 2014

நாளைக்கு தீபாவளி (தீபாவளி சிறப்பு சிறுகதை)

வருசத்துல ஒரு நா.. (ள்)
(தீபாவளி சிறுகதை)

சமர்ப்பணம்:
தீபாவளியை தவறவிட்ட, தவறவிட்டுக்கொண்டிருக்கும் அத்தனைப்பேருக்கும் இந்த கதை சமர்ப்பணம்.

நீங்கள் அங்கே இருக்கிறீர்கள், நான் இங்கே , நான் இதை எழுதியதும் நீங்கள் வாசிப்பதும் வேறு வேறான காலவெளியில் நிகழ்கிறது, நிகழ்காலம் என்று நாம் சொல்லுகிற சொல்லிக்கொள்கிற இந்த நிகழும் காலம் தன் ஒவ்வொரு மணித்துளியையும் கடந்த காலம் என்னும் பாதளத்திற்குள் பாய்ச்சியபடியே முன்னோக்கி நகர்ந்தபடி இருக்கிறது. "கடந்தகாலம்" ஒரு ரிலே ரேஸ்க்காரன் மாதிரி எதிர்காலத்தின் கைகளில் நம்மை இடமாற்றி விட்டபடி  ஓடிக்கொண்டிருக்கிறது.

வழக்கம் போலவே எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.,  இதை வாசித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கு இப்போது நான் ஒரு கதை சொல்லலாம் என நினைத்திருந்தேன். எனது கடந்த வருடத்திய தீபாவளியை பற்றிய கதை.

 வருடம் தவறாமல் ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசி திதியில் தீபாவளிகள் மறக்காமல் வந்து விடுகின்றன. "வருசத்துல ஒரு நா..(ள்) " என ஆரம்பித்து ஒரு நீண்ட உரை கொடுத்துக் கொண்டிருந்தார் அம்மா  "உம்..." உம்.." உம்.".... "மகாராஸ்ட்ரா- ஒஸ்மனாபாத்"... "உம்" "வந்துட்டு இருக்கேன்., தீபாவளிக்குள்ள வந்துருவேன்". என சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.

நேற்றே முடிந்திருக்க வேண்டிய வேலை.. ப்ச்... கொஞ்சம் தாமதம் செய்துவிட்டது..சீனியர் என்ஜினியர் கணேஸ் ஜி. எங்களை விட்டுவிட்டு தீபாவளிக்கு. கிளம்பிவிட்டதன் விளைவு !!

"இப்படி ஆன்சைட்  வேலைனு வந்துட்டாலே இப்படித்தான் தம்பி, தீபாவளி,பொங்கல் என  பண்டிகைகள் எல்லாத்தையும் மறந்துடனும்.லீவ் இருந்தாலும் லீவ் எடுத்துக்க முடியாத படிக்கு வேலைகள் இருக்கும்"  முந்தைய நாள் சைட் எஞ்சினியர் செல்வராஜ் சார் சொன்னதை நினைத்துக் கொண்டேன்.

அவர் இந்த தீபாவளிக்கும் ஊருக்குப் போகவில்லை, (கடந்த ஐந்து வருடங்களாக எந்த தீபாவளிக்கும் போனதில்லை என சொல்லி இருந்தார்).

உலகத்தில் இப்படியும் சில ஜீவன்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன., பண்டிகைகளையும் ,சந்தோசங்களையும் துறந்தவாறு வெளிநாடுகளில் இருக்கும் எனது சொந்தங்களை நினைத்துக்கொண்டேன்.

சைட் விட்டுக் கிளம்பிய போது சாயங்காலம், செல்வராஜ் சார் எங்களிடையே கைகொடுத்து "ஹேப்பி தீபாவளி " சொல்லிக்கொண்டிருந்த போது அவர் தவறவிட்ட "தீபாவளிக்களின் சந்தோசம்" அவரின் குரலில் தெரிந்தது. "எப்படியும் நாளைக்கு காலைல கிளம்பினாக் கூட போய்டலாம் ..." அப்போது அவருக்கு ஹேப்பி தீபாவளி சொல்வது அபத்தமாகப் பட்டது. தேங்க்யூ சார் என சொல்லி வைத்தேன்...

அடுத்த நாள் விடிந்தால் தீபாவளி... எப்படியும் விடுமுறை கிடைத்துவிடும் வந்துவிடுவேன் என சொல்லியிருந்தேன். இன்னும் கிழம்பவே இல்லை எப்படியும் ஊர் போய்சேர வேகமாய் போனால் கூட குறைந்தபட்சம் 24 மணி நேரம் தேவை.

பெங்க்ளூர் வரை கம்பெனி வாகனம், அதன் பின் பஸ் பிடித்து ராமேஸ்வரம் வந்தாக வேண்டும்.

"பெங்களூருக்கே சஞ்சே ஆறு கண்டே ஒலகே ஹோக் புடுத்வி"

இன்னோவாவை வேகமாக பெங்க்ளூர் நோக்கி முடுக்கியிருந்தார் வெங்கட் அண்ணா, அவர் ஒருவரே தான் டிரைவ் செய்து கூட்டிப்போக வேண்டும், வண்டிக்குள்ளிருக்கும் எங்கள் யாருக்கும் டிரைவிங்க் தெரியாது.

நான் , ஜெயராஜ்,ரஞ்சித் ,வெங்கட் அண்ணா அனைவருமே தீபாவளியை டார்கெட் செய்து தான் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம், எங்கள் எல்லோருக்காகவும் ஊரில் ஒரு தீபாவளி குடும்பத்துடன் காத்துக் கொண்டிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலையில் தென் திசையில் விரைந்து கொண்டிருந்தோம்.. (எண் என் நினைவில் இல்லை ), ரஞ்சித் திருச்சி, ஜெயராஜும், வெங்கட் அண்ணாவும் பெங்களூர் , நான் ராமேஸ்வரம் வந்தாக வேண்டும்.

அவ்வப்போது சில தமிழக (TN) எண்ணிட்ட நேசனல் பெர்மிட் லாரிகள் வடக்குப் புறமாக அதாவது மகாராஸ்டிரம் நோக்கி விரைந்தபடி கண்ணில் பட்டப்படியே கடந்து கொண்டிருந்தன. காய்கறி,பழம், கல் என எதாவது போய்க்கொண்டிருக்கக்கூடும். இந்த லாரி டிரைவர்கள் எல்லாம் நாளை தீபாவளி கொண்டாடுவார்களா என யோசித்துக்கொண்டேன்.

சாலை வழியாக பயணத்தின் நீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது... "சாய்ங்காலத்திற்குள் பெங்களூர் போய்டலாம் " ரஞ்சித் சொன்னபோது காலை....மதியமாகிவிட்டிருந்தது.

இதற்கு முந்தைய தீபாவளிக்கு சென்னையில் இருந்து சென்றிருந்தபோது கண்ட அந்த அகோர கூட்டத்தை நினைத்த போது பீதியாக இருந்தது. பஸ் கிடைக்கவில்லை , ரயிலில் அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மென்டில் 10 மணி நேரம் நின்றுகொண்டே சென்றிருந்தேன்.

கண்டதையும் நினைத்து மண்டையை குழப்பிக்கொண்டிருந்தபோது... இன்னோவா ஒரு தாபா முன் நின்றது.,  மதியான சாப்பாட்டை முடித்துக்கொண்டு பயணத்தின் இரண்டாம் பாதியை தொடர்ந்தோம்.

இரண்டாம் பாதியில் என்னென்ன நடந்ததென்று எனக்கு நினைவில்லை., கண்விழித்த போது மணி மாலை 6.48 ,  வண்டியில் எப்.எம் ரேடியோ, ஜன்னலோரமாய் பெங்களூரு பெயர் தாங்கிய பெயர்பலகைகள்.

பெங்களூரு வந்துவிட்டது., ஊர் வந்துவிட்டமாதிரி ஒரு சந்தோசம்... வேலையில் சேர்ந்த இந்த சில மாதங்களில் மணி அடித்ததும் எச்சில் சுரக்கும் பாவ்லோவின் நாய் மாதிரி பெங்க்ளூர் பார்த்ததும் சந்தோசம் கொள்ள பழகி விட்டிருந்தோம்.

பெங்களூரில் பட்டாசுகள் அத்தனை பிரசித்தி இல்லை போலும் , சிற்சில வான வேடிக்கை வெடிகள் மட்டும் கண்ணில் பட்டன, நம் ஊரை நினைத்துக்கொண்டேன்.

எடுத்துச்சென்ற கருவிகளையெல்லாம் எடுத்து ஆபிஸிற்குள் வைத்துவிட்டு , ‘பத்து மணி நேரத்திற்குள்’ எங்களை பெங்களூரு அழைத்து வந்து சேர்ப்பித்த வெங்கட் அண்ணாவுக்கும், பக்கத்தில் படுத்துறங்கி வந்த ஜெயராஜுக்கும் "ஹேப்பி தீபாவளி" சொல்லிவிட்டு ரஞ்சித்தும் நானும் சாட்டிலைட் பஸ்ஸ்டான்ட் சென்றோம் , காத்திருந்து பஸ் ஏறிய போது இரவு பத்து மணி.

இடித்துப்பிடித்து ஏறியதில் , உட்கார இருக்கை கிடைத்தது. நான் பீதியடைந்து பயந்த அளவுக்கு எல்லாம் பஸ்ஸில் கூட்டம் இல்லை, எல்லோரும் எங்களுக்கு முன்பே கிழம்பிவிட்டார்களோ என்னவோ.

வெளியில் திருவிழா சந்தை மாதிரி கூட்டம் நின்றுகொண்டிருந்தது.சில நிமிடங்களுக்குள் பஸ் நிறைந்தது. லக்கேஜ் பேக்கை காலுக்குக் கீழ் வைத்துவிட்டு , டிக்கெட் எடுத்துவிட்டு , ரஞ்சித் வாங்கி வந்த "மாஸாவை" குடித்துவிட்டு , இருக்கையில் சாய்ந்தபோது , வெளியில் யாரோ கன்டக்டரிடம் சண்டைப்போட்டுக்கொண்டிருந்தார்கள். முன்னால் வருபவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது, பின்னால் வருபவர்கள் அவர்களை திட்டியபடியே ஏறுகிறார்கள், அவர்களுக்குப் பின்னும் வருபவர்கள் கன்டக்டரை கண்டபடி திட்டியபடி பயணத்தை தொடர வழியை யோசிக்கிறார்கள்.

"வந்துட்டே இருக்கேன்...இப்பத்தான் பெங்களூர்ல இருந்து கிளம்புறேன்... காலைல வந்துடுவேன்..  " வீட்டிலிருந்து வந்த போனை எடுத்து பதில் சொல்லிக்கொண்டிருந்த போது  நகரப்பேருந்து நகர ஆரம்பித்தது ,மணி :10.30 .

கூட்டம் கூட்டமாய், கும்பல் கும்பலாய், குடும்பம் குடும்பமாய் நிறைய பேர் நின்றுகொண்டிருந்தார்கள் , சிலர் அலைபேசிகளை காதுகளில் வைத்தபடி... எல்லோருமே என்னைப்போலவே யாரோ ஒருவருக்கு "வந்துகொண்டே இருக்கிறேன்..." என சொல்லிக்கொண்டிருப்பார்களோ !!.,

ஓடிவந்த யாரோ ஒருவரை ஒரு போலீஸ் அதிகாரி கம்பால் அடித்துக்கொண்டிருந்தார். ஏன் எதற்கென்றெல்லாம் தெரியவில்லை. பயணம் ஆரம்பிக்கும்போதே பயணித்து வந்த பயணக்களைப்பில் சாய்ந்துறங்கிவிட்டேன்.

அதிகாலையில் இடையில் ஓரிடத்தில் இறங்கி டீ குடித்தோம் , ட்ரைவர் முகம் கழுவிக்கொண்டார் ., “ஹோ !! இன்றைக்குத்தானே தீபாவளி , வீட்டில் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு எழுப்பிவிட்டிருப்பார்கள், எண்ணெய் குளியலுக்குத் தயாராய் அமர வைத்திருப்பர்கள், கறிக்கடையில் கறிவாங்கிவிட்டு அப்பா திரும்பியிருப்பார்...”

உறங்கி விழித்த போது திருச்சி வந்துவிட்டிருந்தது., தீபாவளி !! பட்டாசு சத்தம் ஆங்காங்கே ,அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது.

"ஹேப்பி தீபாவளி" சொல்லி ரஞ்சித் விடைபெற்றுக்கொண்டான். பஸ் ஸ்டான்டில் நின்றுகொண்டிருந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் பயமுறுத்தும் அளவு இல்லை, 
 பஸ்ஸை தேடிக்கொண்டிருந்தேன்...

பஸ் ட்ரைவர்கள் வீட்டிலெல்லாம் தீபாவளி இருக்கும் தானே , பின்னெப்படி இவர்கள் பஸ் ஓட்டுகிறார்கள், தீபாவளியுடன் காத்திருக்கும் குடும்பங்களை நினைத்துக் கொள்வார்களா ?? இல்லை... பழகிப் போயிருக்குமா

தேடிப்பிடித்து ஏறிக்கொண்டேன் ராமேஸ்வரம் பஸ்ஸில், 7மணிக்கு பஸ் எடுப்பார்களாம்.

மணி பார்க்க செல்போனை எடுத்தேன் ., பேட்டரியில் சார்ஜ் காலியாகி , செல் சொல்லாமல் மயங்கிவிட்டிருந்தது.

பஸ்ஸில் இரண்டு மூன்று இருக்கைகள் காலியாகத்தான் கிடந்தன , பஸ் நகர்ந்தது. டிக்கெட் எடுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்க்கத்துவங்கினேன் ,வெளியில் யாரோ ஒருவர் கஸ்டமர்கேர் பிரதிநிதியை காலையிலேயே கடிந்துகொண்டிருந்தார்.

இன்னும் 6 மணிநேரம் ஆகும் , வீட்டிலிருந்து எனக்கு கால் செய்ய முயன்றிருப்பார்களோ என்னவோ !! சார்ஜ் வேறு இல்லை, ஜன்னல் சீட்டில் அமர்ந்தபடி வேடிக்கையை தொடர்ந்தேன்... லக்கேஜ் பேக்கை கட்டிப்பிடித்தபடி அப்படியே தூங்கிவிட்டேன்.

காரைக்குடி கடந்து ஒரு இடத்தில் பயங்கர உலுக்கலுடன் பஸ் குழுங்கியது ரோட்டிற்கு கீழ் இறங்கி பள்ளத்தில் குதித்து, சில நிமிட முக்கல்களுக்குப் பின் கிழம்பியது.

விழித்துவிட்டிருந்தேன்... பஸ் ஊர் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

 சாலையோரமாக பட்டாசு பற்ற வைத்துக் கொண்டிருந்த அரை டிரவுசர் சிறுவர்கள் சில பேர் எனது பால்ய கால தீபாவளிக்களை கண் முன் காட்டிவிட்டு ஓடிச்சென்றார்கள், எனது இப்போதைய தீபாவளி மாதிரி வெடித்துச்சிதறியது அவர்கள் பற்ற வைத்தப் பட்டாசு.

எனக்காவது பாதி நாளில் துவங்கி இருக்கிறது , எத்தனை பேர் தங்களுடைய தீபாவளிக்களை இழந்து பணிசெய்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய தினத்தில்... பஸ்டிரைவர்கள்,லாரி ட்ரைவர்கள், கால்சென்டர் எக்ஸிகியூட்டிவ்கள், செல்வராஜ் சார் மாதிரி ஆன்சைட் ஊழியர்கள், அயல்தேசத்தில் பண்புரிபவர்கள்...

தீபாவளி சந்தோசங்களெல்லாம் குழந்தைப்பருவத்துடனேயே முடிந்துவிடுகின்றனவோ  ! 

30 மணி நேர பயணம் முடித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.....

வீடு வந்து சேர்ந்ததும் எனக்காக காத்திருந்த எண்ணெயை என் மீது தேய்த்து குளிக்க வைத்துவிட்டார்கள்...

குளித்து,சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன்...தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்,பட்டாசுகள்,புது ரிலீஸ் திரைப்படங்கள்,பார்ட்டிகள் நான் இல்லாமல் தீபாவளி
 நகர்ந்து முடிந்திருந்தபோது , விழித்திருந்தேன்...

பின்குறிப்பு :

இந்த கதையை எழுதி முடித்துவிட்டு திரும்ப வாசித்து சரிபார்க்கையில்  என்னுடன் பெங்களூரில் பணிபுரிந்த கார்த்திக் மகராஸ்ட்ராவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக செல்போனில் செய்தி கூறினார்...

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


----------------------------------------------------------------------------------------------------
தீபாவளி தொடர்புடைய பதிவுகள்:



பாகம் -2 







 

Post Comment

Tuesday, October 07, 2014

இலக்கியங்களால் என்ன பயன் ???

இலக்கியங்களால் என்ன பயன் ???

 சோற்றிற்கு உதவாத தேவையற்ற விசயம் என்று சொல்லிக்கொண்டு பெரும்பான்மையான மக்களால் தட்டிக் கழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிற இந்த இலக்கியங்களால் இந்த சமூகத்திற்கு என்னப் பயன் பெரிதாய் விளைந்து விடப்போகிறது...

எல்லாவற்றிலும் எதாவது ஒரு பலனை,பயனை எதிர்நோக்கியே அநேகர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இந்த புத்தகத்தை படித்தால் எங்கு வேலைக்குச் செல்லமுடியும் ?, இதை எழுதிக் கொண்டிருக்கிறாயே ! இதனால் என்ன லாபம் ?, நிகர லாபம் சுழி என வருகிற விசயங்களையெல்லாம் சுழித்துவிட்டு நகரவே எல்லோரும் விருப்பப் படுகிறோம்.இலக்கியப் படிப்பைப் பட்டப்படிப்பாக எடுத்துப் படிப்பது குறைந்திருப்பதன் காரணமும் இந்த பயன் வேண்டி படித்தலின் பாதிப்பு தான்.

இப்படியான சமூகத்தில் இலக்கியம் வாசிப்பவனாக, இலக்கியம் படைப்பவனாக வாழ்வதென்பது சிரமம் தான், ஆனால் இலக்கியம், எப்போதும் தனக்கென ஒரு உலகத்தை எல்லா காலக் கட்டத்திலும் அமைத்துக் கொள்கிறது, அந்த வகையில் தான் நானும் , நீங்களும், இன்னும் சிலரும்,  இந்த கால சமூகத்தில் இலக்கியங்களை எழுதிக் கொண்டிருக்கும் இலக்கிய எழுத்தாளர்களும்.

சரி , தலைப்பை தொடரலாம்...

இலக்கியங்களால் என்ன பயன்...


இலக்கியங்களால் பயன் என்ன?


நிகழ் கால நிகழ்வுகளை வார்த்தைகளாக்கி வைத்து கடந்தகாலப் பதிவுகள் என்ற பெயரில் எதிர்காலத்திற்குக் கடத்தும் வேலையைத் தானா இந்த இலக்கியங்கள் செய்தன, செய்துக்கொண்டிருக்கின்றன, அல்லது செய்யப்போகின்றன.

இலக்கியங்கள் என்பவை ஒட்டு மொத்த சமூகத்திற்குமாக எழுத்தாளனால் எழுதி வைக்கப்படும் டைரிக்குறிப்புகளா...
பதிவு செய்வதும் , டைரி எழுதுவதும் சாதாரண வார்த்தைகளாலேயே சாத்தியம் தானே !! பின்பு ஏன் புதிர்த்தனமான ,புரியாத மாதிரியான எழுத்துநடை.

வார்த்தைகள் என்பவை வெறும் வார்த்தைகள் மட்டுமே அல்ல ,ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கோப்பை மாதிரி ;வார்த்தைகள்- எண்ணங்களை சுமந்து செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோப்பைகள்.அவைகளுக்குள் எல்லோராலும் தங்கள் எண்ணங்களை முழுமையாக நிறைத்து விட முடிவதில்லை , அதேமாதிரி சில உணர்வுகளை ஏற்கனவே அமைத்து வைத்திருக்கும் ரெடிமேட் கோப்பைகளுக்குள் நிறைக்க முடிவதும் சாத்தியமானதாக இல்லை,

 சதுர,செவ்வக என ரெடிமேட் வடிவ கற்கள் கொண்டு வித வித கட்டிடங்கள்,மாளிகைகள் என கட்டுவது மாதிரி ரெடிமேட் கோப்பைகளை உடைத்து, செதுக்கி, குறுக்கி என எதையாவது செய்து ரெடிமேட் வார்த்தைகளால் சுமக்கவே முடியாத எண்ணங்களை சுமக்கும் கொள்கலன்களை உருவாக்குவதன் முயற்சி தான் புதிர்த்தனமான இலக்கிய  நடைக்கான காரணம்.

இலக்கியம் என்பதன் நிகர பலன் எண்ணப் பதிவு என்பது தான் , இன்னொரு விசயத்தையும் சொல்ல வேண்டி இருக்கிறது, சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடியாத மாதிரி வார்த்தையமைப்புகளால் எழுதப்படுகிற எல்லாமும் இலக்கியம் ஆகி விட முடியாது.,

அது சரி ..! எழுதப்பட்டிருக்கும் ஒரு விசயம் இலக்கியம் தான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? இலக்கியம் என்பது இதுதான் என வரையறைகள் ஏதேனும் உள்ளனவா ?

ஈரடி இருநூறு என்கிற நூல் 
“இலக்கியம் என்ப இயழலகு நீதி இலக்காக இன்பந் தரின்” 
-என இலக்கியத்திற்கு இலக்கணம் சொல்கிறது.

பள்ளிக்காலங்களில் தமிழ் பாடத்தில் பிரித்தெழுதுக என்கிற பிரிவொன்றை நீங்கள் நிச்சயம் சந்தித்திருப்பீர்கள் என நம்புகிறேன்
அம்முறையின் அடிப்படையில் , இலக்கியம் என்பதை இலக்கு + இயம் எனப் பிரிக்கிறார்கள் இலக்கை இயம்புதல்,  அதாவது சொல்லுகிற விசயத்தின் நோக்கம் துல்லியமாக கேட்பவரை அல்லது வாசிப்பவரை சென்றடையுமாறு சுவைபட சொல்லுதல்.

இலக்கியங்கள் என்பவை கவிதை,கட்டுரை,கதை,நாடகம் என எந்த அவதாரத்தில் வேண்டுமானாலும் இருக்க முடியும் புனைவு,இருத்தலியல்,நாட்டாரியல், ஹைக்கூ,லெமரிக்,வெண்பா என எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்க முடியும்.

இலக்கியங்களின் வகைகள் இவ்வளவுதான் என எண்ணிச் சொல்லிவிட முடிவதில்லை, இலக்கியங்கள் எண்ணிக்கைகளுக்குள் அடைபடுவதென்பதும் சாத்தியமில்லை,அவை காலப்போக்கில் எல்லை மீறி வளரக்கூடியவை,அல்லது குறையக்கூடியவை இப்போதைய காலகட்டத்தில் இலக்கிய வகைகள் அதிகமாகி இருக்கின்றன, சிறுவர்களுக்கும் புரிகிற மாதிரி எழுதுவது சிறுவர் இலக்கியம், விஞ்ஞான விசயங்களை விளங்கிக் கொள்ளும் வகையில் எழுதுவது விஞ்ஞான இலக்கியம் ,திரைப்படமாக எடுப்பது திரைப்பட இலக்கியம், தலித்தியப் பதிவுகள் தலித்திய இலக்கியம், இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே போக முடியும்.

இலக்கியங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் அவைகளால் என்ன பயன் ?
  • ஒட்டு மொத்த சமூகத்தின் குரலாக, சமூகத்திற்கான குரலாக ஒலிப்பது.
  • நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம்,வாழ்க்கை என நடப்புக்காலத்தை பதிவு செய்வது.
  • பதிவு செய்த உணர்வை அச்சுப் பிசகாமல் படிப்பவருக்குக் கடத்துவது.

இதனால் என்ன பயன் என்கிறீர்களா !!

இலக்கியங்கள் என்பவை காலத்தின் பதிவுகளை கால வெளியில் சுமந்து செல்லும் வாகனங்கள் எனலாம்.
அந்தக் காலத் தமிழ் 

உதாரணத்திற்கு , இந்த கட்டுரைக்கு ஆயுள் கெட்டி என வைத்துக்கொள்ளுங்களேன் (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்...)
 “இலக்கியத்தின் பயன் என்ன?” என்று கேட்டுக் கொண்டு ஒரு சமூகம் வாழ்ந்தது என பின்னால் வரப்போகிற சமூகத்திற்கு டிஜிட்டல் அகழ்வாராய்ச்சி செய்து யாராவது எதிர்காலத்திய தமிழில் மொழி பெயர்த்து வாசித்துக்காட்ட முடியும் அல்லவா ! அப்போதும் அங்கே ஒரு கூட்டம் இலக்கியத்தால் என்ன பயன் என்று கேட்டுக்கொண்டிருக்கலாம் .எல்லாக் காலங்களிலும் எல்லோருமே இருக்கத்தானே செய்கிறோம்.


 

Post Comment