Sunday, December 24, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 4


அத்தியாயம் 0 

எலக்ட்ரானைத் தேடி ...

1600-ல் பியர்ரி கஸாண்டி (Pierre Gassendi) என்ற பிரெஞ்சு அறிஞர் லுக்ரடியஸின் “பொருட்களின் இயல்நிலை பற்றி” என்கிற கவிதைத்தொகுப்பை வாசித்துவிட்டு  அணு பற்றிய கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்படுகிறார்., அதுபற்றி அதிதீவிரமாக யோசிக்கிறார்.,





  • அணுக்களே, நம் அகிலத்தின் விதைகள்.
  • பொருட்களின் உருவாக்கம் , சிதைவு, உருமாற்றம் மற்றும் அதன் அழிவு என்பதெல்லாம் அணுக்களின் இணைவு மற்றும் தளர்வின் காரணமாகவே ஏற்படுகிறது, 
  • அணுக்கள் நகரும், சத்தம் என்பது அணுக்களின் நகர்வினாலேயே ஏற்படுகிறது.
  •  காற்று அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் காற்று அணுக்கள் நெருக்கம் அடைவது தான் .. 
என்றெல்லாம் இவர் அணு பற்றி மேலும் சில புதிய சிந்தனைகளை சொல்லி வைக்கிறார்,

அணுவைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதை ஆராய்ச்சி செய்து மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும் என இவர் கூறிய கருத்து அணு என்கிற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?, அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அவர் காலத்திய அறிவு ஜீவிகள் பலரை யோசிக்க வைத்தது.

 அணு பற்றிய ஆராய்ச்சி என்கிற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாலோ என்னவோ! இவரை நவீன அணுவியல் கொள்கையின் தந்தை என அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.


 இந்திய அணுக்கொள்கை : கி.மு 600 களில் இந்தியாவில் ஆச்சார்யர் கனத் என்றழைக்கப்பட்ட கஷ்யப முனிவர் தனது வைஷேசிக சூத்திரம் என்கிற புத்தகத்தில் “ உலகில் உள்ள அனைத்தும் அணு என்கிற கண்ணுக்கேத் தெரியாத துகளால் உருவானவை, அவை ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகிறது”, என்று கிரேக்க அறிஞர்கள் அணு பற்றி யோசிப்பதற்கு முன்னரே குறிப்பிட்டு இருக்கிறார். (இந்த நூல் கி.மு.648-ல் யுவான்சுவாங்க்- ஆல் சீன மொழியில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டிருக்கிறது,) ஆனால் அணு பற்றிய இந்திய`க் கருத்துக்கள் உலகம் முழுக்க பரவிட வில்லை, அதேசமயம் நம் பழங்கால இந்திய அறிவு புற உலகம் சார்ந்து விஞ்ஞானமாக விரியாமல் அக உலகம் சார்ந்து யோகம்,தியானம் என்று மெய்ஞானமாக மலர்ந்திருக்கிறது..
                           
                             ***************************
           
அணு பற்றிய ஆராய்ச்சிகள்:


பியர்ரி கஸாண்டியின் கருத்துக்களை  அடிப்படையாகக் கொண்டு அணு என்னும் வஸ்து இருக்கிறதா என்று 1662-ல் ராபர்ட் பாய்ல் எனும் வேதியியல் விஞ்ஞானி  ஆராய்ச்சி செய்கிறார். முதன் முதலில் அணுவின் இருப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் இவரே ! 

அவர் எப்படி , எதை வைத்து , என்ன ஆராய்ச்சி செய்தார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னர்,  ஆராய்ச்சி செய்வது என்பதைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளலாம், 

ஆராய்ச்சி செய்வது எப்படி?

அறிவியல் உலகம் ஆராய்ச்சி செய்து முடிவுகளை கண்டறிய நான்கு படிநிலைகளைக் கொண்ட ஒரு வழிமுறையை வகுத்துள்ளது.,


  1. கவனித்தல் & தகவல் சேகரிப்பு : நிகழும் ஒரு விஷயத்தை உற்று நோக்கி , அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும், பின் அதுசார்ந்த தகவல்களை புத்தகங்கள், அதைப் பற்றிய முந்தைய ஆராய்ச்சிக் குறிப்புகள், வல்லுநர்களின் பதில்கள் , என எப்படியெல்லாம் சேகரிக்க முடியுமோ அப்படியெல்லாம் முயன்று போதுமான வகையில்   சேகரித்துக்கொள்ள வேண்டும் . ராபர்ட் பாய்ல் அவருக்கு முந்தைய அறிவியலாளர்கள் அணு பற்றி கூறின அத்தனை தகவல்களையும் திரட்டிக்கொண்டார்.
  2. கருத்துரு உருவாக்குதல்: அதன்பின் நமது ஆராய்ச்சியின் பலனாக என்னக் கிடைக்கப்போகிறது என்பதை ஒரு கருத்துருவாக உருவாக்க வேண்டும், ஆங்கிலத்தில் இதை Hypothesis என்கிறார்கள் .  இந்த கருத்துருக்கள் உண்மையா? அல்லது பொய்யா ?என்பதை கண்டறிவதே ஆராய்ச்சியின் நோக்கம்.
  3. சோதனை: இது தான் முக்கியமான படிநிலை,  அதாவது நாம் உருவாக்கி வைத்திருக்கும் Hypothesis  உண்மையா , பொய்யா என கண்டறியும் வழிமுறை. என்ன செய்ய வேண்டும் ,எப்படி செய்ய வேண்டும் எத்தனை முறை சோதனை செய்ய வேண்டும், என்பவைகளையெல்லாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். , சோதனைகள் செய்தல், சோதனை முடிவுகளை பட்டியலிடுதல் பொன்ற செயல்பாடுகள்  இந்த நிலையின் கீழ் வருகின்றன.
  4.   சோதனை முடிவு: ஆராய்ச்சி ,நமக்குதோன்றின கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறதா, நாம் கற்பிதம் செய்து கொண்ட Hypothesis சரியா ? , ஆராய்ச்சியின் பலனாக வேறு ஏதாவது புதிய விஷயங்கள் கிடைத்துள்ளனவா என்று ஒரு முடிவுக்கு வருதல்.
ராபர்ட் பாய்லின் ஆராய்ச்சி: 
ராபர்ட் பாய்ல்
ராபர்ட் பாயில்  தனது ஆரய்ச்சிக்கு  எடுத்துக்கொண்ட  Hypothesis கள் : 

1)காற்று என்பது அணுக்களால் ஆனது
2)காற்று அணுக்களால் ஆனது என்று நிரூபணம் செய்தால் அணுவின் இருப்பு உண்மை .

இந்த ஆராய்ச்சிக்கு ராபர்ட் பாய்ல்  எடுத்துக்கொண்டது  5மீட்டர் நீளமுள்ள  ஒரு  J வடிவ குழாய் அதன், மேல்முனை திறந்த நிலையிலும், கீழ்முனை அடைக்கப்பட்டும்  இருந்தது. மேல்முனை வழியே  திரவ நிலை உலோகமான பாதரசத்தை ஊற்றினார்.

ஊற்றப்பட்ட பாதரசம் படத்தில் காட்டப்பட்டிருப்பது மாதிரி , J  வடிவ  குழலினுள் சிறிது காற்று வெளியை விட்டுவிட்டு நிரம்பிக் கொண்டது,  பிறகு அவர்  இன்னும் கொஞ்சம் பாதரசத்தை ஊற்றினார் , இப்போது காற்று மேலும் அழுத்தப்பட்டது, பாதரசத்தை ஊற்ற ஊற்ற காற்று இன்னும் இன்னும் அழுத்தப்படுவதை பாய்ல் கவனிக்கிறார்.

பாயிலின் பரிசோதனை

எந்த விகிதத்தில் அதாவது இத்தனை எடை பாதரசம் ஊற்றும் போது, இத்தனை இன்ச் அளவு காற்று அழுத்தப்படுகிறது என்பதை  ஒவ்வொரு முறையும்  குறிப்பெடுத்துக்கொள்கிறார்,  (அழுத்தமும், அளவும் நேர்விகிதத்தில் இருக்கிறது, இவ்விரணடின் பெருக்கற்பலன் மாறிலி என பாய்ல் சொன்ன, இந்த விதி  பாய்லின் விதி என்று அழைக்கப்படுகிறது.)

எப்படி காற்று அழுத்தப்பட்டது ? , சிறிய வெளிக்குள் அது எப்படி பொருந்திக்கொண்டது ? என்றெல்லாம் பாய்ல் யோசித்து ஒரு லாஜிக்கல் முடிவுக்கு வருகிறார். ஒரு பஞ்சை அழுத்தும் போது அது சிறியதாக சுருங்குகிறது,அதேமாதிரி  ஒரு பிரெட்டை அழுத்தும்போது அது சிறியதாக சுருங்குகிறது., ஏனென்றால் அவற்றில் சிறு சிறு துளைகள் கொண்ட இடைவெளிகளுடன் கூடிய அமைப்பு  இருக்கிறது. அழுத்தும்போது அவைகளின் சிறுசிறு துளை இடைவெளிகளில் இருக்கும் காற்று வெளியேறி பஞ்சின் பகுதிகள் அல்லது பிரெட்டின் பகுதிகள் நெருங்கி வருகின்றன.

 காற்றை அழுத்தும் போதும் இதே மாதிரியான ஒரு விஷயம் தான் நிகழ்ந்திருக்க முடியும் , அதாவது காற்றில் உள்ள அணுக்கள் அதிக இடைவெளிகள் கொண்டவை, அவற்றை அழுத்தும் போது, நெருக்கும்போது  அவை அந்த இடைவெளிகளை மீறி நெருங்கி வருகின்றன. ஆக காற்றும் சிறு சிறு அணுக்களால் ஆனவை தான் , ஆக அணு என்கிற ஒன்று நிச்சயம் கற்பனை வாதம் கிடையாது, அப்படி ஒன்று சர்வ நிச்சயமாக இருக்கிறது என  தன் ஆய்வு  முடிவை  உலகுக்கு உரைக்கிறார்.

இடைவெளிகளுடன் காற்றணுக்கள்: அழுத்தம்=நெருக்கம்


அணு பற்றிய  இன்னபிற முக்கியமான ஆராய்ச்சிகளையும் , எலக்ட்ரான் எப்படி கண்டறியப்பட்டது என்பது பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...


                                                                                                                            -----அறிவோம்...

 

Post Comment

Monday, December 11, 2017

பாரதி தின பிரார்த்தனைகள் !

பிரார்த்தனைகள்:

கடவுளுக்கு சக்தி இருக்கிறதோ !இல்லையோ!, கடவுளைவிட , நாம் வேண்டும் பிரார்த்தனைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு  ! இங்கு, இப்போது, இந்நிலையில், எனக்கே எனக்காக பாடி வைத்தது போலிருக்கும் பாரதியின்  ரெடிமேட் வரிகளை  மனதாற மறுபடியும் வாசித்துக் கொள்கிறேன்... . 


எல்லாம் வல்ல அந்த மகாசக்தி எல்லோரையும் காத்து அருள் செய்யட்டும் !


கீழ்களின் அவமதிப்பும்-தொழில்
கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல்-செய்யும்
முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர்-பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்,
வீழ்கஇக்கொடு நோய்தான் !

                                                 -பாரதி  (தெய்வப் பாடல்கள் )


"ஆங்கொரு கல்லை வாயிலில் படியென்
றமைத்தனன் சிற்பிமற் றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான்; உலகினோர் தாய்நீ;
யாங்கணே எவரை எவ்விதம் சமைத்தற்
கெண்ணமோ அவ்விதம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன் என்னை
இருங்கலைப் புலவனாக்குதியே."

                                       -பாரதி (பராசக்தி வணக்கம்- பாஞ்சாலி சபதம்) 


கீழோர்களின் அவமதிப்பும் , தனக்கான தொழிலைச் செய்யாது கெட்டவர்களின் இணக்கமும், கிணற்றிற்குள் மூழ்கிய ஒளி விளக்கினைப்போல், எடுத்த முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும், இயன்றவரை  ஓடியும் பயனெய்திட வழியின்றி இருப்பதும்,...  இந்த கொடிய நோய் வீழட்டும், அழியட்டும்.

"சிற்பி , ஒரு  கல்லை வாசற்படியாய் அமைத்தான்  , மற்றொன்றை கடவுளின் வடிவத்தில் அமைத்தான், உலகினோர் யாவருக்கும் தாய்  நீ ! அந்த சிற்பியைப்போல , எந்தக்கல்லை எப்படி செய்ய எண்ணமோ, (யாரை எந்தவிடத்து வைக்க வேண்டுமோ!) அந்தக்கல்லை அவ்விதம் செய்திடுவாய், இங்குனை சரண் புகுந்தேன், என்னை பரந்துபட்ட கலைகளில் வல்லோனாய்  , புலவனாய் ஆக்கிடு"

என்னுள் இருக்கும் மிடிமையையும் (சோம்பல்) அச்சத்தையும் கொன்றழித்து என்னை இவ்வையம் பயனுற வாழ அருள் புரிவாய் ! எடுத்தக் காரியும் யாவும்  வெற்றியடைய அருள் புரிவாய்.




மகாகவியே உம் பாதம் பணிகிறேன் !!


பாரதி பற்றிய பிற பதிவுகள் :


 

Post Comment

Sunday, December 03, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 3

அத்தியாயம் – 0

எலக்ட்ரானைத் தேடி ...

கிமு 450 ,

கிரேக்க அறிஞர் லியூசிப்பஸ் (Leucippus )  ஒரு கல்லை எடுத்து கையில் வைத்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தார். “இந்தக் கல்லை உடைத்தால் சிறுசிறு கற்கள் கிடைக்கும், அதையும் உடைத்தால் மணல் போன்ற துகள்கள் கிடைக்கும், அந்த துகள்களையும் மேலும் மேலும் உடைத்துக்கொண்டே போனால்... முடிவில், என்னக் கிடைக்கும் ? ”.
அந்தக் கல்லை அடித்து நொறுக்க ஆரம்பித்தார், அந்த மணல் போன்ற மிகமிகச்சிறிய துகளைப் பார்த்தபடி ஒரு முடிவுக்கு வந்தார்.
ல்யூசிப்பஸ் (leucippus ,கிமு 450)

 “எந்தவொரு பொருளையும் உடைத்துக்கொண்டே போனால் முடிவில் உடைக்கவே முடியாத ஒரு பொருள் கிடைக்கும், அதாவது உலகில் உள்ள எல்லாப்பொருட்களும் உடைக்க முடியாத இப்படியான இந்த சிறுசிறு துகள்களின் இணைவில் உருவானவை தான்” என.
தான் யோசித்துக் கண்டறிந்த இந்த உண்மையை லியூசிபஸ் தனது சீடர்களுடன் அமர்ந்து விவாதிக்கலானார்.
டெமாக்ரிடஸ் (கி.மு 460 – கி.மு. 370) 
அவரது சீடர்களுள் ஒருவரான டெமாக்ரிடஸ் (Democritus, கி.மு 460 – கி.மு. 370) என்பவரை இந்த சிந்தனை அதிகம் பாதிக்கிறது, பிரிக்க முடியாத அந்த இறுதித் துகளை டெமாக்ரிடஸ் உடைக்க முடியாத பொருள் என்று கிரேக்க மொழியில் அர்த்தம் வரும் வகையில் A-TOM-OS என்று பெயரிடுகிறார்.

குருவை மிஞ்சும் சிஷ்யனாக அவர் இந்த கருத்தை மேலும் யோசித்து அவரது சிந்தனை முடிவுகளை புத்தகமாக வெளியிடுகிறார்.

1.   உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே வெவ்வேறு வடிவிலான, வெவ்வேறு எடையிலான வெவ்வேறு குணங்களை உடைய கண்ணுக்குத்தெரியாத மிகமிகச்சிறிய ரகரகமான ஆட்டமஸ்களால் Atomos ஆனவை.
2.   ஆட்டமஸ்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
3.   ஆட்டமஸ்கள் இணையும் போது ஏற்படும் இடைப்பட்ட இடைவெளியில் எதுவும் இல்லை ,அது வெற்றிடம்.
4.   கனமான பொருட்களில் ஆட்டமஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
5.   ஆட்டமஸ்களை அவற்றின் இடவமைவுகளை மாற்றி அமைத்தால் ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றவியலும்.

எந்தவொரு பொருளையும் முடிவின்றி பிரித்துக்கொண்டே போக முடியாது, எல்லாப் பொருட்களும் பிரிக்க முடியாத மிகமிகச் சிறிய துகள்களால் ஆனவை என்று டெமாக்கிரிடஸ் சொன்ன இந்த கொள்கை  Atomism எனப்படுகிறது.

அணு பற்றி அண்டம் பற்றி ஆராய்ச்சி செய்து டெமாகிரிடஸ் 72 புத்தகங்கள் வெளியிடுகிறார். டெமக்கிரிடஸின் ஆட்டமிஸக் கருத்துக்கள் அரிஸ்டாட்டில் போன்ற அவர் காலத்திய பிரபல அறிஞர் பெருமக்கள் பலரால் ஆதரிக்கப் படவில்லை 

அந்தக் காலத்தில் புத்தகங்களை அச்சடிக்க அச்சு எந்திரங்கள் எல்லாம் கிடையாது, ஒவ்வொரு பிரதியையும் பாபிரஸ் இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதங்களில் கைப்பட எழுதி பிரதி செய்து தான் வெளியிட வேண்டும். டெமக்கிரிடஸின் கருத்துகள் பிரபலமடையவில்லை , ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் அவரது புத்தகங்கள் அதிகம் பிரதியெடுக்கப்படவில்லை. டெமாக்ரிடஸின் 72 புத்தகங்களில் ஒன்றுகூட தற்போது இல்லை.
பாப்பிரஸ் புத்தகம்

ஆனால் அவர்கூறிய அணு பற்றிய கொள்கைகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட பிற நூல்கள் மூலம் டெமக்கிரிட்டஸின் கருத்துக்கள் தற்காலம் வரைக்கும் தப்பிப் பிழைத்திருக்கின்றன.

டெமாகிரிடிஸின் கருத்துக்களை ஆதரித்தவர்களுள் மிக முக்கியமானவர் கிரேக்க அறிஞர் எபிக்யூரஸ் (Epicurus ,கி.மு 341 – கி.மு. 270.)  எபிக்யூரஸ் தனது புத்தகங்களில் டெமாகிரிடிஸின் ஆட்டமிஸ கருத்துக்களை ஆதரித்து எழுதுகிறார், 
எப்பிகியூரஸ்

எபிக்யூரஸ் கூறிய கருத்துக்களை விளக்கும் வகையில் அவரது சீடர்களில் ஒருவரான  டைட்டஸ் லுக்ரடியஸ் (Titus Lucretius, கி.மு 99- கி.மு 55 ) என்ற ரோமானிய கவிஞர்  ஆறு சிறு புத்தகங்களாக (புத்தகங்கள் = அத்தியாயங்கள்) பிரித்து,  7400 அடிகளில்  “பொருட்களின் இயல்நிலை பற்றி” (“De Rerum Natura” ) என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிடுகிறார்.
Lucretius (கி.மு 99- கி.மு 55 )

அதில் முதல் இரு புத்தகங்கள் ஆட்டமிஸம் பற்றியவை.
எபிக்யூரஸ், எழுதிய புத்தகங்களின் பிரதிகளில் சிதிலிமடைந்து சிதைந்து போன நிலையில் சிக்கிய சில பக்கங்களும் , புராதன கிரேக்க நூலகம் ஒன்றில் கிடைத்த  லியூக்ரடியஸின் முழுக்கவிதைத்தொகுப்பும்  டெமாக்கிரிடஸின் ஆட்டமிஸக்கருத்துக்களை அழியாமல் காத்தவைகளுள் முக்கியமானவைகள்.

இந்த கவிதைத் தொகுப்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு புராதான புத்தகங்களை பராமரிக்கும் நூலகங்களால் பிரதியெடுத்து பராமரிக்கப்படுகின்றன.

கி.பி.1417 –ல் டைட்டஸ் லியூக்ரடியஸின் கவிதையை Poggio Bracciolini  என்ற பழங்கால எழுத்துக்களை பராமரிக்கும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்  பிரதியெடுத்து வைக்கிறார். 

Poggio Bracciolini 


1454-ல் கட்டன்பெர்க் Guttenberg என்ற ஜெர்மானியரால் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் சிதிலமடைந்த புராதான நூல்கள் பல மறு உயிர் பெற்றன எனலாம், அவ்வகையில் டெமக்கிரடஸின் ஆட்டமிஸ கருத்துக்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட லுக்ரடியஸின் “பொருட்களின் இயல்நிலை பற்றி” என்கிற கவிதைத்தொகுப்பு 1473 ல் அச்சிலேறுகிறது.

"பொருட்களின் இயல்நிலைப் பற்றி"  அச்சடிக்கப்பட்ட பிரதி 

அச்சிலேறிய பிறகு கிரேக்க அறிஞர்கள் சிந்தனையில் மட்டும் ஆட்டம்போட்ட ஆட்டமிஸம் என்கிற அணு பற்றிய சித்தாந்தம் உலகின் பிற தேசத்தினராலும் படிக்கப்படுகிறது.

                                                              கற்போம்



 

Post Comment

Saturday, December 02, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 2

அத்தியாயம் - 0


எலக்ட்ரானிக்ஸ் என்றால் என்ன ?

Electronics: 

எலக்ட்ரான் மெக்கானிக்ஸ்( Electron - Mechanics) என்கிற வார்த்தையின் இருபெயரொட்டு தான் எலக்ட்ரானிக்ஸ். எல்க்ட்ரான்களை இயங்க வைத்துச் செய்யும் மெக்கானிக்ஸ்.

இங்கே போ !, இங்கே போகாதே ! நின்று போ! ஓடு! நின்று பிறகு ஓடு ! என எலக்ட்ரான் களை இயங்க வைத்துச் செய்யும் மெக்கானிக்ஸ் தான் எலக்ட்ரானிக்ஸ்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எலக்ட்ரான்கள் என்னவெல்லாம் செய்யும் என்பதை தெரிந்துகொண்டு , நம்மிடம் இருக்கும் ரெசிஸ்டர்,கெபாசிட்டர்,இண்டக்டர்,டயோட், டிரன்சிஸ்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பயன்படுத்தி அவற்றை  என்னவெல்லாம் செய்யவைக்கலாம் என்ற வித்தையே எலக்ட்ரானிக்ஸ்.

எலக்ட்ரான் இயக்கவியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் சாதனங்கள்/ கருவிகள்/பொருட்கள் போன்றவையும் செல்லமாக எலக்ட்ரானிக்ஸ் என்றே அழைக்கப்படுகின்றன.

எலக்ட்ரான் கள் என்பவை அணுவிற்குள் இருக்கும் மிகமிகச் சிறிய இம்மியளவு துகள், இந்த இம்மியளவு துகள் தான் நாம் இன்று வியந்து நோக்கும் டிஜிட்டல் மயமான இந்த விஞ்ஞான உலகத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
                                                                                                                             -கற்போம்


 

Post Comment

மின்னணுவியல் நுட்பங்கள் - 1


முன்னுரை:

“If there’s a book that you want to read, but it hasn’t been written yet, then you must write it.” 
                                                                                                                                        ― Toni Morrison

எலக்ட்ரானிக்ஸ் பற்றி ஒரு விரிவான தமிழ் புத்தகம் இல்லையே , என்கிற பெரும் ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. தீர்ந்தபாடில்லை இன்னும் :)
எலக்ட்ரானிக்ஸ்  உலகம் மிக மிக வசீகரமானது!, ஆச்சரியமானது.

விரல் நகம் அளவு மட்டுமே உள்ள ஒரு எலக்ட்ரானிக் சிப் எத்தனை மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய் என்று சர்வம் எலக்ட்ரானிக்ஸ் மயம் ஆகிக்கொண்டிருக்கிறது.



செல்பேசி, கணிப்பொறி, தொலைக்காட்சி, கேமரா, செயற்கைக் கோள்....

சமீபத்தில்  ஒரு ஹியுமனாய்ட் ரோபட்டிற்கு குடியுரிமை (Citizenship) வழங்கி இருக்கிறது ஒரு நாடு.... !

 தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் சீறிப் பாய்ந்துக் கொண்டிருக்கிறது, ஆமை வேகத்தில் அதை அணுகிக்கொண்டிருக்கிறோம்  நாம்.  நமது தொழில்நுட்ப பாட சிலபஸ்களோ அரதப்பழசாக அப்படியே இருக்கிறது இன்னும் மாறாமல்.  `சுவாரஸ்யமான ஒரு  விசயத்தை  Zombie த்தனமாக சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் என்பது ஒரு பாடமல்ல. அது ஒரு கலை , அது ஒரு வித்தை .

ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 186,282  மைல்கள் என்று பாடம் சொன்னால், இத்தனை அதிவேகத்தை எப்படி கணித்தார்கள் என யோசிப்பேன், எலக்ட்ரானின் எடை 9.109×1031 கிலோ என்றால் எப்படி இதை எடை போட்டார்கள் என்று யோசிப்பேன். பாடபுத்தகங்க்கள் எனக்கு ஒரு போதும் திருப்தி அளித்ததில்லை,  ஏன் இந்த புரியாத கணக்குகள்,சமன்பாடுகள் ., இதையெல்லாம் படித்தால் நம்மால் எலக்ட்ரானிக் சாதனங்களை அவை இயங்கும் முறைகளை , புரிந்து கொள்ள முடியுமா?, இவற்றைப் படித்துத் தேறுவதால் எலக்ட்ரானிக் கருவிகளை நம் தேவைக்கேற்ப வடிவமைத்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திவிட முடியுமா? சர்வநிச்சயமாக நம் பாடத்திட்டம் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை. நாமாகத் தான் தேடி ப் படிக்க வேண்டும். நான் தேடி அடையாளம் கண்டுகொண்ட விதத்தில் எலக்ட்ரானிக்ஸை கொஞ்சம் விரிவாக, புரியும் வகையில் கதைபோல எழுதிச் சொல்லலாம் என இருக்கிறேன்.

யாருக்கானதில்லை,  இத் தொடர் :

விசயங்களை மேலோட்டமாக வெறும் வரையறைகளாக, வார்த்தைகளாக மனப்பாடம் செய்து புரிந்து கொள்வதால் அதை தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறவர்கள். விரிவாக தெரிந்து கொள்வது பயனற்றது, இது தான் இது என்று எதையாவது சொல்லி வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஆரம்பநிலையிலிருந்து கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள் தயவுகூர்ந்து இத்தொடரை வாசிக்க வேண்டாம்.

எதைப்பற்றிய, யாருக்கான, எப்படிப்பட்ட தொடர் இது ?

 எலக்ட்ரானிக்ஸ் பற்றி  விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும் என வேட்கை உள்ள யாவருக்குமான , மிகத்தெளிவான, அதேநேரம் கதை போன்ற நடையில் எலக்ட்ரானிக்ஸை கற்றுக்கொள்ள நினைக்கும் யாவருக்குமான தொடர் இது.

இந்த பெறும் முயற்சியை வெற்றிகரமாக்க வேண்டும் என எனக்குத்துணையாய் நின்று என்னை எழுதப் பணிக்கும் இறை சக்தியைப் போற்றி   எழுதத்துவங்குகிறேன். எப்படியேனும் இதை வெற்றிகரமாக தொடர்ந்து எழுத வேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஒரு பதிவேனும் எழுத வேண்டும் என எனக்கு நானே கட்டளையிட்டுக்கொள்கிறேன்.

                                                                                                                             -கற்போம் 

 

Post Comment

Wednesday, March 29, 2017

பாரதிச்சூடி -4

 ஈகை திறன்

                                             

ஈகை திறன் என்பதை பெரும்பாலான தமிழ் வல்லுனர்கள் கொடுக்கும் திறன் என்று அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள்.

ஈகை என்பது "தன்னிடம் உள்ளதை தானமாக கொடுப்பது" திறன் என்றால் சக்தி அல்லது ஆற்றல் .

அப்படியே அர்த்தம் பண்ணினால் அப்படித்தான் !! யோசிக்க முடியும்.

இந்த செய்யுளை கொடுக்கும் சக்தி என பொருள் கொள்தல் தவறு, பாரதி தன் புதிய ஆத்திச்சூடியை கட்டளை தோரணையில் சொல்கிறான் , "ஈகை திறன் '' என்பதும் கட்டளை வாக்கியமே , அந்த முறையில் இதை அர்த்தப்படுத்தினால் " கொடுப்பது திறன் என்றொரு அர்த்த தொனியில் "ஈகை திறன்" ஒலிக்கிறது. பாரதி அப்படித்தான் சொல்லியிருப்பான்.

பாரதியின் வார்த்தைகளுக்கு விளக்கம் தேட அகராதிகளை புரட்டினால் அவன் பிடிகொடுக்க மாட்டான், அவன் வாழ்க்கையினின்று நாம் அவன் பாடல்களை பொருள் கொள்ள வேண்டும்.

தனக்கே சோறில்லாத பொழுதில் குருவிகளுக்கு அரிசி தூவிக்கொண்டிருக்கும் பாரதி நிச்சயம் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து பின் கொடு என்கிற பொருளில் இந்த வரிகளை உச்சரித்திருக்க வாய்ப்பில்லை.

 கொடுப்பதில் ஒரு kick இருக்கிறது என்பதை கொடுப்பதன் திறனை உணர்ந்த நபர்களால் தான் இயலும்., பாரதி அந்த Kick ஐத்தான் சொல்கிறான்.

எதைக்கொடுக்கிறாயோ அதையே பெறுவோம் என்கிறது ஒரு தத்துவம்,  அந்த தத்துவத்தோடும் பாரதி சொல்லும் ஈகை திறனை ஒப்பிட்டு நோக்க முடிகிறது.
கொடுங்கள் அப்பொழுதுதான் பெறுவதற்கான தகுதி உமக்குண்டு என்று சொல்லாமல் சொல்கிறான் பாரதி !

பாரதியின்பொருளாதார நிலை உலகறிந்ததே ! இன்னிலையில் ஒருநாள் பாரதிக்குஅவர் பணிபுரியும் பத்திரிக்கையின் ஆசிரியர் பணம் கொடுக்கிறார், பணத்தோடு தன் நண்பர்களோடு வெளியே வரும் பாரதி பழக்கூடையோடு வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தியை காண்கிறான்.என்னம்மா உன் கவலை என்கிறான் "பழமெல்லாம் விக்கல சாமி" என்கிறாள், வைத்திருந்த மொத்த காசையும் கொடுத்து கூடை பழத்தையும் தானே வாங்கிக் கொள்கிறான். பாரதி சொல்லும் ஈகை திறன் என்பது கொடுப்பதற்கேற்ப இருப்பேற்படுத்திக்கொண்டு கொடுக்கும் திறன் அல்ல The power of giving :) , கொடுப்பதால் ஏற்படும் மனநிறைவு காரணமாக உள்ளத்து ஊற்றெடுக்கும் ஆற்றலைப் பற்றியது.

அவன்சொல்வது ஈகைத்திறனை அல்ல ஈகையின் திறனை,ஈகை தரும் திறனை.

கொடுங்கள் நிச்சயம் அதைவிட அதிகமாக பெறுவீர்கள் .

 

Post Comment

Monday, March 27, 2017

பாரதிச்சூடி-3

இளைத்தல் இகழ்ச்சி:

 பாரதி குறிப்பிடும் இளைத்தல் என்பதை உடல் இளைத்தல் என்பதாக மட்டுமல்லாது  பின்னடைதல், சோர்வடைதல் என்கிற  அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும்,  பின்னடைதல் ,சோர்ந்து ஓய்தல்  இகழ்ச்சி.

அறிவு,ஆற்றல், மனஉறுதி, செயல்பாடு,சிந்தனை ஆகிய வாழ்வின் எல்லா படிகளுக்கும் இந்த இளைத்தல் இகழ்ச்சி பொறுந்தும்.

இருக்கும் நிலையினின்று முன்னேற வேண்டும், அதுவிடுத்து இருப்பினும் தாழ்தல் இகழ்ச்சி என்கிறான் பாரதி.

அவ்வை ஏற்பது இகழ்ச்சி அதாவது  இரந்து(பிச்சையெடுத்து) வாழ்தலை இகழ்ச்சி என்கிறாள், பாரதி வாழ்நிலை யில் தாழ்ந்து இறங்கி வாழ்தலை (இளைத்தலை) இகழ்ச்சி என்கிறான்.

ஆண்மை தவறாதிருக்க அச்சம் தவிர்க்க வேண்டும், ஆண்மை தவறினால் இளைத்தல் ஏற்படும் , இளைத்தல் இகழ்ச்சி. ஆண்மை தவறேலை emphasize செய்கிறது.

தேங்கும் நதி சாக்கடையாகும், ஓடும் நதியே கடலைச்சேரும்.இகழ்ச்சி என்பது அவமானம் ,மானக்கேடு, கேலி, இழிவு , அவச்சொல் போன்றவற்றினை பெறும் நிலை. இருக்கும் நிலையினின்று இறங்குதல் மாபிழை ! அது இகழ்ச்சி தரும் இழி நிலை!



 

Post Comment

Sunday, March 26, 2017

பாரதிச்சூடி-2

ஆண்மை தவறேல் !



ஆண்மை என்பது ஆண் தன்மை என்பதன் சுருக்க வடிவு , ஆண்களுக்கான குணங்கள் என்று இதனை பொருள் கொள்ளக் கட்டாயமில்லை , ஆண் குணங்கள் என எடுத்துக்கொள்ள வேண்டும்., அன்பு , பாசம், இரக்கம், கருணை, தாய்மை என்கிற குணங்கள் பெண் தன்மை கொண்ட குணங்கள் அதே மாதிரி வீரம், தைரியம், அறம், நேர்மை, அதிகாரம், மாட்சிமை , போராட்ட குணம்,அச்சம் தவிர்த்து செயல்படும் குணம், மன உறுதி போன்றவை ஆண்மையின்பாற்பட்டவை.

ஆணிடத்தில் அன்பு,இரக்கம் போன்ற பெண் குணங்களும் இருக்க முடியும் அதேபோல பெண்ணிடத்தில் வீரம், துணிவு போராட்டகுணம் போன்ற ஆண்மை குணங்களும் இருக்க முடியும்.

அச்சம்,மடம் நாணம்,பயிற்பு எனும் பெண்களின் நாற்குண பட்டியலை நாம் நன்கறிவோம் , இதேமாதிரி ஆண்களுக்கான நாற்குண பட்டியலொன்றும் உண்டு அதன்படி அறிவு(மெய்ப்பொருள் காணும் பார்வை) நிறை(காக்கவேண்டிய விசயங்களை காத்தலும், போக்கவேண்டியதை போக்கி நடத்தலுமாகிய குணம்) ஓர்ப்பு(ஆராய்ந்து உணர்தல்), கடைப்பிடி (நன்னெறி வழுவாமை) ஆகியன ஆண்மையின் குணங்கள்.

 ஆண்மை குணங்கள் பொதுவாக  .சமூகத்தை வழி நடத்த, எளியவர்களை காக்க, துன்பங்கள் போக்க, குழப்பங்கள் தீர்க்க உதவவேண்டும் அதுவே ஆண்மையின் நேரிய வடிவம். அதிகார து
ஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள், எளிய மனிதர்களை ஏமாற்றி செயல்படுதல் , வஞ்சகம் சூழ்ச்சி இவையெல்லாம் ஆண்மையின் தவறிய வடிவம்.

 பாரதியின்  வாக்கை உற்று நோக்குவோம்,  ஆண்மையை தவறாக பயன்படுத்தாதே என்கிற அர்த்தத்தில் தான் அவன் அதை சொல்லியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

 அச்சம் தவிர்த்தல் ஆண்மை குணம், அஞ்சுவதற்கஞ்சாது செயல்படுதல் ஆண்மை தவறுதல், பெண்களை காக்கும் குணம் ஆண்மை, அடிமை செய்தல் என்பது ஆண்மை தவறுதல், ஆட்சி செய்தல் என்பது ஆண்மை , அதை முறையற்று கொடுங்கோல் முறையில் செய்வது ஆண்மை தவறுதல்.

ஆண்மை தவறாக பயன்படுத்தப்படும் குடும்பங்கள் உருப்பட்டதில்லை, ஆண்மை தவறிய சமூகங்கள் ஒரு போதும் முன்னேறியதில்லை, ஆண்மை தவறிய தேசங்கள் ஒரு போதும் செழித்ததில்லை, அதனால் தான் பாரதி சொல்கிறான் " ஆண்மை தவறேல்" .



 

Post Comment

Saturday, March 25, 2017

பாரதிச்சூடி-1

அச்சம் தவிர் !



எதிர்கொள்ளல் என்பதில் தான் எல்லாமுமே இருக்கிறது , நம்மை சார்ந்தவை , நாம் சார்ந்தவை , சந்திக்கும் நிகழ்வுகள் ,சிந்திக்கும் நினைவுகள் , எதிர்படும் உறவுகள், அது தரும் உணர்வுகள் என எல்லாமுமே

எதிர்கொள்ளுதல்  என்பதை எளிமையாய் எதிர்கொள்வதற்கான எளிய மந்திரம் "அச்சம் தவிர்" .

 அச்சம் என்பது survival instinct எனப்படும் உயிர் வாழ தேவையான அவசிய உணர்வு, இயற்கை ஆபத்துக்களில் இருந்தும், தீங்கில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளவே இந்த அச்சம் என்கிற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது, ஆனால் பல சமயங்களில் பலரிடத்தில் தற்காக்க உதவ வேண்டிய அச்சம் நம்மை முன்னேற விடாமல் முடக்கிவிட முயல்கிறது.

பயம் என்பது மேல்மனம் சார்ந்தது, அச்சம் என்பது ஆழ்மனம் சார்ந்தது.அச்ச உணர்வு உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது. உயிரை காத்துக்கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் உபாயம் அச்சம், அதனால் தான் அச்சம் ஏற்படும் போது இதயம் அதிக ரத்த ஓட்டத்தை நிகழ்த்த இதயத்தை வேகப்படுத்தி துடிப்பை அதிகம் செய்கிறது. அச்சத்தை அடுத்து நாம் இயங்க வேண்டுமாயின் , அந்த ஆபத்திலிருந்து தப்ப வேண்டுமாயின் அச்ச உணர்வை அதன் பின் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

பாரதியின் வார்த்தை சாதூர்யத்தை கவனியுங்கள் அச்சத்தை ஒழி என்று அவன் சொல்லவில்லை , அச்சம் தவிர் என்கிறான், அது வரத்தான் செய்யும் ,இயற்கை உணர்வு , ஆழ்மன பதிவு அச்சத்தை அழிப்பதென்பது இயலாது, அது தவறானதும் கூட ஆகவே தான் அது வந்த பின் அதை தவிர் என்கிறான்.

அச்சம் என்கிற உணர்வு இல்லாத ஒன்றை இருப்பதாக நினக்கிறபோது அல்லது இருக்கிற ஒன்றை இல்லாமல் போய்விடுமோ என்று நினைக்கிற போது உருவாகிறது. அச்சம் உடலியல் சார்ந்த தற்காப்பு உணர்வு தான் ஆனால் அது கடந்த கால நிகழ்வுகளின் பதிவுகள் மற்றும் எதிர்கால கற்பனைகளால் ஆனது. ஆக அது 90 சதவீதம் மனம் சார்ந்த உணர்வு எனவே அதை தவிர்த்தல் மனம் வைத்தால் சாத்தியமானதே!

அச்சம் தவிர் என்று அவன் சொல்வது , அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்கிற condition apply குறியீட்டோடுதான் :) .  நெருப்பு சுடும் , சுடத்தான் செய்யும் அறிவேன் அதை நான் தொடுவேன் என்பது அறியாமை. அச்சம் தவிர் என்பது நம் எதிர்கொள்ளும் வலிமையை அதிகப்படுத்துவதற்கானது, அதிக பிரசங்கித்தனங்களுக்காக அல்ல .

விமானம் கீழே விழுந்தால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற அச்சத்தின் விளைவு தான் பாராசூட் என்ற உயிர்காக்கும் உபாயம். காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல் , என்றொரு பாடல் வரி உண்டு. அச்சம் அவசியம் ஆனால் அதன் பின் நாம் செயல்பட்டாக வேண்டும், முன்னேறியாக வேண்டும் , நம் செயலை இந்த அச்சம் என்கிற உணர்வால்   முடக்கவிடுவது முட்டாள்த்தனம்.

அச்சம் வரும் ,வரத்தான் செய்யும் வந்தபின் மனதிற்குள் சொல்லிக்கொள்வோம், "அச்சமில்லை அச்சமில்லை  !!" மனம் நம்பும் , அச்சம் விலகும் , செயல்படுவோம், வெற்றிகொள்வோம் .

 

Post Comment

Friday, March 24, 2017

பாரதிச்சூடி

பாரதிச்சூடி:

காப்பு:

பரம்பொருள் வாழ்த்து
-----------------------------------------------------------------
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


காப்பு விளக்கம்: ( விளக்கம் எழுதத்துணியும் என்னை பாரதி மன்னிப்பானாக)

-------------------------------------------------------------------------------------------------

பிறை நிலா சூடி மோன நிலையில் தியானித்திருக்கும் சாம்பல் மேனியான் (சிவன்)

பாற்கடலில் படுத்திருக்கும் கருனிறத்தான்(திருமால்)

மகமது நபிக்கு வேதம் உரைத்தவன் (அல்லா)

ஏசுவின் தந்தை (பரமபிதா)

மதங்கள் பலவொடு உருவகம் பலவென (பலரால் )உணரப்படாத,பலவென பரவிடும் பரம் பொருள்  ஒன்றே !

அதன் இயல்பு சுடர்மிகு அறிவு !
அந்த நிலை கண்டவர்கள் அல்லல் அகற்றினர்.(தம் அல்லலையும்,பிறர் அல்லலையும்)

அதன் அருளை வாழ்த்தி அழியா வாழ்வினை அடைவோம் !

-----------------------------------------------------------------------------------------------------

: ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு விதமாய் , ஒவ்வொரு பெயரில் ஒன்றென அறியாது, ஒன்றென உணராது வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒன்றே! சுடர்மிகு அறிவே அதன் இயல்பு, இறை இயல்பாம் அவ்வறிவை அறிந்தவர்க்கு அல்லல் இல்லை ! அந்த இறையின் அருளை வாழ்த்தி அழிவிலா அமர வாழ்வு அடைவோம்.

 

Post Comment

பாரதிச்சூடி

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி:

பாரதியின் வார்த்தைகள் மீது அவன் வாழ்ந்த வாழ்க்கையின் மீது எனக்கு எப்போதும் தீராக்காதல் உண்டு, தமிழுக்கு புதிய வார்த்தைகளை கொடுத்தவன் பாரதி., காட்சிப்பிழை (எனக்கு மிகப்பிடித்த பாரதிவார்த்தை :) ) , பேசும்பொற்சித்திரம் ,அக்கினிக்குஞ்சு (நெருப்பை பறவையாக உருவகித்திருக்கும் அவன் சொல்லாண்மை ) அவன் படைப்பு கடலுக்குள் மூழ்கினால்  இன்னும் இதுபோல நிறைய முத்தெடுக்கலாம்.

அவன் ஆத்திச்சூடி ஒன்று எழுதியுள்ளான்,அவ்வையின் ஆத்திச்சூடிக்கு  எதிர்வீட்டில் குடிவைக்கலாம் அதை :) அவள் அறம் செய விரும்பு என்கிறாள்,இவன் ஊன் மிக விரும்பு என்கிறான், அவள் ஆறுவது சினமென ஆற்றுப்படுத்துகிறாள், இவன் அச்சம் தவிர், ரவுத்திரம் பழகு என ஊற்றுப்படுத்துகிறான் .

அவ்வையின் வாக்கு அக்கால மாந்தருக்கு , பாரதியின் வாக்கு இக்கால மாந்தருக்கு, அவ்வையின் ஆத்திச்சூடி out of date ஆகியது கண்டு அதை update செய்தவனாக நான் பாரதியை காண்கிறேன்.

பாரதி ஆத்திச்சூடி  ஒன்றே போதும் வாழ்வியல் கற்க . சர்வநிச்சயமாய் சொல்வேன் , வாழ்வியல் கற்க கட்டுக்கட்டான கட்டை புத்தகங்கள் , தலையணை அளவு புத்தகங்கள், மணிக்கணக்கான பிரசங்கங்கள், சாமியார் அறிவுரைகள் தேவையில்லை. ஒற்றை பாரதி போதும், அக்கினிக்குஞ்சுகளை பிரசவிக்கும் அக்கினிப்பறவை அவன், முட்டைகளுக்குள் இருக்கும் நம்மை அடைகாத்து உயிர்செய்யும் கனல் அவன் வார்த்தைகள். வாருங்கள், நாளொரு பாட்டாய் அவன் ஆத்திச்சூடிக்கு புதுப்பொருள் கற்போம், நம் பாட்டன் பாரதி கற்றுக்கொடுத்த வாழ்வியலை கற்போம்.

காப்பு - பரம்பொருள் வாழ்த்து
-----------------------------------------------------------------
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

அறிவே தெய்வமென காப்பு சொல்லி கரம்கூப்பி ஆரம்பிக்கிறான்.


குறிப்பு: பாரதியார் பாடல்களுக்கு பொருளுரை சொல்வது மடத்தனம் என அறிந்தும் மாய மனமென்னை எழுதப்பணிக்கிறது .இந்த பொருளுரை இக்கால சந்ததியினருக்கு அவசியம் என ஆறுதல் சொல்கிறது.

தினம் ஒரு ஆத்திச்சூடியும் அது சார்ந்த என் பார்வையும் இந்த blog- ல் இடம்பெறும். வார்த்தைகளை நீட்டி முழக்காமல் முடிந்த வரை microblogging ரகத்தில் சிற்சில வார்த்தைகளில் சொல்ல வேண்டும் :)

பாரதி காப்பு : அறிவேதுணை

 

Post Comment

Monday, February 06, 2017

"சகிக்கல" ஆட்சியில் தமிழகம்...


அன்பார்ந்த தமிழினமே!

நக்கலும் நையாண்டியுமாக பேசிச்செல்வதிலும்,பேஸ்புக்கில் கமென்ட் இடுவதிலும்,மீம்ஸ்,வீடியோ என காமெடி செய்து பகிர்வதிலும்,ரசிப்பதிலும் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நிகரென இந்திய தேசத்தின் எந்த மாநிலத்தவரும் இல்லை, உலகின் எந்த நாட்டினரும் இல்லை என சர்வ நிச்சயமாக நம்புகிறேன்.

"இடுக்கன் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வதஃதொப்ப தில்"

என்ற அய்யனின் வாக்குப்படி செயல்படுகிறோமா , இல்லை இது இப்படித்தான் என சர்வசாதரணமாக எடுத்துக்கொண்டு நகரும் வகைக்கு மரத்துப்போன மனிதர்களாக ஆக்கப்பட்டு விட்டோமா !

"பீட்டாவை தடை செய்" "ஜல்லிக்கட்டு வேண்டும்" என கொதித்தெழுந்த சிங்கத் தமிழினமே , புரட்சிக்கு புதிய இலக்கணம் செய்து அறப்போராட்டமாக ஆர்ப்பாட்டம் செய்த வீரத் தழினினமே ! இலங்கையில் நம்மவரை சித்திரவதை செய்தபோது சேர்ந்தழுத அன்புத் தமிழினமே !

உரிமைகள் பறிக்கப்பட்டது குரல் கொடுத்தோம், உண்மைகள் மறுக்கப்பட்டது குரல் கொடுத்தோம். இது குரல் கொடுப்பதற்கான நேரம் என நம்புகிறேன்,உண்மைக்காக ,உரிமைக்காக உரக்கக் குரல் கொடுப்போம் என நம்புகிறேன்.

உலகின் அறிவார்ந்த இனம் என அறியப்பட்ட இனம், அறியப்பட்டுக்கொண்டிருக்கும் இனம் ஆள்வதற்கு ஆளின்றி நிராதராவாக நின்றுகொண்டிருக்கிறது.

வெட்கம்,வேதனை,வருத்தம்

மக்களால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிக்குப்பெயர் தான் மக்களாட்சியாம். எம் மக்கள் ஒட்டுமொத்தமாக வேண்டாமென சேர்ந்தொதுக்கும் ஆட்சி எப்படி எங்களுக்கு மக்களாட்சி ஆகும்.

எண்ணம் தான் புரட்சியின் விதை, ஒரே எண்ணம் ஒன்றுபோலான எண்ணம்,ஒன்றுபட்ட எண்ணம். நாம் எண்ணத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என நம்புகிறேன், ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் நம்புகிறேன்.

பேஸ்புக்கும், வாட்சப்பும் அமெரிக்க சந்தைப்பொருட்கள் தான், ஆனால் அவை கருத்துப்பறிமாற்றத்திற்கான சமூக வலைத்தளங்கள்., இவற்றைக்கொண்டு என்ன செய்துவிட முடியும் நக்கலும்,நையாண்டியும் செய்து மீம்ஸ்சும்,வீடியோக்களும் உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடியும், ஸ்டேட்டஸ் போட்டு , செல்பி எடுத்து லைக்குகள் வாங்க முடியும், பொழுதுபோக்க முடியும் ,அதே சமயம் , சமூகத்தின் அவலங்களை அடித்துநொறுக்கி அதை பழுதும் பார்க்க முடியும்.ஒத்த கருத்துடைய நபர்களை ஒன்றிணைத்துப் புரட்சியும் செய்ய முடியும்.

சமீபத்தில் (2011 ல்) எகிப்தின் துனீஷிய தேசத்திலே சர்வதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெகுண்டெழ காரணமாக இருந்த விதை யூட்யூபில் பதியப்பட்டு,பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒற்றை வீடியோ தான் . மக்களை ஒன்றினைத்து புரட்சி செய்ய துணையாய் நின்றது பேஸ்புக் தான்.

அறிவார்ந்த தமிழினமே ! எதை செய்தால் மாற்றம் சாத்தியமோ அதை செய்ய துணிந்தெழு. சிரித்துவிட்டு நகர்வதிலும்,அழுது புலம்புவதிலும் பயனில்லை,பலனில்லை.

மீம்ஸ்களும் ,ஸ்டேட்டஸ்களும் தவறில்லை, நக்கல்,நையாண்டி,காமெடி என்பதையும் தாண்டி உன் அறிவை பட்டைத்தீட்டு ,மாற்றம் சித்திக்கும் என மனதாற நம்பு., ஒன்றுபட்ட மனங்களை ஒன்று திரட்டு ஒன்றாய் போராடுவோம் !

இது மக்களாட்சி, நம் தேசம் ஜனநாயக தேசம், என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என தீர்மாணி, அறிவையையும் உணர்வையும் சரியாக கையாண்டு தீர்வு கொள் !

 

Post Comment